Friday, August 11, 2023

முதன்மையான கட்டளை நம்பிக்கையும்

இன்றைய இறைமொழி

சனி, 12 ஆகஸ்ட் 2023

பொதுக்காலம் 18-ஆம் வாரம்

இச 6:4-13. மத் 17:14-20.

முதன்மையான கட்டளை நம்பிக்கையும்

1. ஆண்டவராகிய கடவுள் மோசே வழியாக முதன்மையான கட்டளையை வழங்குகிறார். ஆண்டவராகிய கடவுளை முழு இதயத்தோடும் உள்ளத்தோடும் ஆற்றலோடும் அன்புகூர்வதே அக்கட்டளை. அதாவது, நம் எண்ணம், உணர்வு, செயல் என அனைத்திலும் இறைவன் மட்டுமே நிறைந்திருக்க வேண்டும். சற்று நேரம் அமர்ந்து நாம் யோசித்துப் பார்த்தால், இறைவனைத் தவிர அனைத்தும் நம் எண்ணங்களையும் உணர்வுகளையும் செயல்களையும் ஆக்கிரமித்து நிற்கின்றன. வாழ்வின் முதன்மைகளை நெறிப்படுத்த ஆண்டவராகிய கடவுள் கற்றுக்கொடுக்கிறார். தொடர்ந்து, ஆண்டவரை மறந்துவிடுவதற்கான வாய்ப்புகளைச் சுட்டிக்காட்டி, அவற்றில் விழாதபடி எச்சரிக்கிறார். அதாவது, வசதிகளும் தன்னிறைவும் இறைவனை நம் எண்ணத்திலிருந்து தூரமாக்குகின்றன.

2. வலிப்பு நோயால் துயரப்படும் இளவல் ஒருவருக்கு நலம் தருகிற இயேசு, நம்பிக்கையின் வலிமை மற்றும் அவசியம் பற்றி அவர்களுக்கு எடுத்துரைக்கிறார். 'உங்களால் முடியாதது எதுவும் இராது' என்று இயேசு சொல்வது நமக்கு வியப்பாக இருக்கிறது. பல நேரங்களில், 'என்னால் இது முடியுமா?' என்னும் நம்பிக்கைக் குறைவே நம் கைகளையும் கால்களையும் கட்டிப்போட்டுவிடுகிறது. 

3. முதல் வாசகத்தில் மூன்று கட்டளை வினைச்சொற்களைக் காண்கிறோம்: 'செவிகொடு,' 'அன்பு செய்,' 'நினைவுகூர்'. நற்செய்தி வாசகத்தில் இயேசு கொடுக்கும் கட்டளை: 'நம்பு.' ஆண்டவராகிய கடவுளை நான் முழுமையாக நம்புகிறேன், அந்த நம்பிக்கையில் அவரை நான் முழுமையாக அன்பு செய்கிறேன், இந்த அன்பே எனக்குத் தன்னம்பிக்கை அளிக்கிறது என நான் முயற்சி செய்யும்போது அனைத்தும் எனக்கு இயலும். 


No comments:

Post a Comment