Monday, June 10, 2019

புனித பர்னபா

இன்றைய (11 ஜூன் 2019) திருநாள்

புனித பர்னபா

இன்று புனித பர்னபாவின் திருநாளைக் கொண்டாடுகிறோம். பவுலின் நுகத்தடித் தோழராக, உடனுழைப்பாளராக இவர் அறியப்பட்டாலும், பவுலின் வாழ்வில் இன்னும் ஒரு முக்கியமான இடத்தை பெறுகின்றார்.

பவுலைப் பொறுத்தவரையில் அவர் இறைவனின் அழைப்பு மூன்று நிலைகளில் பெறுகின்றார்: ஒன்று, தாயின் கருவறையிலிருந்தே தன்னை இறைவன் அழைத்ததாகப் பதிவு செய்கிறார். இரண்டு, தமஸ்கு நகர் போகும் வழியில் இறைவனால் தடுத்தாட்கொள்ளப்படுகின்றார். மூன்று, அவருடைய பணி ஏற்கப்படாமல், துவண்டு போய்க் கிடக்க, அவரை திருத்தூதர்களுக்கு அறிமுகப்படுத்துகின்றார் பர்னபா.

பர்னபா வழியாக தன்னுடைய இறையழைத்தலை மூன்றாம் முறையாகக் கண்டுகொள்கின்றார் பவுல்.
சரியான நபரை இனங்கண்டு சரியா இடத்தில் அவருக்குரியவற்றைக் கொடுக்க முன்வருவதற்கு நிறைய தாராள உள்ளம் தேவை. இதை பர்னபா கொண்டிருந்தார். இவரின் தாராள உள்ளத்திற்குக் கடவுளும் நல்ல பரிசைத் தருகின்றார். இவரைத் தன்னுடைய சிறப்புப் பணிக்கென ஒதுக்கிவைத்துக்கொள்கின்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். மத் 5:13-16) 'உங்கள் ஒளி மனிதர்முன் ஒளிர்க!' என்கிறார் இயேசு. ஆக, ஒளியின் நிறைவு அல்லது நோக்கம் அதன் பயன்பாட்டில்தான் இருக்கிறது. மனித வாழ்வின் நோக்கமும் நிறைவும் அதுவே என்பதை பர்னபா உணர்ந்திருந்தார்.

இதை நாமும் கற்றுக்கொள்ளலாமே!

1 comment:

  1. ‘பவுல்’ எனும் சரியான நபரை இனங்கண்டு,அவருக்குரியதை கொடுத்த பர்னபாவின் தாராள உள்ளத்தை மெச்சுகிறார் தந்தை. இந்த தாராள உள்ளம் நம்மிடமும் பொங்கி வழிந்தால் இருளின் பிடியில் சிக்கித்தவிக்கும் பலரை நாம் வெளிச்சத்திற்குக் கொண்டு வரலாம். நம்மிடம் உள்ள ஒளி நாம் எத்தனை பேரோடு அதைப்பகிர்ந்து கொள்கிறோம் என்பதில் தான் அடங்கியுள்ளது என்பதைத், தன் வாழ்வில் உணர்ந்து செயல்பட்ட புனித பர்னபா நமக்கும் உதவுவாராக!பவுலின் நுகத்தடித்தோழர், உடனுழைப்பாளர் என்பது தந்தை பர்னபாவுக்குச் சூட்டும் அழகான பட்டங்கள். தந்தைக்கு வாழ்த்துக்களும்! நன்றிகளும்!!!

    ReplyDelete