Wednesday, June 26, 2019

பொறுமை

இன்றைய (27 ஜூன் 2019) நற்செய்தி (மத் 7:21-29)

பொறுமை

நாம் கடந்த இரு வாரங்களாக வாசித்துக்கொண்டிருக்கும் மலைப்பொழிவு இன்றைய நற்செய்தி வாசகத்தோடு நிறைவு பெறுகிறது. மலைப்பொழிவின் இறுதியில் இயேசு ஒரு க்விஸ் வைக்கிறார்: 'நீங்க எந்த வகை அடித்தளத்தில் வீடு கட்டப் போகிறீர்கள்? பாறை மீதா? அல்லது மணல் மேலா?'

பாறை மீது கட்டுவதற்கு மிகுந்த பொறுமை வேண்டும்.

இன்றைய முதல் வாசகத்தில் (காண். தொநூ 16:6-12, 15-16) ஆபிரகாமின் பொறுமையின்மையைப் பார்க்கிறோம். ஆண்டவர் அவருக்குக் குழந்தை பிறக்கும் என வாக்களித்திருக்கிறார். ஆனால், நேற்றைய நற்செய்தியில் தானாகவே முன்வந்து எலியேசரை - தன் அடிமையின் மகனை - தத்து எடுத்துக்கொள்ள விழைகின்றார். அதுவும் பொறுமையின்மை. இன்று, சாராவின் வற்புறுத்துதலின் பேரில் பணிப்பெண் ஆகாரை ஏற்று அவர் வழியாக குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகின்றார். விவிலிய வரலாற்றில் முதல் வாடகைத்தாய் ஆகார்தான்.

ஆபிரகாம் ஒரு பக்கம் நம்பிக்கையின் தந்தையாக இருந்தாலும் இன்னொரு பக்கம் பொறுமை இழந்தவராக இருக்கிறார்.

பொறுமை மிகவும் அவசியம்.

இத்தாலிய மொழியில் பொறுமையை, 'சாந்தா பட்சியென்ஷா' ('புனிதமான பொறுமை') என அழைக்கிறார்கள். அதுவும் இறைவன் செயலாற்றுவதைக் கண்டுகொள்ள நீடித்த பொறுமை அவசியம்.

இன்று இரண்டு நிமிட வீடியோவைக் கூட ஃபார்வர்ட் செய்து பார்க்கும் அளவிற்குப் பொறுமை இழந்து நிற்கிறோம். வைஃபை ஸ்லோ என்றால், சார்ஜிங் ஸ்லோ என்றால், லோடிங் ஸ்லோ என்றால் நம்மால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வேகமான நெட்வொர்க்கை நோக்கி ஓடுகிறோம். இறுதியில், பேட்டரியும் குறைந்து, நாமும் மெலிந்து நிற்கிறோம்.

இறைவன் நம்மில் நடத்தும், நம்மைச் சுற்றி நடத்தும் அனைத்தும் அற்புதங்களே.

அவற்றைக் கண்டுகொள்ள பொறுமை அவசியம்.

அல்லது கற்பாறையின் மேல் வீடு கட்ட வேண்டும்.

ஆபிரகாம் ஆகார் என்ற மணல்மேல் வீடு கட்ட விரும்பினார். ஆனால், கடவுள்தாமே அவருக்குப் பாறையின் மேல் வீட்டைக் கட்டிக்கொண்டிருந்தார்.

மணலில் வீடு கட்டுவது எளிது. அதற்குத் தேவையான உழைப்பு மிகக் குறைவு. ஆனால், ஆபத்து மிக அதிகம்.
பொறுமையின்மையால் - நம் உள்ளத்தில், நம் இல்லத்தில், நம் வாகன ஓட்டுதலில், நம் பணியிடத்தில் - நாம் நிறைய பிரச்சினைகளைச் சந்தித்திருப்போம்.

ஆக, இன்று கொஞ்சம் பொறுமையாக இருந்தால் எத்துணை நலம்.

பொறுமையாக இதை வாசித்த உங்களுக்கு நன்றி.


1 comment:

  1. “ பொறுமை” ஆயுள் பூரா முயற்சி செய்தாலும் என்னைப்போன்றவர்களுக்கு இறுதி வரை எட்டாக்கனியான ஒரு விஷயம். எவ்வளவு அதிகமாக பொறுமை காக்க முயன்றாலும் அதற்கும் ஒரு படி மேலே போய் அதைத்தரமட்டமாக்க வேண்டுமென கங்கனம் கட்டி உழைக்கப் பலபேர்; பல விஷயங்கள். நம்பிக்கையின் தந்தைக்கே இந்தப் பொறுமை குறைபடுகையில் நான் எம்மாத்திரம் என சமாதானம் சொல்கிறது என் மனது.இறைவன் நம்மில், நம்மைச்சுற்றி நடத்தும் அனைத்தும் அற்புதங்களே எனவும்,அவற்றைக்கண்டு கொள்ள பொறுமை மிக அவசியம் எனவும் கூறுகிறார் தந்தை.நம் பொறுமையின்மைக்குத் தந்தை தரும் விஷயங்களின் பட்டியலைப் பார்த்தால் நமக்கே நம்மேல் அதிர்ச்சியும்,பரிதாபமும் ஒரு சேர வரவேண்டும்..... நாமா இப்படி என்று!பொறுமையை இழந்து நமக்கும்,நம்மைச்சுற்றியுள்ளவர்களுக்கும் நேர்ந்த அவலங்களைத் திரும்பிப் பார்த்தால் இன்னும் கொஞ்சம் பொறுமையாக இருந்திருந்தால் எத்துணை நலம் என நினைக்கத் தோன்றுகிறது.ஊண்,உறக்கம் மறந்த நிலையிலும் தவறாது இப்பதிவை தினம் படைக்கும் தந்தையின் பொறுமைக்கு முன்னே வாசகர்களின் பொறுமை ஒரு விஷயமா என்ன? இத்தனை சீரியஸான ஒரு பதிவிலும் “ விவிலிய வரலாற்றில், முதல் வாடகைத்தாய் ஆகார் தான்” எனும் வரி புன்னகையை வரவழைத்தது. தந்தைக்கு ஒரு சல்யூட்,!!!

    ReplyDelete