Wednesday, August 2, 2023

புதியவற்றையும் பழையவற்றையும்

இன்றைய இறைமொழி

வியாழன், 3 ஆகஸ்ட் 2023

பொதுக்காலம் 17-ஆம் வாரம்

விப 40:16-21, 34-38. மத் 13:47-53.

புதியவற்றையும் பழையவற்றையும்

1. விடுதலைப் பயண நூலின் இறுதிப்பகுதியை இன்றைய முதல் வாசகத்தில் வாசிக்கிறோம். ஆண்டவராகிய கடவுளின் கட்டளைக்கிணங்க மோசே சந்திப்புக் கூடாரத்தை உருவாக்குகிறார். ஆண்டவரின் மாட்சி சந்திப்புக் கூடாரத்தின்மேல் இறங்கி வந்து அங்கே குடிகொள்கிறது. 'ஆண்டவர் உங்களைச் சந்திக்க வருவார்' என்னும் யோசேப்பின் வாக்குறுதியோடு தொடக்கநூல் நிறைவுபெறுகிறது. இஸ்ரயேல் மக்களைச் சந்திக்க வந்த ஆண்டவர் அவர்களை எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து விடுவத்து, அவர்களோடு தங்குகிறார். கடவுள் மானிடரின் அருகில் நெருங்கி வருகிறார். சந்திப்புக் கூடாரத்தில் இறங்கி வந்த கடவுளின் மாட்சியின் பின்புலத்தில்தான் யோவான் நற்செய்தியாளர் தன் முகவுரையில், 'வாக்கு மனிதர் ஆனார். நம்மிடையே கூடாரம் அடித்தார். அவரது மாட்சியை நாங்கள் கண்டோம்' (காண். யோவா 1:14) என எழுதுகிறார். 

2. கடலில் வீசப்படும் வலையை விண்ணரசுக்கு எடுத்துக்காட்டாக மொழிகிறார் இயேசு. தொடர்ந்து, தாம் பேசுகிற உவமைகள் அனைத்தையும் புரிந்துகொள்கிற எவரும் தம் கருவூலத்திலிருந்து பழையவற்றையும் புதியவற்றையும் வெளிக்கொணர்கிற வீட்டு உரிமையாளர் போன்றவர் என எழுதுகிறார். மேலும், விண்ணரசு என்பது கற்றுக்கொள்ளப்பட வேண்டியது எனவும் இயேசு இங்கே குறிப்பிடுகிறார். 

3. ஆண்டவராகிய கடவுள் சந்திப்புக் கூடாரத்தில் இறங்கி வருகிறார் என்பது புதியது. ஆனால், அதே வேளையில் அவர் என்றும் மக்களோடு இருக்கிறார் என்பது பழையது. புதியவை மொழியப்பட்டாலும் பழையவை மதிப்பு கொண்டுள்ளன. புதியனவற்றையும் பழையனவற்றையும் பகுத்தாய்ந்து செயல்படுகிற வீட்டு உரிமையாளர்போல நாம் இருக்கிறோம். நாம் ஒவ்வொரு நாளும் புதிய நாளுக்குள் நுழைந்தாலும் புதிய நபராகப் பிறந்தாலும், பழைய நாளின் பழைய நபரின் நிழல் நம்மைத் தொடரவே செய்கிறது. புதியனவற்றையும் பழையனவற்றையும் தேர்ந்து தெளிந்து இரண்டிலும் நல்லவற்றைத் தழுவிக்கொண்டு, அல்லவற்றை விட்டுவிடுதல் நலம்.


No comments:

Post a Comment