Friday, August 14, 2015

சுதந்திரமும், விண்ணேற்பும்

(இது மறையுரைச் சிந்தனை அல்ல!)

நாளை நம் இந்தியாவின் சுதந்திர தினப் பெருவிழா.

நாளை நம் அன்னை மரியாளின் விண்ணேற்புப் பெருவிழா.

'இரண்டிலுமே எனக்கு நம்பிக்கை இல்லை!'

- இப்படி ஒற்றை வரியில் சிந்தனையை முடித்துவிட முடியுமா என்ன?

'விடுதலை நாள்' என்று தூய தமிழில் சொல்லும்போது ஏதோ சிறைக்கைதி விடுதலை ஆனதை நாளிதழில் வாசிப்பது போல இருக்கிறது. ஆகவே, சுதந்திர தினம் என்றே வைத்துக்கொள்வோம்.

'சுதந்திரமாகப் பிறக்கும் மனிதன், தன் வாழ்நாளெல்லாம் அடிமையாக இருக்கிறான்' ('சங்கிலியால் கட்டப்பட்டிருக்கிறான்' என்பது நேரடி மொழிபெயர்ப்பு) என்கிறார் ரூசோ.

'நான் ஒரு இந்தியன்!' என்று சொல்கிறோமே. இதன் பொருள் என்ன? ஒட்டுமொத்த இந்தியாவை நான் பிரதிபலிக்கிறேன். இந்த இந்தியா என்ற பெரிய நிலப்பரப்பின், ஒரு குட்டி நிலப்பரப்பில் ஒரு தந்தைக்கும், தாய்க்கும் மகனாகப் பிறந்த, அவர்களின் மொழியை என் தாய்மொழியாக, அவர்களின் சாதியை என் சாதியாக, அவர்களின் மதத்தை என் மதமாக, அவர்களின் உணவுப் பழக்கத்தை என் உணவுப் பழக்கமாக, அவர்களின் சொந்தங்களை என் சொந்தங்களாக ஏற்றுக்கொண்டு '0' ஆண்டிலிருந்து, '60' அல்லது '70' அல்லது '80' ஆண்டுகள் வாழும் உயிர்கொண்ட ஒரு உடல்தான் இந்த இந்தியன்.

ஆக, ஒரு குழந்தை பிறந்தவுடன், அது சுதந்திரமாகப் பிறந்தாலும், அது விரும்பாத மொழி, இனம், சாதி, உணவுப் பழக்கம், சொந்தம் எல்லாம் அதைப் பிணைத்து விடுகிறது. அதிலிருந்து அது விடுபட முடியாது. தன்மேல் சுமத்தப்பட்ட இவைகள் அனைத்தையும் கொஞ்சம், கொஞ்சமாக ஏற்றுக்கொள்ள அது பழகிவிடுகிறது. இப்படிப் பழகிக்கொள்ள வேண்டும் என்ற சமூகமும் சொல்கிறது.

இன்று நாம் சுதந்திரம் வாங்கிவிட்டோம்! அப்படித்தானே!

1945ஆம் ஆண்டு கோமாவில் விழுந்த ஒருவர் இன்று திடீரென எழுந்துவிட்டார் என வைத்துக்கொள்வோம். அவரை நம் நகருக்குள் கூட்டிச் சென்றால் சுதந்திரத்தைப் பற்றி என்ன சொல்வார்?

நான் உண்ணும் உணவு மேக்டொனால்ட்ஸ்!

நான் குடிக்கும் பானம் கோ-கோ கோலா!

நான் அணியும் ஆடை பார்க் அவென்யு!

நான் குடிக்கும் மது ஜானி வாக்கர்!

நான் பிடிக்கும் புகை மர்ல்பரோ!

என் சட்டைப் பைக்குள் ஆன்ட்ராய்ட் அல்லது ஐஓஎஸ்!

என் கண்முன் சாம்சங்!

என் காதுகளில் சோனி!

என் காலுக்குக் கீழ் இன்ப்ளு!

என் வீட்டுக்கு வெளியே ஜாக்வார்!

என் பக்கத்து வீட்டில் என்னோடு இருந்தவர் எங்கே!

'நன்றாகப் படித்ததால் மேற்படிப்பு முடித்துவிட்டு

வேலை பார்க்க அமெரிக்கா போய்விட்டார்!'

வெள்ளைக்காரர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்றுவிட்டாலும், வெள்ளை மோகம் இன்னும் விட்டபாடில்லை (எனக்கும்தான்!).

இப்படியெல்லாம் இருப்பதற்கு 'உலகமயமாக்கல்' என்ற ஒரு பெயர்.

'வெளக்கமாத்துக்குப் பேரு பட்டுக்குஞ்சமாம்!'னு ஊருல சொல்வாங்கல, அது மாதிரி!

நாம் சுதந்திரம் பெற்றதே நமக்கு ஆகஸ்ட் 15 அன்றுதான் நினைவிற்கு வருகிறது. அடுத்தநாள் மறுபடியும் விடிய, அப்படியே வாழ்க்கை தொடர்கிறது.

சரி! என்னதான் செய்ய?

