Tuesday, August 29, 2023

வேலையும் நற்செய்திப் பணியும்

இன்றைய இறைமொழி

புதன், 30 ஆகஸ்ட் 2023

ஆண்டின் பொதுக்காலம் 21-ஆம் வாரம்

1 தெச 2:9-13. மத் 23:27-32.

வேலையும் நற்செய்திப் பணியும்

1. தெசலோனிக்கத் திருஅவைக்குத் தான் அறிவித்த நற்செய்தியைப் பற்றிப் பெருமை பாராட்டுகின்ற பவுல், அந்நற்செய்தி அறிவிக்கப்பட்ட விதம் பற்றியும் பெருமை பாராட்டுகிறார். நற்செய்திப் பணியின் பலன்களைத் தான் அனுபவிப்பதற்கான உரிமை இருந்தாலும், அதை அனுபவிப்பதற்குப் பதிலாக, தன் சொந்த உழைப்பால் தன் தேவைகளை நிவர்த்தி செய்துகொண்டதாக எழுதுகிறார். மேலும், ஒரு தந்தை தன் பிள்ளைகளை வழிநடத்துவதுபோல, அவர்களை வழிநடத்தி, அறிவுரை வழங்கி, ஊக்குவித்து, வற்புறுத்தியதாகவும் சொல்கிறார். ஆக, உரிமைகளை மையப்படுத்தாமல் தன் கடமைகளை மட்டுமே மையப்படுத்தி, கடமைகளுடன் கனிவையும் இணைத்து நற்செய்திப் பணி ஆற்றுகிறார் பவுல்.

2. நற்செய்தி வாசகத்தில், இயேசு மறைநூல் அறிஞர்கள் மற்றும் பரிசேயர்களைச் சாடுகிறார். அவர்களின் வெளிவேடம், போலித்தனம், நெறிகேடு ஆகியவை இயேசுவுக்கு ஏற்புடையனவாக இல்லை.

3. திருமுழுக்கு பெற்ற அனைவருமே நற்செய்தியை அறிவிக்கும் கடமை பெற்றுள்ளதாகச் சொல்கிறது நம் திருஅவையின் மறைக்கல்வி. நாம் பெற்றுக்கொண்ட நற்செய்தியை மற்றவர்களுக்கு அறிவிக்க நமக்கு உள்ள கடமையை நினைவுகூர்ந்து வாழ்தல் நலம்.


No comments:

Post a Comment