Wednesday, October 21, 2020

மிகவும் மேலாக

இன்றைய (22 அக்டோபர் 2020) முதல் வாசகம் (எபே 3:14-21)

மிகவும் மேலாக

தனது மனமாற்றத்தின் பேறுகால வேதனை நிறைவுற்று, தன் பழைய வாழ்க்கைக்கு, 'இல்லை' என்று சொல்லித் தன் முதுகைத் திருப்பி, புதிய வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கிறார் அகுஸ்தினார். 'நான் மனம் மாறிவிட்டேன். இனி மனிக்கேயத்தின் பின்னும், பிறழ்வுபட்ட வாழ்க்கையின் பின்னும் நான் செல்ல மாட்டேன்' என உறுதியெடுக்கிறார் அவர். இந்த நற்செய்தியைச் சொல்ல அவர் தன் தாய் மோனிக்காவிடம் ஓடுகின்றார். மூச்சிரைக்க ஓடிய அவர், 'அம்மா! நான் கிறிஸ்தவத்தில் திருமுழுக்கு பெற வேண்டுமென விரும்பினீர்கள். நானோ, கிறிஸ்துவின் பணியாளராக மாற விரும்புகிறேன்' என அவர் மொழிந்தபோது, மோனிக்காவின் உள்ளத்தில் எழுந்த வார்த்தைகளாக புனித அகுஸ்தினார் இன்றைய முதல் வாசகத்தின் வார்த்தைகளையே பதிவு செய்கின்றார்:

'என் மனமாற்றத்தின் செய்தி கேட்ட உம் அடியவள், நம்முள் வல்லமையோடு செயல்பவரும், நாம் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் மேலாக அனைத்தையும் செய்ய வல்லவருமான உம் அருள்பெருக்கை நினைத்துக் கண்ணீர் மல்கி, உமக்கு நன்றி செலுத்தினாள்.'

புனித பவுல், எபேசியருக்கு எழுதும் திருமடல், அவரது ஆன்மீக முதிர்ச்சியையும், ஆழ்ந்த இறையனுபவத்தையும் கண்டுககொள்ள உதவுகிறது.

எபேசு நகர இறைமக்கள் ஒருவரையொருவர் அன்பு செய்ய வேண்டும் என முதலில் அறிவுறுத்துகிறார் பவுல்: 'அன்பே உங்கள் வாழ்வுக்கு ஆணிவேரும் அடித்தளமுமாய் அமைவதாக!' முதல் உருவகம் விவசாயம் சார்ந்தது, இரண்டாவது கட்டடம் கட்டுதல் சார்ந்தது. ஆணிவேர் ஒரு மரத்தின் நிமிர்ந்து நிற்பதற்கான வலுவைத் தருவதுடன், மரத்திற்குத் தேவையான ஊட்டத்தை மிக ஆழத்திலிருந்து பெற்றுத் தருகிறது. கட்டடம் நிலைத்து நிற்பதும், அதன் மேல் இன்னொரு மாடி எழுப்பவதும் அடித்தளத்தின் வலிமையைப் பொருத்ததே. ஆனால், ஆணிவேரையும் அடித்தளத்தையும் நம் கண்களால் காண இயலாது என்றாலும், மறைந்திருக்கும் அவையே, முறையே, மரத்திற்கும், கட்டடத்திற்கும் தாங்குதளமாய் இருக்கின்றன. ஆக, இறைமக்களின் வாழ்வு அன்பில் கட்டப்பட்டதாக இருக்க வேண்டும். அன்பு என்பதற்கு, 'அகாபே' ('தற்கையளிப்பு செய்யும் அன்பு') என்னும் சொல்லாடலைப் பயன்படுத்துகிறார் பவுல்.

தொடர்ந்து, அவர்கள் இறைமக்களோடு இணைய வேண்டும்.

ஆக, அன்பு என்பது தனக்கென வைத்துக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றல்ல. மாறாக, பகிரப்பட வேண்டியது.

அப்படி இறைமக்களோடு இணைவதால் என்ன நடக்கிறது?

ஒருவர், 'கிறிஸ்துவுடைய அன்பின் அகலம், நீளம், உயரம், ஆழம் என்னவென்று உணர்ந்து, அறிவுக்கு எட்டாத இந்த அன்பை அறிந்து கொள்ளும் ஆற்றல் பெற முடியும்!'

இங்கும் பவுல் கட்டடத்தின் உருவகத்தையே பயன்படுத்துகிறார். அறிவுக்கு எட்டாத கிறிஸ்துவின் அன்பை நமக்கு அருகில் இருக்கும் சகோதர சகோதரிகளை அன்பு செய்வதில் அறிந்துகொள்ளலாம் என நமக்குப் பவுல் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறது, ஒருவர் மற்றவரை அன்பு செய்யத் தூண்டி எழுப்புகிறது.

இறுதியாக, கடவுள் நம்முள் வல்லமையோடு செயலாற்றுவதுடன், நாம் வேண்டுவதற்கும் நினைப்பதற்கும் மேலாகக் கொடைகளால் நம்மை அணிசெய்கின்றார். 'என் பாத்திரம் நிரம்பி வழிகிறது' (காண். திபா 23:5) என்னும் திருப்பாடல் ஆசிரியரின் அனுபவத்தை ஒத்த வார்த்தைகளாக இருக்கின்றன இவை.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 12:49-53), கடவுளை ஒருவர் தெரிந்துகொண்டு அன்பு செய்வதால் உறவுகள் நடுவில் ஏற்படும் பிளவுகள் மற்றும் அமைதியின்மை பற்றி இயேசு பேசுகின்றார். கடவுளின் அன்பை அறிவதற்கான முதற்படியில் பிரிவுகள் வரலாம். ஆனால், பிரிவுகள் வந்தாலும் அவர்களை அவர்களுக்காகத் தழுவிக்கொள்ளும்போது, கடவுள் மிகவும் மேலாக நம்மிடம் செயலாற்றுவார்.

1 comment:

  1. முற்றிலும் ‘ அன்பை’ அடித்தளமாக வைத்துக்கட்டப்பட்ட ஒரு பதிவு.புனித அகுஸ்தினாரின் வார்த்தைகளால்,தூய பவுலடியாரின் எழுத்துக்காளால், இறுதியாக அண்ணல் இயேசுவின் உறவில் ஏற்படும் சிக்கல்கள் பற்றிய வார்த்தைப் பகிர்வுகளால் ‘அன்பின் பல பரிமாணங்கள்’ வெளிச்சத்திற்கு வருகின்றன.உண்மையான அன்பின் தன்மை நம்மை இறைவனின் கொடைகளால் நிரப்பி நம் பாத்திரத்தையும் நிரம்பி வழியச் செய்கிறது. பிரிவுகள் மத்தியிலும் நம் அயலானைத் தழுவும்போது இயேசு நம்மிடம் செயலாற்றுவார்......அன்பு பகிரப்படும்போது நமக்கு கிடைக்கும் இறைவனின் அரவணைப்பைத் தனக்கே உரித்தான வார்த்தைகளில் விவரித்த தந்தைக்கு நன்றிகளும்! வாழ்த்துக்களும்!!!

    ReplyDelete