Monday, June 24, 2019

மேலாண்மை

இன்றைய (25 ஜூன் 2019) நற்செய்தி (மத் 7:6, 12-14)

மேலாண்மை

இன்றைய நற்செய்தி வாசகத்தில் இயேசு மூன்று விடயங்களை அறிவுறுத்துகின்றார்: (அ) தூய்மையானது எதையும் தூய்மையற்றதற்காக வீணாக்க வேண்டாம், (ஆ) பிறரையும் உன்னைப் போல நினை, மற்றும் (இ) இடுக்கமான வாயிலைத் தேர்ந்தெடுக்கும் சிலரில் ஒருவராக இருக.

(அ) தூய்மையானது எதையும் நாய்களுக்குக் கொடுக்க வேண்டாம்

தூய்மையானது தூய்மையற்றதன் முன் எறியப்படக் கூடாது. அல்லது மதிப்புக்குரிய ஒன்று மதிப்பற்ற ஒன்றோடு கலக்கக் கூடாது.

'பன்றியின்-நாய்களின் முன் முத்துக்களை எறிய வேண்டாம்' - ஏனெனில், பன்றிகளுக்கு முத்துக்களின் அருமை தெரியாது. மேலும், அவற்றை அவை கற்கள் என நினைத்துக்கொண்டு நம் மேல் பாயவும் வாய்ப்பு இருக்கிறது.

இதை நான் நேர மேலாண்மையோடு பொருத்திப் பார்க்க விரும்புகிறேன்.

நேரம் என்பது தூய்மையானது அல்லது மதிப்பு மிக்கது.

இதை நான் மேன்மையான காரியங்களுக்குச் செலவிடாமல் காணொளி பார்த்துச் சிரிக்கவும், அயர்ந்து ஓய்ந்து கிடக்கவும், புறங்கூறித் திரிதலிலும் பயன்படுத்தினால், நான் பன்றிகள் முன்தான் என் நேரத்தை எறிகிறேன். இச்செயல்கள் என் நேரத்தை வீணாக்குவதோடு, நானே புதிதாக பிரச்சினைகளை உருவாக்கிக் கொள்ளவும் வாய்ப்பாகிவிடுகின்றன.

ஆக, விலைமதிப்பானது விலைமதிப்பற்றதன் முன் ஒருபோதும் நிற்கக் கூடாது.

(ஆ) பிறருக்குச் செய்வது

'நான் ஏமாற்றப்படக்கூடாது' என நினைத்தால், நான் யாரையும் ஏமாற்றக் கூடாது. 'என்னை எல்லாரும் பாராட்ட வேண்டும்' என நான் நினைத்தால், நான் எல்லாரையும் பாராட்ட வேண்டும். ஆக, ஒரு செயலைச் செய்யுமுன், அதை அடுத்தவரின் கண் கொண்டு பார்ப்பதுதான் பொன்விதி. பல நேரங்களில் நம் மனம் இயல்பாகவே நம்மை மட்டுமே சிந்திக்கிறது. நம்மைத் தாண்டிச் சிந்திப்பதில்லை

இதை, மனது மேலாண்மை எனலாம்.

பிறரைப் பற்றிச் சிந்திப்பதும் ஒரு பழக்கம்தான் என நினைக்கிறேன். அது திடீரென்று ஒரே நாளில் வருவது அல்ல. ஒவ்வொரு நாளும் மேற்கொள்ளும் முயற்சியின் விளைவாக வருவது.

ஆக, என்னுடைய சிந்தனை என்னை மையப்படுத்தியதாக இருக்கிறதா? அல்லது பிறரை மையப்படுத்தியதாக இருக்கிறதா?

(இ) இடுக்கமான வாயில்

இதை நாம் 'துன்ப மேலாண்மை' எனலாம்.

நம் மூளை இயல்பாகவே துன்பத்தை விலக்கி இன்பத்தைப் பற்றிக்கொள்கிறது. இதற்கு மாறான ஒரு வழியைத் தெரிந்துகொள்வதே துன்ப மேலாண்மை.

இடுக்கமான வாயிலால் என்ன பயன்?

