Friday, March 26, 2021

ஒரு மனிதன் இறப்பது

இன்றைய (27 மார்ச் 2021) நற்செய்தி (யோவா 11:45-57)

ஒரு மனிதன் இறப்பது

இயேசுவின் பணியாலும், போதனையாலும், அரும் அடையாளங்களாலும் மக்கள் ஈர்க்கப்படுவதையும், அதனால் கண்களில் விழுந்த தூசியாக இயேசுவை யூதத் தலைவர்கள் எண்ணிக்கொண்டிருப்பதையும் இன்றைய நற்செய்தி வாசகத்தில் பார்க்கிறோம்.

'இவனை இப்படியே விட்டுவிட்டால் அனைவரும் இவனிடம் நம்பிக்கை கொள்வர். அப்போது உரோமையர் வந்து நம் தூய இடத்தையும் நம் இனத்தையும் அழித்துவிடுவார்களே!' - இது அவர்களின் அச்சமாக இருக்கிறது.

அப்போது அவ்வாண்டின் தலைமைக் குருவாய் இருந்த கயபா,

'உங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை. இனம் முழுவதும் அழிந்துபோவதைவிட ஒரு மனிதன் மட்டும் மக்களுக்காக இறப்பது நல்லது என்பதை நீங்கள் உணரவில்லை' என்கிறார்.

அதாவது, பொதுநலனுக்காக தனிநபர்நலன் பலியிடப்படுவது நல்லது என்கிறார் கயபா.

இதையொட்டிய ஒரு நிகழ்வு மகாபாரதத்திலும் வருகின்றது.

பாண்டவர்களின் தலைவரான யுதிஷ்டிரர் கௌரவர்களால் - துரியோதன் மற்றும் அவருடைய மாமா சகுனி - ஏமாற்றப்பட்டு, சூதாடுவதற்காக திரிடிராஷ்டிரர் முன் அழைத்து வரப்படுகின்றார். சகுனி ஏமாற்றி விளையாடியதால் யுதிஷ்டிரர் ஒவ்வொன்றாக இழந்து வருவதைப் பார்த்து வருத்தப்படுகின்றன விதுரர் உடனடியாக அரசன் குறுக்கிட்டு சூதாட்டத்தை நிறுத்துமாறு கேட்கின்றார். 'ஒட்டுமொத்த அரசின் நலனை மையமாக வைத்து உம் மகனின் தன்னலத்தைக் கடிந்துகொள்ளும்' என்று விதுரர் கேட்கிறார்:

'ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு தனிநபரை இழக்கலாம்.
ஒரு கிராமத்தைக் காப்பாற்ற ஒரு குடும்பத்தை இழக்கலாம்.
ஒரு நாட்டைக் காப்பாற்ற ஒரு கிராமத்தை இழக்கலாம்.
ஒரு ஆன்மாவைக் காப்பாற்ற ஒட்டுமொத்த பூமியையே இழக்கலாம்' (மகாபாரதம், இரண்டு, 55.10)

ஆனால், திரிடிராஷ்டிரர் இவ்வார்த்தைகளுக்குச் செவிகொடுக்கவில்லை. சற்று நேரத்தில் தன் மனைவி உள்பட அனைவரையும் அனைத்தையும் சூதாட்டத்தில் கௌரவர்களிடம் இழக்கிறார் தருமர் என்றழைக்கப்படுகின்ற யுதிஷ்டிரர்.

பெரியவற்றிக்காக சிறியது துன்புறலாம் என்பது நாம் காலங்காலமாக எழுதி வைத்துள்ள பாடம்.

ஒரு பெரிய மனிதனுடைய பாவத்திற்கு ஒரு சிறிய கோழிக்குஞ்சு பலியாக்கப்படுவதில்லையா?

இப்படிப்பட்ட புரிதல் ஒரு வகையான குழு சர்வாதிகாரம். இல்லையா?

அதே வேளையில் உயிர்காக்கும் மருத்துவத்தில் இம்முறையே பயன்படுத்தப்படுகிறது. ஒட்டுமொத்த உடல் சர்க்கரை நோயில் அழிவதை விட ஒரு விரலை எடுப்பது அல்லது ஒரு காலை எடுப்பது போன்றது. ஆக, முழுமை முழுமையாக இருக்க அதன் பகுதிகள் துன்புறலாம் என்பது எழுதாத பாடமாக இருக்கிறது.

இங்கே இயேசு பிறருக்காக துன்புறத் தயாராகின்றார்.

ஒட்டுமொத்த குடும்ப நலனுக்காக ஒரு தாய் கஷ்டப்படுவது, தந்தை கஷ்டப்படுவது, பிள்ளை வெளிநாட்டில் வேலை செய்வது எல்லாமே ஏறக்குறைய இதே கோட்பாட்டின் நீட்சியே.

இந்த அறநெறி சரியா? என்று கேள்வி கேட்கலாம்.

ஆனால், 'எது தேவையோ அதுவே தருமம்' என்கின்றன புனித நூல்கள்.

2 comments:

  1. “பெரியவற்றிற்காக சிறியது துன்புறலாம்”....” முழுமை முழுமையாக இருக்க அதன் பகுதிகள் துன்புறலாம்”..... என்பது எழுதாத பாடம் என்பதே இன்றையப் பதிவின் சாரம்.
    இதனை மெய்ப்பிக்க விவிலியத்திலிருந்தும், மகாபாரத்த்திலுமிருந்தும் நிகழ்வுகளைக் கையாண்டுள்ள விதம் நம்மையும் “ ஆமாம்! உண்மையே!” என்று தலையாட்ட வைக்கிறது.

    ஒட்டு மொத்த குடும்ப நலனுக்கு பெற்றோர் கஷ்டப்படுவது... பிள்ளை வெளிநாட்டில் வேலை செய்வது ....இதெல்லாம் கூட இன்றைய சாரத்தின் நீட்சி என்பதைப் புரிந்துகொள்ள மனம் மறுக்கிறது. இருப்பினும் ஒரு நிகழ்வைக் கூட்டிக்கழித்துப் பார்த்து “அதில் நாலு பேருக்கு நல்லதெனில் எதுவும் நியாயமே” என்று சொல்கிறது மனம். அதிலும் கொஞ்சம் கூடுதலாக “ எது தேவையோ அதுவே தருமம்” எனும் தந்தையின் வார்த்தைகள் மனத்தைக் கொஞ்சம் இலேசாக்குகின்றன.

    மனம் கலக்கத்தோடே ஒத்துக்கொள்ளும் பல விஷயங்களை நம் வாழ்வில் கடந்துதான் வருகிறோம். அதில் இன்றையப்பதிவில் வரும் நிகழ்வும் ஒன்று. தான் உணர்வதை உண்மையென மெய்ப்பிக்கத் தந்தை எடுத்திருக்கும் முயற்சிகளுக்கு என் பாராட்டுக்கள்! நன்றிகள்!!!

    ReplyDelete