Thursday, August 27, 2015

அணைந்து போன திரி

என் பெயர் வெரோணிக்கா!

நீங்கள் நாளைய நற்செய்தியில் (காண். மத்தேயு 25:1-13) வாசிக்கும்

பத்துக்கன்னியர் உவமையில் வரும் ஒரு கன்னி நான்!

நேற்று காலை என்னுடன் தையல் படிக்கும் சாரா என்னைத் தேடி ஓடி வந்தாள்!

'ஏய்! வெரோ! எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணுவியா?'

'என்ன?'

'நாளைக்கு ஒரு திருமண நிகழ்வு. மணமகன் தோழியராய் பத்து பேர் வேண்டுமாம். ஒன்பது பேர் ஏற்பாடு செய்தாயிற்று. இன்னும் ஒரு ஆள் வேணும்! நீயும் வாடி...ப்ளீஸ்...!'

'நீ வந்தா நானும் வர்றேன்!'

'ஆமாம்! நானுந்தான்!'

மாலையில் திருமணம் என்பதால், 'கையில் விளக்கு எடுத்துக்கொண்டு போ!' என்று சொன்னாள் என் அம்மா.

விளக்கை அவசர அவசரமாக துடைத்தேன்.
திறந்து பார்த்தேன். எண்ணெய் ஆழத்தில் சொட்டு சொட்டாய்த் தெரிந்தது.

கல்லைப் போட்டு அதை மேலே கொண்டு வர நான் என்ன காக்காவா?

என் வீட்டில் எரிந்து கொண்டிருந்த விளக்கின் திரி அணையாமல் மெல்ல சாய்த்து

அதில் உள்ள கொஞ்ச எண்ணெயை என் விளக்கில் ஊற்றிக்கொண்டேன்.

சாராவுடன் சேர்ந்து திருமண மண்டபத்திற்குச் சென்றேன்.

'என்னடி சாரா? விளக்குடன் சேர்த்து ஏதோ கையில் டப்பா?' என்றேன்.

'எக்ஸ்ட்ரா எண்ணெய் கொஞ்சம் எடுத்துக்கொண்டேன்! எதுக்கும் பயன்படும்ல!'

'இருக்கப்பட்டவள் நீ எடுத்துக்கொண்டாய்! இல்லாதவள் நான் என்ன செய்ய?' என் மனதுக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன்.

காத்திருந்தோம். காத்திருந்தோம். மணமகன் வந்தபாடில்லை.

என் கண்களில் தூக்கக் கலக்கம். எப்பொழுது தூங்கிப் போனேன் என்று தெரியவில்லை.

'மணமகன் வருகிறார்!' 'மணமகன் வருகிறார்!' என்ற சத்தம் கேட்டு எல்லாரும் எழுந்தோம்.

விளக்குகளைப் பார்த்தால் விளக்குகள் இப்போவா, பிறகா என்று கண்சிமிட்டிக் கொண்டிருந்தன.

'இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றினால்தான் நன்றாக எரியும். ஆனால் இந்த எண்ணெய்க்கே நான் பட்ட பாடு எனக்குதான் தெரியும்!'

சாராவைப்போலவே டப்பாவில் எண்ணெய் கொண்டுவந்த இருக்கப்பெற்றவர்கள் தங்கள் விளக்குகளுக்கு உயிர் கொடுத்தார்கள்!

'சாரா! எனக்கும் கொஞ்சம் எண்ணெய் கொடு!' என்றேன்.

'ஐயயோ! அப்போ எனக்கு இல்லாம போச்சுனா! நீ போய் கடையில் வாங்கிக்கோ!'

'கடையில் வாங்கிக்கவா? காசிருந்தால்தானடி கடைக்குப் போவேன்!'

என்னைப்போலவே கையில் எண்ணெய் இல்லாத - ஆனால் கையில் காசு இருந்த - மற்ற நான்கு பேர் கடைக்கு வேகமாக ஓடினர்.

மணமகன் வந்துவிட்டார்! இதோ என் கண்முன் அவர்!

விளக்குகள் ஏந்திக்கொண்டிருந்த ஐந்து பேரைக் கண்டுகொள்ளாமல் வேகமாக என்னிடம் வந்தார்.