ஒன்னும் செய்ய வேண்டாம்!

எதுக்குங்க டென்ஷனாகி நம்ம ப்ரஷர் கூட்டிக்கணும்! நாளைக்கு ஒருநாள்தான் லீவு. லேட்டா எந்திரிச்சி, காஃபி குடிச்சுகிட்டே ஜார்ஜ் கோட்டையில் ஜெயா ஏற்றும் கொடியையும், குண்டு துளைக்காத கண்ணாடிக்குப் பின் டில்லியில் மோடி ஆற்றும் உரையையும் பாதிப் பாதி பார்த்துவிட்டு, விஜய் டிவியில், 'இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக 'காக்கா முட்டையாம்''. அதையும் பார்த்துவிட்டு, அப்படியே மதிய கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துவிட்டு, அடுத்த வாரம் என்ன வேலை செய்யணும் என்று யோசிப்போம். நாடு சுதந்திரம் வாங்கினாலும், நம்ம வயித்துக்கு நாமதான உழைக்கணும்!

வாழ்க சுதந்திரம்!

இந்த சுதந்திரத்திற்கான பொருளைத் தருபவர் அன்னை மரியாள்.

அதாவது ஒரு குட்டி ஊரில் பிறந்தாலும், அவருக்கென்று இனம், மொழி, சொந்தம் இருந்தாலும், இன்று எல்லாவற்றையும் கடந்து விண்ணேறி நிற்கிறார்.

இதுதான் சுதந்திரம்!

ஒரு குறிப்பிட்ட குட்டி வட்டத்துக்குள் பிறந்தாலும், அந்த வட்டத்தை விட்டு வெளியேறுவதுதான் சுதந்திரம்!

அவங்க சொன்னது ஒரே ஒரு 'ஆம்!' என்ற வார்த்தைதான். எல்லாமே மாறிடுச்சு.

இன்று நாமலும் ஏதாவது ஒன்றுக்கு 'ஆம்!' என்று சொல்லி அதில் உறுதியாயிருந்தால் போதும் சுதந்திரக் காற்றை நாமும் சுவாசிக்கலாம்.

இனிய சுதந்திர தின மற்றும் அன்னையின் விண்ணேற்புதின வாழ்த்துக்களும், செபங்களும்!

நம்பிக்கை உள்ள ஒருவருக்கு மட்டுமே சுதந்திரமும், விண்ணேற்பும் பொருள்தர முடியும்!

எனக்கு இருக்கு நம்பிக்கை!


3 comments:

  1. இன்றைய இளைய சமுதாயத்திற்கு"உலகமயமாக்கலை" பற்றி தெள்ள தெளிவாக கூறிய பாச தந்தைக்கு என் மனமார்ந்த நன்றிகள்.நீங்கள் நத்தம்பட்டி குட்டி ஏசு கலாம் என்றால் சாலச்சிறந்தது . உங்களுக்கு எனது மரியாளின் விண்ணேற்பு திருவிழா மற்றும் சுதந்திர தின வாழ்த்துக்கள் .ஜெய்ஹிந்த்!

    ReplyDelete
  2. தந்தையே! மனத்தில் புகைந்து கொண்டிருந்த அத்தனையையும் கொட்டித்தீர்த்து விட்டீர்கள்! நம்முடைய மேல்தட்டு வர்க்கத்தின் மோகத்தை 70 வருடங்கள் கோமாவிலிருந்த மனிதரின் உணர்வுகளாய் வெளியுட்டுள்ளீர்கள்.ஆம்... நம்மைச்சுற்றி சற்று திரும்பிப் பார்த்தால் விரக்தியில் வெள்ளைக்காரனே நம்மை ஆண்டிருக்கலாமே என நினைக்கத் தோன்றுகிறது.சரி நம்மால் இயலாத ஒன்றைப்பற்றிப் பேசிப்பயனில்லை.குட்டி ஊரில் பிறந்தாலும் இனம்,மொழி அனைத்தையும் கடந்து வெளியே வந்த நம் அன்னை நமக்குப் பெற்றுத்தந்த 'சுதந்திரம்'பற்றிப் பேசுவோம்.'உம் வார்த்தைப்படியே அனைத்தும் நிகழட்டும்' எனக்கூறி நம் சுதந்திரத்தைத் தக்க வைக்க முயல்வோம்.தந்தை உட்பட அனைவருக்கும் 'சுதந்திர தின மற்றும் மரியாளின் விண்ணேற்பு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. இன்று நீங்கள் ரோமையில் இருந்தாலும் நீங்கள் உண்மையிலேயே ஒரு இந்திய குடிமகன் என்பதை நிருபித்துவிட்டீர்கள்.இந்த இரு விழாக்களின் மூலம் நாம் ஒவ்வொருவரும் சுதந்திரமாக பிறருக்கு உதவி செய்யவும் , ஆறுதலாக இருக்கவும் வேண்டும் என்பதே எசு தந்தையின் விருப்பம்.அதையே நாம் செய்வோம்.கவலையின்றி என்றும் அகமகிழ்வுடன் வாழ்வோம்.வந்தே மாதரம்!

    ReplyDelete