வாயிலைக் கொஞ்சம் அகலமாக வைத்தால்தான் என்ன?

நான் இதை, 'வார்த்தை மேலாண்மை' என்றும் பார்க்கிறேன். நம் உதடுகள் இரண்டும் வாயில்கள். இவை எந்த அளவுக்கு இடுக்கமாக இருக்கின்றனவோ - அதாவது அமைதியாக இருக்கின்றனவோ - அந்த அளவிற்கு நமக்கு அல்லது. வாயின் அகலம் கூடக்கூட ஆபத்துக்களும் கூடும்.

ஆக, இதழ்கள் இடுக்கமான வாயில்களாக இருந்து, நம்முடைய கைகளும், மூளையும் அகலமான வாயில்களாக இருந்தால் நலம். இதற்கு எதிர்மாறாக இருந்தால் இன்னும் ஆபத்து.

நாம் காணும் இந்த அறிவுரைகள் இன்றைய முதல் வாசகத்தில் (காண். தொநூ 13:2, 5-18) வேறு வேறு நிலைகளில் வருகின்றன.

ஆபிராம் மற்றும் லோத்துவின் பணியாளர்களால் சேர்ந்து வாழ முடியவில்லை. ஏனெனில், அவர்கள் செல்வம் அதிகரிக்க அதிகரிக்க பார்வை சுருங்கிக் கொண்டே வந்தது.

லோத்து வளமையான பகுதியைத் தேடிக்கொள்கிறார். அவர் தன்னுடைய வளர்ச்சியை மட்டும் மனத்தில் வைத்து பசுமையான பகுதியை - சோதோம் பகுதியைத் - தேடிக்கொள்கிறார். ஆனால், அதுவே அவருக்கு அகன்ற வாயிலாக மாறுகிறது.

2 comments:

  1. தந்தையை விட்டுப் பிரிக்க முடியாத வார்த்தைகளில் “ மேலாண்மை” எனபதும் ஒன்று. இன்ப மேலாண்மை, துன்ப மேலாண்மை, வார்த்தை மேலாண்மை.... எப்படித்தான் இத்தனை அர்த்தம் செறிந்த வார்த்தைகள் இவர் வாயிலிருந்து மட்டும் புறப்பட்டு வருகின்றனவோ.... தெரியவில்லை.ஒரு அருட்பணியாளராக... அதிலும் விவிலியத்தின் அத்தனை விஷயங்களையும் ஐயமறக் கற்ற ஒரு முனைவரான அவர் தன் அறிவை,போதனையை அத்தோடு சுருக்கிக் கொள்ளாமல், விவிலிய விஷயங்களையும் தாண்டி, அன்றாட வாழ்வியல் பாடங்களை, அனைவரின் நடைமுறைக்கும் ஏற்ற விஷயங்களைத், தனக்கே உரிய பாணியில் தருவது அவரின்அவரின் தனிச்சிறப்பு.விலைமதிப்பானது விலை மதிப்பற்றதன் முன் நிற்க கூடாதென்பதும், நம்மை அடுத்திருப்பவரைப்பற்றி சிந்திக்க சிறிது நேரம் ஒதுக்க வேண்டுமென்பதும்,நம் இதழ்கள் குறைவான விஷயங்களையே பேச வேண்டுமென்பதும்
    எந்த மத்த்தைச் சார்ந்தவனுக்குமே பொதுவான விஷயங்கள்தான். வாழ்வில் செழுமையையும்,பசுமையையும் மட்டுமே நாம் தேடிச்செல்கையில் நம் வாழ்வையே விழுங்கிவிடும் அகன்ற வாயிலுக்கு நம்மைக் நாமே கையளிக்கிறோம் எனற தந்தையின் எச்சரிக்கை மணிக்கு செவிசாய்ப்போம்.என்னைப்போன்ற சாமான்யர்கள் புரிந்து கொள்ள கொஞ்சம் dry ஆன விஷயங்கள் தான். ஆனால் சமைக்கும் முறையில் சமைத்தால் பாகற்காய் கூட இனிக்கும் என்று சொல்ல வரும் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete