Tuesday, March 9, 2021

மன்னிக்கப் பழகுதல்

இன்றைய (9 மார்ச் 2021) நற்செய்தி (மத் 18:21-35)

மன்னிக்கப் பழகுதல்

தனக்கு எதிராகப் பாவம் செய்யும் சகோதரர் ஒருவரை எண்ணிலடங்கா அளவில் மன்னிக்க வேண்டும் என்ற பாடத்தைத் தன் தலைவரிடமிருந்து பெறுகிறார் பேதுரு. 

அரசர் தன் பணியாளரை மன்னிக்கின்றார்.

ஆனால், அந்தப் பணியாள் தன் சகபணியாளை மன்னிக்க மறுக்கின்றார்.

தான் மன்னிக்கப்பட்டதை மறக்கின்றார்.

அவருடைய மன்னிக்காத செயல் அவருக்கு எதிராகத் திரும்புகிறது.

ஏன் அந்தப் பணியாளரால் மன்னிக்க இயலவில்லை?

இரக்கம் என்பதை மறந்து நீதி என்ற தளத்தில் செயலாற்றினான் அவன்.

எனக்கு எதிராகத் தீங்கிழைக்கும் ஒருவருக்கு நான் தீங்கிழைப்பது நீதியே. ஆனால், இரக்கம் என்பது நீதியைத் தாண்டுகிறது.

இறைவனின் இரக்கத்தில் நாம் வாழ்கிறோம்.

'நீர் என் குற்றங்களை நினைவில் கொண்டிருந்தால் யார்தான் நிலைத்திருக்க முடியும்?' என்று தன் ஆண்டவரை நோக்கிப் பாடுகின்றார் திருப்பாடல் ஆசிரியர்.

அவர் நம் குற்றங்களை நினைவில் கொண்டிராதபோது, நாம் ஏன் மற்றவர்களின் குற்றங்களை நினைவில்கொள்ள வேண்டும்.

அரசரைப் போல இருக்க வாய்ப்புக் கிடைத்தும், அந்தப் பணியாளன் ஒரு பணியாளனாகவே இருக்க முற்பட்டான்.

அரச நிலைக்கு உயர்ந்தால், நம் எண்ணங்கள் உயர்ந்தால் மன்னிப்பு நம் இரண்டாம் இயல்பாகிவிடும்.

2 comments:

  1. “மன்னிப்பு”..... மனித வாழ்வின் மகத்தான மணிமுடி.மன்னிக்கத் தெரிந்தவனே மனிதன். ..... என்றெல்லாம் கேட்கிறோம்.... பேசுகிறோம். தான் தலைவனால் மன்னிக்கப்பட்டும் அவருக்கு சகபணியாளரை மன்னிக்க மனமில்லை.இரக்கம் எனும் வார்த்தை நீதியாக மாறுவதாக்க் கூறுகிறார் தந்தை.சரியே!

    அவர் நம் குற்றங்களை நினைவில் கொள்ள வில்லை; என்னை அரசரைப்போல் நடத்த விரும்பியும் நான் பல நேரங்களில் பணியாளனாகவே இருக்க விழைகிறேன்.நம்மையும்,நம் எண்ணங்களையும் உயர்த்துகையில் “ மன்னிப்பு” என்பது நம் அன்றாட செயலாகிவிடும்.

    “ நீர் என் குற்றங்களைக்கொண்டிருந்தால் யார் தான் நிலைத்திருக்க முடியும்?” நம் மனத்தின் அடித்தளத்தில் இருக்க வேண்டிய இந்த நினைவு நம்மை தெய்வமாக்கிவிடும்!
    இன்றைய காலத்திற்கும்,மனித மனத்துக்கும் மிகத்தேவையான ஒரு வார்த்தை “மன்னிப்பு”. தேடிக்கொடுத்த தந்தைக்கு நன்றிகள்!

    ReplyDelete