Tuesday, August 8, 2023

வெட்டுக்கிளிகள் போல உணர்ந்தோம்!

இன்றைய இறைமொழி

புதன், 9 ஆகஸ்ட் 2023

பொதுக்காலம் 18-ஆம் வாரம்

எண் 13:1-2, 25-33, 14:1, 26-30, 34-35. மத் 15:21-28.

வெட்டுக்கிளிகள் போல உணர்ந்தோம்!

1. இஸ்ரயேல் மக்கள் சீனாய் மலையிலிருந்து பயணம் செய்கிறார்கள். வாக்களிக்கப்பட்ட நாடு நெருங்கி வருகிறது. அந்நாட்டை உளவு பார்க்குமாறு ஆட்களை அனுப்பக் கட்டளையிடுகிறார் ஆண்டவர். மோசேயும் ஆட்களை அனுப்புகிறார்கள். குலத்திற்கு ஒருவர் என பன்னிருவர் அனுப்பப்படுகிறார்கள். சென்றவர்களில் பத்துபேர் எதிர்மறையான அறிக்கையையும், இரண்டு பேர் – காலேப் மற்றும் யோசுவா – நேர்முகமான அறிக்கையையும் தருகிறார்கள். பெரும்பான்மையினரின் கருத்தை மக்கள் ஏற்று, அழத் தொடங்குகிறார்கள். ஆண்டவராகிய கடவுளின் உடனிருப்பையும், அவர் இதுவரை ஆற்றிய வல்ல செயல்களையும் அவர்கள் மறந்துவிடுகிறார்கள். ஆண்டவர் அவர்களைத் தண்டிக்கிறார். நாற்பது ஆண்டுகள் பாலைநிலத்தில் சுற்றித்திரியுமாறு – ஒரு தலைமுறை மறையும் வரை – விடுகிறார். 

2. நற்செய்தி வாசகத்தில், கானானியப் பெண் ஒருவர் பேய் பிடித்திருக்கும் தன் மகளைக் குணமாக்கும்படி இயேசுவிடம் வருகிறார். அப்பெண்ணின் நம்பிக்கையைப் பாராட்டுகிறார் இயேசு. பிள்ளைகளுக்குரிய உணவு நாய்க்குட்டிகளுக்கு அல்ல என்றாலும், நாய்க்குட்டிகளும் ஏதோ வகையில் பிள்ளைகளுக்குரிய உணவை உண்கின்றன என்கிறார் அப்பெண்.

3. உளவு பார்க்கச் சென்று வந்தவர்களின் அறிக்கை கேட்டு இஸ்ரயேல் மக்கள் அழக் காரணம் என்ன? (அ) அவர்கள் பெரும்பான்மையினரின் கருத்தே சரி என நினைத்தார்கள். நாமும் பல நேரங்களில் பெரும்பான்மையினரின் சொல் மற்றும் தெரிவின் பின்னால்தான் செல்கிறோம். பெரும்பான்மை முடிவே சரி எனவும் நினைக்கிறோம். (ஆ) தங்கள் எதிர்காலப் பயத்தால் கடந்த காலத்தில் இறைவன் ஆற்றிய அரும்பெரும் செயல்களை மறந்துவிட்டார்கள். (இ) 'எங்கள் பார்வையில் நாங்கள் வெட்டுக்கிளிகள் போல இருந்தோம். அவர்கள் பார்வையிலும் அவ்வாறே இருந்தோம்' என்கிறார்கள். அதாவது, எதிரிகளோடு தங்களை ஒப்பிட்டுப் பார்க்கிற மக்கள் தங்களை மிகக் குறைவாக மதிப்படுகிறார்கள். குறைவான தன்மதிப்பு மிகவும் ஆபத்தானது. நம் செயல்பாட்டை அது எளிதில் தடுத்துவிடும். தங்களோடு இறைவன் இருப்பதால் தாங்கள் பெரியவர்கள் என்றாவது அவர்கள் நினைத்திருக்கலாம். (ஈ) வாக்களிக்கப்பட்ட நாடு கைக்கருகில் இருந்ததை அவர்கள் அசட்டை செய்கிறார்கள். பல நேரங்களில் வெற்றி என்பது இன்னும் ஒரு படிதான் என இருக்க, நாம் பின்வாங்கி விடுகிறோம் - இஸ்ரயேல் மக்கள் போல! இவர்களுக்கு எதிர்மாறாக, இயேசுவிடம் வருகிற கானானியப் பெண் இயேசுவின் உடனிருப்பில் தன்னை ஒரு குழந்தைபோல உணர்கிறார். தனக்கு ரொட்டி கிடைக்கும் என்பது அப்பெண்ணின் உறுதியான நம்பிக்கையாக இருந்தது.


No comments:

Post a Comment