'ஐயோ! என்னை வசைபாடப் போகிறார்!' என நினைத்துக்கொண்டு சாராவின் முதுகிற்குப் பின் ஒதுங்கினேன்.

என் தோளைத் தொட்டார்.

'என் அருகில் வா!' என்றார்.
'நீயே என் மணவாட்டி!' என்றாள்.

என் கையை நானே கிள்ளிப் பார்த்துக்கொண்டேன்.

'இது கனவா? இல்லை! கிள்ளினால் வலிக்கிறதே!'

திருமண மண்டபத்திற்கு தோழியாய்ச் சென்றவளுக்கு மணவாட்டி பாக்கியம் கிடைத்தது.

நிற்க...

இயேசுவின் பத்துக் கன்னியர் உவமையில் முன்மதியில்லாத ஐந்து கன்னியர் வெளியே அனுப்பப்பட்டதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை.

ஏன்?

தவறு அவர்கள்மேல் அல்லர்! பின் யார்மேல்?

முன்மதியோடு எண்ணெய் கொண்டுவந்த ஐந்துபேர் மேலும்!

மணமகன் மேலும்!

எதற்காக?

முன்மதியோடு எண்ணெய் கொண்டுவந்தவர்கள் இன்றைய முதல் உலக நாடுகள் போல. முன்மதி என்ற பெயரில் அடுத்தவர்களுக்கு உரியதையும் தங்களுக்குச் சொந்தமாக்கிக்கொள்வர். இந்த மாதம் 13ஆம் தேதி பூமியின் 'இலக்க கடந்த நாள்' என்று கடைப்பிடிக்கப்பட்டது. அதாவது, இந்த வருடம் முழுவதும் நாம் செலவழிக்க வேண்டியதை நான்கு மாதங்களுக்கு முன்னே சுரண்டி முடித்துவிட்டோம்.

'பின் தேவைப்படும்!' என்று நான் சேகரித்து வைப்பதும் எதுவும் முன்மதி அல்ல. சுயநலமே!

இந்த சுயநலம்தான் அந்த ஐந்துபேர் தங்கள் எண்ணெயைப் பகிர்ந்து கொள்ள தடுக்கிறது.

இரண்டாவதாக, மணமகனின் காலதாமதம். வழக்கமாக திருமண இல்லங்களில் மணமகள் வருகைதான் தாமதமாக இருக்கும். ஆனால், இங்கு நேரந்தவறுகிறார் மணமகன். இந்த மணமகனால் பாவம் ஐந்து பேர் பாதிக்கப்படுகின்றனர்.

நாளை நாம் கொண்டாடும் அகுஸ்தினார் இந்த வெளியனுப்பப்பட்ட ஐந்து பேரில்தான் ஒருவர் என நினைக்கிறேன்.

ஏனெனில், 'பின்பு பயன்படும்!' என அகுஸ்தினார் தனக்கென எந்த புண்ணியங்களையும் சேர்த்து வைக்கவில்லை.

மேலும் கடவுளை, 'தாமதமாக நான் உன்னை அன்பு செய்தேன்!' என்கிறார். ஆக, இவரின் வாழ்விற்குள் மணமகனின் வருகையும் தாமதமாகவே இருந்தது.

மணமகன் வந்தபோது அணைந்து போன திரியோடும், காய்ந்து போன விளக்கோடும்தான் நின்றுகொண்டிருந்தார் அகுஸ்தினார்.

அவரைத் தன் மார்போடு அணைத்துக்கொண்டார் இந்த மணமகன்.

இன்று நம் வாழ்விலும் திரிகள் அணைந்தால், விளக்கு காய்ந்து போனால், நான் ஒரு புண்ணியமும் செய்யவில்லையே என வருத்தம் மேவினால் தளர்ந்து போக வேண்டாம். ஏனெனில் நாம் இருப்பதுபோல் நம்மை ஏற்றுக்கொள்வார் அந்த மணமகன்!

