Sunday, June 30, 2019

இறந்தோரைப் பற்றி

இன்றைய (01 ஜூலை 2019) நற்செய்தி (மத் 8:18-22)

இறந்தோரைப் பற்றி

'கடந்த காலத்தைப் பற்றி நாம் நினைக்கலாமா?' என்ற கேள்விக்கு நம்முடைய விடை மூன்று நிலைகளில் இருக்கிறது: (அ) 'கடந்த காலம்' நம்முடைய வேர். வேர் இல்லாமல் கிளை இல்லை. ஆக, எவ்வளவுதான் நாம் கிளை பரப்பினாலும் நம்முடைய வேரை மறந்துவிடக்கூடாது. ஆக, கடந்த காலத்தை எப்போதும் மனத்தில் வைத்திருக்க வேண்டும். (ஆ) கடந்த காலத்தை நினைக்க வேண்டும். அதற்காக மனத்தை அதிலேயே வைத்திருக்கக் கூடாது. முன்நோக்கிப் பார்த்து நடந்து முன்னேற வேண்டும். அதாவது, கார் ஓட்டுவது போல. பின்னால் வரும் அல்லது நாம் கடந்த வந்த பாதையை 'ரேர் மிரரில்' பார்க்கலாம். ஆனால், ரேர் மிரரை மட்டுமே பார்த்துக்கொண்டிருந்தால் நாம் முன்னால் மோதிவிடுவோம். ரேர் மிரரைப் பார்த்தும் பார்க்காமல் இருந்துகொண்டு, கண்முன் இருக்கும் பெரிய கண்ணாடி வழியாக வரவிருப்பதைப் பார்க்க வேண்டும். (இ) கடந்த காலத்தை முற்றிலும் மறந்துவிட வேண்டும். கடந்த காலம் நம்மைக் கட்டி வைக்கும் சங்கிலி. அதிலிருந்து விடுபடுவர் ஒருவரே மகிழ்ச்சியாளர். இதை கௌதம புத்தர் அதிகமாக வலியுறுத்துகின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசுவிடம் வருகின்ற மறைநூல் அறிஞர் ஒருவர், தான் இயேசுவைப் பின்பற்ற விரும்புவதாகச் சொல்கின்றார். அவரிடம் 'மானிட மகனுக்குத் தலைசாய்க்கவும் இடமில்லை' என்கிறார். இன்னொரு சீடர், 'நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டு வர அனுமதியும்' என்று சொல்ல, இயேசுவோ, 'நீர் என்னைப் பின்பற்றி வாரும். இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள்' என்கிறார்.

இயேசுவின் அறிவுரையை எப்படிப் புரிந்துகொள்வது?

'இறந்தவர்' என்பது 'கடந்த காலத்தின்' உருவகமா? அல்லது

'உறவு, உடைமை என்று இறந்து கிடப்போரைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். நீர் நுழையும் இறையாட்சி உறவில் இரத்த உறவும் இல்லை, திருமண உறவும் இல்லை' என்ற புதிய புரிதலா? அல்லது

'நடக்க வேண்டியது நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும். நீ இன்றை மட்டும் நினைத்து வாழ்!' என்பதா?

இன்றைய முதல் வாசகத்தை (தொநூ 18:16-33) நம் துணைக்கு அழைத்துக் கொள்வோம். ஆண்டவராகிய கடவுள் சோதோம் நகரை அழிக்க முடிவெடுக்கின்றார். ஏனெனில், அங்கே பாவம் பெருகிவிட்டது. தனது இத்திட்டத்தைக் கடவுள் ஆபிரகாமுக்கு வெளிப்படுத்துகின்றார். 'தீயவரோடு நீதிமான்களையும் சேர்த்து அழித்துவிடுவீரோ?' எனக் கேட்கின்ற ஆபிரகாம், ஐம்பது, நாற்பத்தைந்து, நாற்பது, முப்பது, இருபது, பத்துப் பேர் நீதிமான்களாக இருந்தாலும் நகர் அழிக்கப்படுமோ என இறைஞ்சுகின்றார். பத்துப் பேர் கூட இல்லை என்பதுதான் எதார்த்தம்.

இங்கே கடவுள் ஆபிரகாமிடம் சொல்வது இதுதான்: '(பாவத்தில்) இறந்தோரைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவர். நீ என்னைப் பின்தொடர்!'

ஆக, இறந்தவர்கள் என்பவர்கள் தங்களைத் தாங்களே உறைநிலையில் வைத்துக்கொள்பவர்கள் - அது பாவமாக இருக்கலாம், எதிர்மறை உணர்வுகளாக இருக்கலாம், கடந்த காலமாக இருக்கலாம். உறைநிலையில் வாழ்க்கையை இருத்திக்கொள்பவர்கள் இறந்தவர்கள். இவர்களைப் பற்றிக் கவலைப்படுவதால் மற்றவர்களின் வாழ்க்கையும் பாதிக்கப்படுகிறது என்பதே உண்மை.

ஆகையால்தான், தன்னைப் பின்பற்றும் சீடர்களை உறைநிலையிலிருந்து விடுவிக்க நினைக்கின்ற இயேசு, 'இறந்தோரைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம்' என்கிறார்.

இன்று என் வாழ்வின் உறைநிலை எது? நான் எதில் இறந்தவராக இருக்கிறேன்?


2 comments:

  1. “ கடந்த காலம்”..... இவை ஞாபகப்படுத்துவது நம் வேர்களேயானாலும் அவற்றைக் கட்டிப்பிடித்துக் கொண்டு நிற்காமல், அவை கற்றுக்கொடுத்த பாடங்களை மட்டுமே மனத்திலிருத்தி முன்னேறிச்செல்வதே நாம் வேர்களுக்குக் காட்டும் மரியாதை என இன்றையப் பதிவை ஆரம்பிக்கும் தந்தை“ இறப்பு” எனும் வார்த்தைக்கு “ பாவம்” எனும் முற்றிலும் புதியதொரு அர்த்தம் கொடுக்கிறார். இருப்பினும் மனது அவரின் கருத்தை ஏற்றுக்கொள்ளவே செய்கிறது. கடவுள் மக்களின் பாவங்களை கருத்தில் கொண்டு,சோதோமை அழிக்க முற்பட்டபோது, அவர்களுக்காக... அம்மக்களுக்காகப் பரிந்து பேசிய அபிரகாமில் நாம் பார்த்தது அந்த மக்கள் மீது அபிரகாமுக்கு இருந்த கரிசனையை.ஆனாலும் இங்கு தந்தை முன் வைப்பது இறப்பிற்கு ஈடான அவர்களின் பாவங்களை..இறந்தவர்கள் குறித்த “ உறைநிலை”யும், அதற்கான காரணங்களும் கொஞ்சம் புதுமையாகவே இருக்கிறது. இன்று என் வாழ்வின் “உறைநிலையை” உணர்ந்து பார்க்கவும்,அந்த உறைநிலை அடுத்தவரின் வாழ்க்கையைப் பாதித்து விடாமல் பார்த்துக்கொள்ளவும் அழைக்கப்படுகிறோம். எதையுமே வித்தியாசமான கண்கள் கொண்டு பார்க்கும் தந்தையை எத்தனை பாராட்டினும் தகும்!!!

    ReplyDelete