Tuesday, March 16, 2021

உன்னை மறப்பதில்லை

இன்றைய (17 மார்ச் 2021) முதல் வாசகம் (எசாயா 49:8-15)

உன்னை மறப்பதில்லை

எசாயா நூலில் 42 முதல் 53 வரை உள்ள பகுதியில் நான்கு 'ஊழியன்' அல்லது 'பணியாளன்' பாடல்கள் உள்ளன. கடவுளின் பணியை இந்த உலகத்தில் செய்பவரே பணியாளர்.

முதல் பாடல் (42:1-4), ஊழியன், அனைத்து நாடுகளுக்கும் நீதியைக் கொணர்வதாக முன்மொழிகிறார்.

இரண்டாவது பாடலில் (49:1-6) அவருடைய பணியின் தன்மை வரையறுக்கப்படுகிறது. 

மூன்றாவது பாடலில் (50:4-9), 'ஊழியன்' என்ற வார்த்தை இல்லை. தான் மக்களின் பார்வையில் தோல்வியாக வீழ்ந்தாலும் ஆண்டவர் தனக்கு உதவி செய்வதாக (காண். எசா 50:7) உணர்கிறார் ஊழியன். 

நான்காவது பாடல் (52:13-53:12), தன் மௌனத்தால் அநீதிக்கான எதிர்ப்பைத் தெரிவிக்கின்றார்.

இன்றைய முதல் வாசகம் இரண்டாவது பாடலின் தொடர்ச்சியாக உள்ளது. 

யார் இந்த துன்புறும் ஊழியன்? என்ற கேள்வி இன்று வரை புரியாத புதிராகவே உள்ளது. இறைவாக்கினர் எசாயா என்றும், இஸ்ரயேல் மக்கள் என்றும், மோசே என்றும், தாவீது என்றும், வரவிருக்கின்ற மெசியா என்றும் விடைகள் தரப்படுகின்றன. 'துன்புறும் ஊழியன் அல்லது பணியாளன்' என்னும் சொல்லாட்சி 'இஸ்ரயேல் மக்களைக்' குறிக்கிறது என்பது பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கிறது.

இன்றைய முதல் வாசகம் மூன்று பகுதிகளாக அமைந்துள்ளது:

(அ) வழிநடத்தும் இரக்கம்

பாபிலோனிய அடிமைத்தனத்தில் சிக்குண்டு கிடக்கும் இஸ்ரயேல் மக்கள் தங்கள் சொந்த நாட்டிற்குத் திரும்புவார்கள் என்று இறைவாக்குரைக்கின்ற எசாயா, ஆண்டவர்தாமே தகுந்த வேளையில் அவர்களை வழிநடத்துவதாக முன்மொழிகின்றார். 

(ஆ) மலைகளிடையே வழி

அவர்கள் திரும்பி வருகின்ற பாதை மலைப்பாங்கான பாதையாக இருந்தாலும், வெயிலும் வெப்பக் காற்றும் அவர்களை வாட்டி வதைத்தாலும் அவர்களுக்கு பாதுகாப்பை உறுதிசெய்கின்றார்.

(இ) மறவாத கடவுள்

'தாய் தன் குழந்தையை மறந்திடினும் நான் உன்னை மறக்கவே மாட்டேன்' என்கிறார் ஆண்டவராகிய கடவுள். கடவுள் மனிதர்களை நினைவுகூர்வதால்தான் இந்த உலகம் நிலைத்து நிற்கிறது என்பது அன்றைய நம்பிக்கை. பாபிலோனிய அடிமைத்தனத்தில் இருந்தவர்கள் கடவுள் தங்களை மறந்துவிட்டதாக நினைத்தனர். இந்தப் பின்புலத்தில் கடவுள் தான் அவர்களை மறப்பதில்லை என்ற வாக்குறுதி தருகின்றார்.

வாழ்வின் வெறுமை, தனிமை, மற்றும் இயலாமையில் இறைவன் தன் உடனிருப்பை அவர்களுக்குக் காட்டுகின்றார். 

இறைவன் நம்மை நினைவுகூர்தல் நாம் பெற்றிருக்கும் பெரும் பேறு.

1 comment:

  1. “Need of the hour”...... “ உன்னை மறப்பதில்லை”.... ஒரு தாயின் தாலாட்டாக ஒலிக்கிறது.” துன்புறும் ஊழியன்” எனும் சொல் யாரை வேண்டுமானாலும் குறிக்கட்டும். என்னை அதிகம் கவர்ந்தது இன்றைய வாசகம் தரும் செய்திகளே! ஆண்டவர் தாமே தம் மக்களை என்றென்றும் வழி நடத்திக் கரை சேர்ப்பார் என்பதும்,கடந்து வரும் பாதை கரடு முரடாக இருப்பினும் இறைவன் அவர்களை வழி நடத்துகிறார் என்பதும், தாய் மறந்திடினும் இறைவன் தன் மக்களை மறப்பதில்லை என்பதும் இன்றையப் பதிவின் அச்சில் வார்த்த வார்த்தைகள்.

    “வாழ்வு நம்மை எப்படி வறுத்தெடுத்தாலும் நம் இறைவன் தன் உடனிருப்பால் நம்மை வழி நடத்துகிறார்” என்று என்னாலும் சொல்ல முடியுமெனில் நானும் பேறுபெற்றவளே!

    வியாதியும்...வெறுமையும், தனிமையும்,வயோதிகமும் ஒன்றையொன்று கௌவிக்குதற காத்திருக்கும் இந்நாட்களில் தந்தையிடமிருந்து வரும் இந்த இறை வார்த்தைகள் மயிலிறகாய் நம்மை வருடுகின்றன. தந்தைக்குப் பாராட்டும்! நன்றியும்!!!

    ReplyDelete