Monday, August 7, 2023

மனிதரைத் தீட்டுப்படுத்தும்!

இன்றைய இறைமொழி

செவ்வாய், 8 ஆகஸ்ட் 2023

பொதுக்காலம் 18-ஆம் வாரம்

எண் 12:1-13. மத் 15:1-2, 10-14.

மனிதரைத் தீட்டுப்படுத்தும்!

1. இன்றைய நற்செய்தி வாசகத்தில், 'உம் சீடர்கள் மூதாதையரின் மரபை மீறுவது ஏன்?' என்னும் கேள்வியை பரிசேயரும் மறைநூல் அறிஞர்களும் இயேசுவிடம் முன்வைத்தபோது, 'தூய்மை-தீட்டு' என்பது பொருள்கள் சார்ந்தது அல்ல, மாறாக, மனப்பாங்கு அல்லது நோக்கு சார்ந்தது என எடுத்துரைக்கிற இயேசு, மனிதருக்கு உள்ளே செல்வது அல்ல, மாறாக, அவர்களிடமிருந்து வெளியே வருவதே அவர்களைத் தீட்டுப்படுத்தும் என மொழிகிறார். வாயிலிருந்து வரும் சொற்கள் உள்ளத்தில் எண்ணங்களாக ஊற்றெடுக்கின்றன. ஆக, தூய்மை-தீட்டு என்பது உடல் சார்ந்தது அல்ல, மாறாக, உள்ளம் சார்ந்தது.

2. முதல் வாசகத்தில், மிரியாமும் ஆரோனும் மோசேக்கு எதிராகப் பேசுகிறார்கள். மோசே மிதியான் நாட்டுப் பெண்ணை (எத்தியோப்பியப் பெண்) மணம் முடிக்கிறார். யூத இனம் சாராத இந்த வேற்றினத்துப் பெண்ணை முன்னிட்டு இடறல்படுகிறார்கள். அதாவது, ஏதோ ஒரு வகையில் மோசே தூய்மையற்றவர் எனச் சுட்டிக்காட்டி, அவரின் தூய்மையைவிட தங்கள் தூய்மை உயர்ந்தது எனச் சொல்கிறார்கள். மேலும், 'எங்கள் வழியாகவும் கடவுள் பேசவில்லையா?' எனக் கேட்டு, கடவுளின் வெளிப்பாடு தங்களுக்கும் நிகழ்ந்தது என்றும், இந்த வெளிப்பாடு எந்த வகையிலும் குறைந்தது இல்லை என்றும் கூறுகிறார்கள். இவர்களின் முணுமுணுப்பைக் கேட்கின்ற ஆண்டவராகிய கடவுள் மோசே-மிரியாம்-ஆரோன் என்னும் மூவரையும் சந்திப்புக் கூடாரத்திற்கு அழைத்து, மிரியாம் மற்றும் ஆரோனைக் கடிந்துகொள்கிறார். மோசே பெற்றிருப்பது சிறப்பான வெளிப்பாடு என உரைக்கிறார். நிகழ்வின் இறுதியில் மிரியாம் தண்டிக்கப்படுகிறார். மோசே அவருக்காகப் பரிந்து பேசுகிறார்.

3. மிரியாம்-ஆரோன் உள்ளத்தில் பொறாமை, கோபம், எரிச்சல், ஆணவம் போன்ற எதிர்மறை உணர்வுகள் குடியிருக்கின்றன – மிரியாம் இறைவாக்கினராகவும், ஆரோன் தலைமைக்குருவாகவும் இருந்தாலும்! இவற்றின் காரணமாகவே அவர்கள் மோசேக்கு எதிராகப் பேசுகிறார்கள். மேலும், தங்களை உயர்ந்தவர்கள் அல்லது தூய்மையானவர்கள் என எண்ணுகிறார்கள். உள்ளத்து உணர்வுகளைக் கட்டுக்குள் வைக்க வேண்டும் என்பது ஞானநூல்களின் பாடமாகவும் இருக்கிறது: 'விழிப்பாயிருந்து உன் இதயத்தைக் காவல் செய். ஏனெனில், அதனின்று பிறப்பவை உன் வாழ்க்கையின் போக்கை உறுதிசெய்யும்' (நீமொ 4:23). நம் உள்ளத்தில் ஓடும் எண்ண ஓட்டங்கள், மற்றும் நாம் பேசும் சொற்களைப் பற்றிய தன்-விழிப்புணர்வு நம்மிடம் இருக்கிறதா? நாம் மேற்கொள்ளும் அமைதியும் பொறுமையும் இத்தகைய தன்-விழிப்புணர்வுக்கு நம்மை இட்டுச் செல்லும்.


No comments:

Post a Comment