'உன்னை மிகத் தாமதமாக அன்பு செய்தேன்.
என் அன்பே!
என்றும் பழமையான, என்றும் புதுமையான அழகே!
உன்னை மிகத் தாமதமாக நான் அன்பு செய்தேன்.
நீ என்னுள்ளே இருந்தாய்.
ஆனால் நான் வெளியே இருந்தேன்.
அங்கே நான் உன்னைத் தேடி அலைந்தேன்.
என் அன்பில்லா நிலையில் நீ படைத்தவற்றை நான் அன்பு செய்து கிடந்தேன்.
நீ என்னோடு இருந்தாய்.
ஆனால் நான் உன்னோடு இல்லை.
நீ படைத்தவைகள் படைத்த உன்னிடமிருந்து என்னைத் தூர நிற்க வைத்தன.
ஆனால் அவைகள் என்றும் உன்னுடையவைதாமே!
நீ அழைத்தாய்! கத்தினாய்! உன் குரல் என் செவிட்டுக் காதுகளைக் கிழித்தது.
நீ மிளிர்ந்தாய்! மின்னினாய்! உன் வெளிச்சம் என் குருட்டுக் கண்களுக்கு ஒளி தந்தது!
நீ உன் நறுமணத்தை என்மேல் ஊதினாய்!
உன்னை சுவாசித்த நான் உனக்காக ஏங்கித் தவிக்கிறேன்.
உன்னை சுவைத்த நான் உனக்காக நான் பசித்திருக்கிறேன்.
உன்மேல் தாகமாயிருக்கிறேன்.
நீ என்னைத் தொட்டாய்.
நான் உன் அமைதியால் பற்றி எரிந்தேன்!'

(அகுஸ்தினார், 'உள்ளக்கிடக்கைகள்', பிரிவு 10. எண். 27)


2 comments:

  1. நமது கிறிஸ்தவ வாழ்க்கை விண்ணக விருந்திற்கான தயாரிப்பு காலம். அந்த விருந்தில் பங்கு கொள்வது தான், மகிழ்ச்சியின் உச்சகட்டம். அந்த விருந்தில் பங்குகொள்ள நம்மையே நல்ல முறையில் தயாரிக்க வேண்டும். அப்படி தகுந்த தயாரிப்பு இல்லையென்றால், அந்த விண்ணக விருந்தை இழந்துவிடுவோம். அதற்கு பிறகு வருந்தி ஒன்றும் பயனில்லை.ஆனால் அந்த விருந்தை மிக தாமதமாக தாய் கண்ணீரின் மூலம் பெற்றவர் தான் புனிதர் அகுஸ்தினார்.தந்தை கூறுவது போல நம் வாழ்கையில் எண்ணெய் இல்லை என்றாலும் திரி அணைந்து போனாலும் நம்மை கடவுள் கண்டிப்பாக விண்ணக விருந்திற்கு என்றாவது ஒரு நாள் கண்டிப்பாக நம்மை அழைத்து செல்வார் என்று விசுவசிப்போம்.தந்தைக்கு நன்றிகள்! பல! பல!

    ReplyDelete
  2. புனித அகுஸ்தினார்...தாயைப்போலவே தனயனும் என்னைக் கவர்ந்தவர்.இறைவனின் ஓரவஞ்சனைக்கு இனிமையான ஒரு எடுத்துக்காட்டு.வாழ்நாளில் பாதியைத் தாயின் கண்ணீரிலும்,தப்பறைக்கொள்கைகளிலுமே கழித்தவர். இறைவனை லேட்டாக நேசிக்க ஆரம்பித்து லேட்டஸ்ட்டாக மாறியவர். இன்று திருச்சபையின் தூணாக,ஆலமரமாக்க் கருதப்படுபவர்.இவர் வழியில் நிற்கும் அனைத்து அருட்பணியாளர்களுக்கும் என் வணக்களையும், வாழ்த்துக்களையும் காணிக்கையாக்குகிறேன். தவறி விழும் நேரங்களைப்பற்றிக் கவலைப்படாமல் மீண்டும் எழுந்து நில்லுங்கள்.அகுஸ்தினாரைத் தாங்கிப்பிடித்த இறைவனின் இரக்கம் மிகு கரங்கள் உங்களையும் தாங்கி நிற்கட்டும். நீங்கள் தான் வருங்காலத் திருச்சபையின் தூண்கள் என்பதை மறந்துவிடாதீர்கள். அனைவருக்கும் என் வாழ்த்துக்களும்,செபங்களும்.தந்தையின் நவீன " பத்துக்கன்னியர்" உவமை இரசிக்கும்படி இருந்தது.வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete