Tuesday, October 13, 2020

இருவகை இயல்புகள்

இன்றைய (14 அக்டோபர் 2020) முதல் வாசகம் (கலா 5:18-25)

இருவகை இயல்புகள்

ஆகார் உடன்படிக்கை, சாரா உடன்படிக்கை என்று இரு உருவகங்களைக் கையாண்டு, முதல் வகை உடன்படிக்கை மனித இயல்பு அல்லது செயல்களின் அடிப்படையில் ஆனது என்றும், இரண்டாம் வகை உடன்படிக்கை வாக்குறுதி அல்லது அருளின் அடிப்படையில் ஆனது என்றும் வரையறுக்கின்ற புனித பவுல், இருவகை இயல்புகள் பற்றிப் பேசுகின்றார்: (அ) ஊனியல்பு, மற்றும் (ஆ) ஆவிக்குரிய இயல்பு.

ஊனியல்பின் செயல்களாக, பரத்தைமை, கெட்ட நடத்தை, காமவெறி, சிலை வழிபாடு, பில்லி சூனியம், பகைமை, சண்டை சச்சரவு, பொறாமை, சீற்றம், கட்சி மனப்பான்மை, பிரிவினை, பிளவு, அழுக்காறு, குடிவெறி, களியாட்டம் ஆகியவற்றை முன்வைக்கிறார்.

தொடர்ந்து, தூய ஆவியின் கனிகள் என, அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் ஆகியவற்றைப் பதிவு செய்கின்றார்.

பவுலின் சமகாலத்துக் கிரேக்க இலக்கியத்தில், நேர்முக மற்றும் எதிர்மறை மதிப்பீடுகளைப் பட்டியலிட்டு எழுதுவது மரபு. அந்த மரபின் பின்புலத்தில்தான், பவுல் மேற்காணும் பட்டியலை வரைகின்றார்.

தொடர்ந்து, 'நீ கிறிஸ்து இயேசுவுக்கு உரியவரா? இல்லையா?' என்ற கேள்வியை எழுப்புகின்றார்.

கிறிஸ்து இயேசுவுக்கு உரியவர் என்றால் ஊனியல்பை அதன் உணர்ச்சிகளோடும் இச்சைகளோடும் சேர்த்துச் சிலுவையில் அறைந்துவிடு என்கிறார்.

உணர்ச்சிகள் மற்றும் இச்சைகள் நம் பாதையிலிருந்து நம்மைப் பிறழ்வுபடுத்துகின்றன. இவை சிறிது நேரம் நீடிப்பவை. ஆனால், அவற்றின்பின் செல்வதால் ஏற்படும் தாக்கங்கள் நிறைய ஆண்டுகள் நீடிப்பவை.

சிலுவையில் அறைந்துவிடுதல் என்பது, அவற்றை முழுமையாக அழித்துவிடுவது.

அதன் முதற்படியாக, 

நம் உணர்ச்சிகள் மற்றும் இச்சைகள் ஆகியவற்றைப் பட்டியலிட வேண்டும்.

இரண்டு, அவற்றை விடுவதற்கான தீர்மானம் எடுக்க வேண்டும்.

மூன்று, ஒவ்வொரு நாளும் என்னும் பாதையைத் தெரிவு செய்ய வேண்டும்.

ஊனியல்பின்படி நடந்துகொண்டு, ஆவிக்குரிய இயல்பை நாடும்போது நம் வாழ்வு முன்னுக்குப் பின் முரணாக இருக்கும்.

அப்படிப்பட்ட முரண்பட்ட வாழ்வு வாழ்ந்த பரிசேயர்களையும், திருச்சட்ட அறிஞர்களையும் இன்றைய நற்செய்தி வாசகத்தில் (காண். லூக் 11:42-46) சாடுகின்றார் இயேசு.

1 comment:

  1. கிறிஸ்துவுக்கு உரியவரெனில் ஊனியல்பை அதன் உணர்ச்சிகளோடும், இச்சைகளோடும் சேர்த்து சிறிது சிலுவையில் அறையப்பட நான் தயாரா?
    ஊனியலின்படி நடந்து கொண்டு,ஆவிக்குரிய இயல்பை நாடுகையில் என் வாழ்வு முன்னுக்குப் பின் முரணாக இருக்கும்.
    அன்று பரிசேயர்களை இயேசு சாடியதுபோல் என்னையும் சாட வேண்டுமா?
    வேண்டாமே! என்னையும் சிலுவையில் முழுமையாக அறைந்துவிடவும்,அழித்து விடவுமே விரும்புகிறேன். இயலுமா? இயல வேண்டும்! தூண்டிவிட்ட திரியான தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete