Saturday, August 1, 2020

பன்னிரண்டு கூடைகள்

ஆண்டின் பொதுக்காலம் 18ஆம் ஞாயிறு

எசாயா 55:1-3 உரோமையர் 8:35,37-39 மத்தேயு 14:13-21

பன்னிரண்டு கூடைகள்

ஆண்டவரே,

அந்தப் பன்னிரண்டு கூடைகள் அப்பம் என்னவாயிற்று?

பன்னிரண்டு சீடர்களும் ஆளுக்கு ஒரு கூடை எடுத்துக்கொண்டு போய்விட்டார்களா? அல்லது

அவை மீண்டும் மக்களுக்கே பிரித்துக் கொடுக்கப்பட்டனவா?

'அனைவரும் வயிறார உண்டனரே'

- உண்டவர்களுக்கும், உண்டு நிறைவுபெற்றவர்களுக்கும் அக்கூடைகள் சுமைகள்தாமே?

பன்னிரண்டு கூடைகளின் அப்பங்கள், அங்கிருந்த ஆலயங்களுக்குக் கொடுக்கப்பட்டு, அவை அப்படியே பூட்டி வைக்கப்பட்டன என்று சொல்லலாமா? அல்லது

பன்னிரண்டு கூடைகளின் அப்பங்கள், அங்கிருந்த நாட்டின் கருவூலத்தில் சேர்க்கப்பட்டு, எலிகளுக்கு இரையாயின என்று சொல்லலாமா? அல்லது

எங்கள் நாட்டு அரசியல்வாதிகள் சொல்வதுபோல, பன்னிரண்டு கூடைகள் அப்பங்கள், எத்தனால் தயாரிக்கவும், தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் பயன்படும். அந்த எத்தனாலைக் கொண்டு தயாரிக்கப்படும் சானிடைஸர் கொண்டு மக்கள் தங்கள் கைகளைக் கழுவிக்கொள்ளலாமாம். வயிற்றைக் கழுவவே முடியாத நிலையில் சானிடைஸர் கொண்டு கைகள் கழுவினால் என்ன? கழுவாவிட்டால் என்ன?

நீர் அப்பங்களைப் பெருக்கிய நிகழ்வில் பங்கேற்றவர்கள் தங்கள் கைகளை சானிடைஸர் கொண்டு கழுவிக் கொண்டார்களா?

இன்றைய முதல் வாசகத்தில் (காண். எசா 55:1-3),

உம் தந்தையாகிய கடவுள், 'தாகமாய் இருப்பவர்களே, கையில் பணமில்லாதவர்களே வாருங்கள்!' என அழைக்கிறாhர். எங்களை அழைக்க யாருமில்லையே!

டிராஃபிக் சிக்னல்களிலும், பேருந்து நிறுத்தத்தின் நிழற்குடைகளிலும், இரயில் நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும், மர நிழல்களிலும் இன்றும் நாங்கள் நிற்கின்றோம், நடக்கின்றோம், கேட்கின்றோம். ஒன்றும் கிடைக்காமல் தூங்கிப் போகின்றோம். அந்தத் தூக்கத்திலிருந்து நாங்கள் எழுந்தவுடன் எங்கள் வாழ்க்கை மாறிவிடாது. நாங்கள் முந்தின நாள் எதிர்கொண்ட அதே சனியன்களை எதிர்கொள்ள வேண்டும்.

உம் வார்த்தையைக் கேட்டுக்கொண்டிருந்தவர்கள் பசியோடு வீடுதிரும்பக்கூடாது என்றீர்.

இதோ, நான் படுத்திருக்கும் இந்தச் சாலையில் உள்ள ஒரு ஆலயத்தில் மணிக்கொருமுறை உம் வார்த்தை ஒலிக்கிறது. ஆனால், நான் பசியோடுதான் தூங்கச் செல்கிறேன்.

என் பசியைப் பற்றி யாரும் எண்ணுவாரில்லை.

முகக் கவசம் அணிதல் பற்றியும்,

கைகளை மணிக்கொருமுறை கழுவுதல் பற்றியும்,

இரண்டு கஜ தொலைவு நிற்பது பற்றியும் எண்ணுகின்ற யாரும்

என்னைப் பற்றி எண்ணவில்லை.

அது என்ன ஆண்டவரே? 'கஜ தொலைவு'

யாருடைய மொழி இது?

பசியோடு மக்கள் பாடுபடும் இந்த நாள்களில்,

மும்மொழிப் படிப்புடன் கூடிய கல்விக் கொள்கை எதற்கு?

இடஒதுக்கீடு என்னும் கண்துடைப்பு எதற்கு?

மனிதர்களைப் பற்றிய தங்கள் அக்கறையை உதாசீனப்படுத்திவிட்டு, கடவுள் பற்றிய உரையாடல்கள் இங்கு எதற்கு?

இ.ஐ.ஏ. வரைவுத் திருத்தம் எதற்கு? எல்லாவற்றையும் அழித்துவிட்டு இரும்பைத் தின்று, கொஞ்சம் மீத்தேன் குடித்துக்கொள்ளவா?

எங்கள் நாட்டில், எங்கள் உலகில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை.

பேருந்தில் சென்றால் ஒட்டும் கொரோனா, ஒட்டுமொத்தமாக பைக் மற்றும் கார்களில், டிராஃபிக் சிக்னலில் குவிந்து கிடந்தால் ஒட்டாதா?

ஏழைகள் வெளியே வரக்கூடாது.

ஏழைகள் பயணம் செய்யக்கூடாது.

ஏழைகளுக்கென்று நல்லது, கெட்டது கிடையாது.

ஏன்? ஏழைகள் என்றால் அவர்கள் மனிதர்களே கிடையாது.

கொரோனா கண்டு பயந்தோம் முதலில்.

அந்தப் பயம், சில மாதங்களில், கொரோனா மேல் கோபமாக மாறியது.

அந்தக் கோபம், இப்போது விரக்தியாய் எங்கள் கண்களில் வழிகிறது.

எங்கும் செல்ல முடியவில்லை?

எதுவும் வாங்க முடியவில்லை?

காண்பவர் அனைவரும் கொரோனா தாங்கிகளாகத் தெரிகின்றனர்.

பாதி முகத்தை மறைத்தாயிற்று.

கண்கள் வழியாகவும் பரவும் என்று இன்னும் கொஞ்ச நாள்களில் சொல்லி, கண்களையும் மூடிவிடுவார்கள் என நினைக்கிறேன்.

எங்கள் குழந்தைகள் வீடுகளுக்குள் கிடந்து நம்பிக்கை இழக்கிறார்கள்.

எங்கள் இளைஞர்கள் எதிர்காலம் எதிர்நோக்கின்றி இருக்கிறது.

மாடுகள், பன்றிகள், கோழிகள் போல நாங்கள் எங்கள் கூட்டுக்குள்ளேயே எங்களை அடைத்துக்கொண்டோம்.

அங்குமிங்கும் ஓடி, அரிசி பருப்பு கொடுத்தவர்கள் எல்லாம் ஓய்ந்துவிட்டார்கள்.

அல்லது கொரோனாவில் மாய்ந்துவிட்டார்கள்.

கொடுப்பதற்கு அவர்களிடம் அட்சய பாத்திரமா இருக்கிறது?

அரசு என்னும் அட்சய பாத்திரம் தனக்குத் தானே பெருத்துக்கொண்டிருக்கிறது. தன்னைத் தானே விழுங்கும் பாம்பு போல அது தன்னையே அழித்துக்கொள்கிறது.

இதிகாச மனிதருக்குக் கோயில் கட்டினால் கொடிய நோயும் வராது என்ற மடைமையில்,

வேகமாக கோயில் பணிகள் வேறு.

எங்களை வீட்டிற்குள் இருக்கச் சொல்லிவிட்டு, வெளியே எங்கள் திண்ணைவரை அனைத்தும் விலை போய்க்கொண்டிருக்கின்றன.

உம் பரிவு எங்களுக்கு வேண்டாம் ஆண்டவரே!

நீர் எங்கள் வயிற்றை நிரப்ப வேண்டாம்!

நீர் உதவுவீர் என்ற எங்கள் நம்பிக்கை விளக்கு அணைந்துவிட்டது.

நாங்கள் எங்களையே காப்பாற்றிக் கொள்ள வேண்டாம்.

நீர் எங்களுக்கு வேண்டாம்!

அந்தப் பன்னிரண்டு கூடைகள் எங்கிருக்கின்றன என எங்களுக்குக் காட்டும்.

'ஆண்டவர் உங்கள் வயிறுகளை நிரப்புவார்' என்று எங்களால் ஒருவர் மற்றவருக்குச் சொல்ல முடியவில்லை.

அந்தக் கூடைகளைக் காட்டும். நாங்களே எடுத்துக்கொள்கிறோம்.

அல்லது அன்று எந்தக் கூடையும் மிஞ்சவில்லையா?

'12' என்ற எண் இறையியல் எண்ணா? நிறைவு எண்ணா? நற்செய்தியாளர்களின் கற்பனையா?

கூடைகள் மிஞ்சியது பொய் எனில்,

அவற்றின் எண்ணிக்கை பொய் எனில்,

அங்கிருந்தவர்கள் வயிறார உண்டதும் பொய்யா?

உம்முடைய பரிவும் பொய்யா?

உம் வார்த்தைகளும் பொய்யா?

பாபிலோனிய அடிமைத்தனத்தில் கிடந்த உம் மக்களுக்கு நீர் விருந்தை ஏற்பாடு செய்தீர்.

நாங்கள் உம் மக்கள் இல்லையா?

'கிறிஸ்துவின் அன்பிலிருந்து நம்மைப் பிரிக்கக் கூடியது எது?

வேதனையா? நெருக்கடியா? இன்னலா? பட்டினியா? ஆடையின்மையா? இடரா? சாவா?

எதுதான் நம்மைப் பிரிக்க முடியும்?'

என உம் திருத்தூதர் இரண்டாம் வாசகத்தில் (காண். உரோ 8:35,37-39) கேட்கின்றார்.

பிரிக்க முடியாத அன்பு உம்மோடு எங்களுக்கு இருக்கலாம் ஆண்டவரே!

ஆனால், அந்த அன்பு எங்கள் பசி தீர்க்குமா?

தடுப்பூசி வரும், மாத்திரை வரும், பழைய வாழ்க்கை திரும்பும் என்ற நம்பிக்கை குறையக் குறைய,

நாங்களும் மெதுவாக உம் மலையிலிருந்து இறங்க ஆரம்பிக்கின்றோம்.

பன்னிரண்டு கூடைகளைத் தேடி!

'உமது கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றும் நீர்' (பதிலுரைப் பாடல், திபா 145:16), எங்களை உயிரினமாகவும் மதிக்காதது ஏன்?

2 comments:

  1. தந்தைக்கு கொரோனா மேலிருந்த பயம்,கோபம், விரக்தி என ஆரம்பித்து, அங்கிங்கெனாதபடி அரசியல் வாதிகளைக் கேள்விகள் கேட்டு, அவர்களைச்சாடி, இறுதியில் இறைவனை நோக்கியே தன் சாட்டையை வீசுகிறார். நியாயமான கோபம்...நியாயமான விரக்தி.ஆனால் பாவம்! தந்தைக்குத்தெரியவில்லை...இது எல்லாமே ‘செவிடன் காதில் ஊதிய சங்கு’ என்று.”வயிற்றையே கழுவ முடியா நிலையில் சானிடைசர் கொண்டு கைகளைக் கழுவினால் என்ன? கழுவாவிட்டால் என்ன?” இதற்கு மேல் அரசியல்வாதிகளை நோக்கி வீசக் கற்கள் தேவையா, என்ன?

    தந்தையின் தெளிவான வார்த்தைகளும் ,நியாயமான கோபமும் நிறைந்த கேள்விகளுக்காக அவரைப்பாராட்டுவதா? இல்லை இது வரும்...அது வரும் என எதிர்பார்த்து,ஏமாந்து இறுதியில் இறைவனையே ( பன்னிரண்டு கூடைகள்)
    சரணடைகிறாரே....அந்த எளிமையைப் பாராட்டுவதா? எனக்குள் குழப்பம். அவருடன் சேர்ந்து “ உமது கையைத் திறந்து எல்லா உயிரினங்களின் விருப்பத்தையும் நிறைவேற்றும் நீர்” எங்களை உயிரினமாகவும் மதிக்காதது ஏன்? எனக் கேட்கத் தோன்றுகிறது....... ஆனால் கோபம் கலந்த உரிமையுடன்!

    என்ன எழுதிடினும்,எப்படி எழுதிடினும் வாசகரை ‘அட!ஆமால்ல!’ எனத்தலையாட்டவைக்கும் தந்தைக்கு என் வாழ்த்துக்களும்! ஞாயிறு வணக்கங்களும்!!!

    ReplyDelete
  2. ஏற்கனவே எங்களோட விசுவாசம் பிச்சிகிட்டு போவுது... நீங்களும் இப்பிடி பிரசங்கம் வையுங்க.... சிறப்பு...!!!

    ReplyDelete