Thursday, August 31, 2023

விழிப்பாய் இருங்கள்!

இன்றைய இறைமொழி

வெள்ளி, 1 செப்டம்பர் 2023

ஆண்டின் பொதுக்காலம் 21-ஆம் வாரம்

1 தெச 4:1-8. மத் 25:1-13

விழிப்பாய் இருங்கள்!

இன்று புதிய மாதத்தின் முதல் நாள். மாதத்தின் முதல் வெள்ளியும்கூட. 

1. 'நீங்கள் தூயோர் ஆவதே கடவுளின் திருவுளம்' என்று தெசலோனிக்க நகர்த் திருஅவைக்கு எழுதுகிற புனித பவுல், அவர்கள் பெற்றுக்கொண்ட அழைப்பின் காரணமாக அவர்கள் மேன்மையான வாழ்க்கையை வாழக் கடமைப்பட்டுள்ளார்கள் என்பதை அவர்களுக்கு நினைவுறுத்துகிறார். நம் தெரிவுகளைப் பொறுத்தே நம் வாழ்வின் நிலை உயர்கிறது. நம் தெரிவுகளுக்கு ஏற்ப நம் வாழ்வைத் தகவமைத்துக்கொள்வதும் அவசியம். தெசலோனிக்க நகரம் ஒரு குடியேற்ற நகரம். அந்நகரில் பாலியல் பிறழ்வுகள் மிகுந்திருந்தன. கிறிஸ்தவ நெறியைத் தழுவிக்கொண்டவர்கள் ஒரு மாற்று வாழ்வை வாழ வேண்டும் என்பது பவுலின் அறிவுறுத்தல். பழையதைத் தள்ளிவிடாமல் புதியதைத் தழுவிக்கொள்ள இயலாது என்பது பவுல் வழங்கும் பாடம்.

2. இன்றைய நற்செய்திப் பகுதி, மத்தேயு நற்செய்தியின் இறுதிகாலப் பொழிவுப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது. தம் சீடர்கள் விழிப்போடும் தயார்நிலையிலும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்துகிற இயேசு, தொடர்ச்சியாக பத்துக் கன்னியர் எடுத்துக்காட்டை மொழிகிறார். இலக்கியக்கூற்றின் அடிப்படையில் தெரிவை மையப்படுத்திய எடுத்துக்காட்டு இது. அதாவது, வாசகர்முன் இரு நிலைகளைச் சுட்டிக்காட்டி அவற்றில் ஒன்றைத் தெரிந்துகொள்ளுமாறு அறிவுறுத்துவது. இரு குழுவினர் நம் கண்முன் நிறுத்தப்படுகிறார்கள்: 'அறிவிலிகள்,' 'முன்மதியுடையோர்.' இவர்களில் நான் யார் என்பதை நானே தெரிவு செய்ய வேண்டும். நிகழ்வில் வருகிற முன்மதியற்ற ஐந்து பேர், தகுந்த தயார்நிலையில் இல்லை. மேலும், மணமகன் தாமதத்தைப் பயன்படுத்தவும் அறியவில்லை. விளைவாக, கதவு அவர்களுக்கு அடைக்கப்படுகிறது.

3. நான் மேற்கொள்ளும் தெரிவுக்கு ஏற்ப என் வாழ்க்கையை நான் தகவமைத்துக்கொள்கிறேனா? என் வாழ்வைத் தகவமைத்துக்கொள்வதற்காக நான் தள்ளிவிட வேண்டியவை எவை? தழுவிக்கொள்ள வேண்டியவை எவை? எந்தவொரு நிகழ்விலும் அதன் இறுதிவரை முன்கூட்டியே யோசித்துத் திட்டமிடுவதற்கு நான் பழகியுள்ளேனா? அல்லது ஒவ்வொரு நிகழ்வையும் அந்தந்த நொடியில் எதிர்கொள்ள முயன்று பதற்றத்திற்கும் நெருக்கடிக்கும் ஆளாகிறேனா? விழிப்பு நிலை என்பது தூங்காமல் விழித்திருப்பது அல்ல. முன்மதியுடன் செயல்பட்டு, இனிதாகத் தூங்கச் செல்வது.



No comments:

Post a Comment