Tuesday, March 22, 2022

அடையாளம்

நாளின் (23 மார்ச் 2022) நற்சொல்

அடையாளம்

இன்றைய முதல் வாசகத்தில் (இச 4:1,5-9) இஸ்ரயேல் மக்கள் தாங்கள் பெற்ற அடையாளம் என பத்துக் கட்டளைகளைக் கொண்டாடுகின்றனர். அதாவது, பத்துக் கட்டளைகள் என்பது இஸ்ரயேல் மக்கள் பெற்றிருந்த தனிப்பெரும் வாழ்க்கை நிலை என்றும், மற்ற யாருக்கும் கிடைக்காத ஒன்று இவர்களுக்குக் கிடைத்திருப்பதாகவும் மொழிகின்றார் மோசே.

நற்செய்தி வாசகத்தில் (மத் 5:17-19), மேற்காணும் கட்டளைகளைத் தாம் நிறைவேற்ற வந்திருப்பதாக இயேசு முன்மொழிவதுடன், கட்டளைகளைக் கடைப்பிடிப்பதே விண்ணரசில் ஒருவரின் நிலையை உயர்த்தும் என மொழிகின்றார்.

கட்டளைகள் பெரும்பாலும் நமக்குச் சுமையாகத் தெரிகின்றன. ஆனால், கட்டளைகளைக் கடைப்பிடித்தலில்  நமக்கு நிறைய சுதந்திரம் இருக்கிறது.

எடுத்துக்காட்டாக, சாலையில் நான் வாகனத்தில் செல்லும்போது நாற்சாலை சந்திப்பு வருகிறது. அந்தச் சந்திப்பில் நிற்கவா, செல்லவா என்று எனக்குக் குழப்பமாக இருக்கிறது. என்னால் முடிவெடுக்க இயலவில்லை. ஆனால், எனக்கு முன்னே சிவப்பு விளக்கு எரிந்தால் நான் வாகனத்தை நிறுத்தி விடுவேன். எனக்கு முடிவெடுக்க வேண்டியதில் குழப்பம் வருவதில்லை. கட்டளைகள் ஒருவிதமான கட்டின்மையைத் தருகின்றன என்பதே உண்மை.

கட்டளைகளைக் கடைப்பிடித்தல் என்பது மூன்று நிலைகளில் நமக்கு அவசியமாகிறது:

ஒன்று, இது நமக்குச் சுதந்திர உணர்வைத் தருகின்றது.

இரண்டு, கட்டளைகள் பிணைப்பின் அல்லது உறவின் அடையாளமாக இருக்கின்றன. 

மூன்று, கட்டளைகள் நம் வளர்ச்சி மற்றும் மேன்மைக்கு உறுதுணையாக நிற்கின்றன.


1 comment:

  1. தன்னந்தனியே காட்டுப்பயணம் செய்யும் ஒருவர், திரும்பும் திசை தெரியாமல் கைகளைப் பிசைந்துகொண்டு நிற்கையில் “ ஊருக்குள் போகவேண்டுமெனில் வலப்பக்கம் திரும்பிச்செல்லுங்கள்” என்ற அடையாளப் பலகையைப் பார்த்தால் எத்தனை மகிழ்ச்சியடைவாரோ, அதே மகிழ்ச்சியைத்தான் விண்ணரசில் நுழைய நாம் செய்யவேண்டியவற்றைச் சொல்லும் கட்டளைகளை நாம் கடைபிடிக்கும் போதும் அடைகிறோம். இதில் யாரும் நம்மை வற்புறுத்துவதில்லை; முழுமனச்சுதந்திரத்தைத் தருகிறார் இறைவன்.எனக்கு வேண்டியது காயா…கனியா? தேர்ந்தெடுக்கும் முழுச்சுதந்திரம் என் கையில். தறிகெட்டு ஓடும் மனத்தைக் கடிவாளமிட்டு நிறுத்துவதும் இந்தக் கட்டளைகள் தான்.ஆனால் இக்கட்டளைகளை உறவின் அடையாளமாகப் பார்க்கையில் அவை நம் வளர்ச்சிக்கும்,மேன்மைக்கும் உறுதுணையாக நின்கின்றன என்பதே உண்மை! “சேருமிடம் சென்றடைய வழிசொல்லும் ஒரு பதிவு” தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete