Sunday, October 18, 2020

நீ சேர்த்து வைத்தவை

இன்றைய (19 அக்டோபர் 2020) நற்செய்தி (லூக் 12:13-21)

நீ சேர்த்து வைத்தவை

'சீசருக்கு உரியதை சீசருக்கும், கடவுளுக்கும் உரியதைக் கடவுளுக்கும் கொடுங்கள்' என்று இயேசு சொன்னதைக் கேள்வியுற்ற, அல்லது கேள்வியுறாத ஒருவர், கூட்டத்தில் இயேசுவிடம், 'போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக்கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்!' என்கிறார்.

ரபிக்களிடம் சொத்து பிரித்தல் பற்றிய பிரச்சனைகள் அன்றைய பாலஸ்தீனத்தில் கொண்டுவரப்படுவதுண்டு. அந்த எண்ணத்தில் தான் இந்த இளவலும் பிரச்சனையை இயேசுவிடம் கொண்டு வருகிறார். ஆனால், பாவம்! 'இந்த ரபிக்கு, தலைசாய்க்கவும் இடமில்லை!' என்பது அவருக்குத் தெரியவில்லை. 'என்னை உங்களுக்கு நடுவராக நியமித்தவர் யார்?' என்று கேட்கிறார் இயேசு. இதே கேள்வி, மோசேயைப் பார்த்து எகிப்தில், எபிரேயன் ஒருவனால் கேட்கப்படுகிறது: 'எங்கள்மேல் உன்னைத் தலைவனாகவும் நடுவனாகவும் நியமித்தவன் எவன்?' (காண். விப 2:14).

அந்த இளவலின் கேள்வியின் பின்புலத்தில், இயேசு, 'தூங்குகின்ற செல்வன்' உவமை சொல்லி, மூன்று கருத்துகளை முன்வைக்கின்றார்:

(அ) எவ்வகை பேராசைக்கும் இடம் கொடாதீர்கள்.

(ஆ) மிகுதியான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது.

(இ) கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர், தங்களோடு செல்வத்தைக் கொண்டு செல்ல இயலாது.

இந்த உவமையில் வரும் செல்வன் ஒரு நல்ல உழைப்பாளர், மேலாளர், மற்றும் நிர்வாகி. தன் உழைப்பால், தன் நிர்வாகத் திறனால், தன் திட்டமிடுதலால் நிறைய விளைபொருள்களைச் சேகரிக்கின்றார் - சேர்த்து வைக்க இடம் இல்லாத அளவுக்கு. மேலும், 'நீ ஓய்வெடு, உண்டு குடித்து மகிழ்ச்சியில் திளைத்திடு' என்று தன் மனத்திற்குச் சொல்கிறான்.

மூன்று விடயங்களை அவன் மறந்துவிடுகிறான்:

(அ) உழைப்பு அவனுடையதுதான். ஆனால், நிலத்தை விளையச் செய்பவர் இறைவன். ஆக, இறைவனை மறந்துவிடுகிறான். அவனுடைய செல்வத்தின் வெள்ளிப் பூச்சு, கண்ணாடியில் அவன் முகத்தை மட்டுமே காட்டுகிறது.

(ஆ) செல்வத்தால், தானியத்தால், விளைபொருள்களால் வாங்க முடியாத ஒன்று இருக்கிறது - அதாவது, உயிர் - என்பதை மறந்துவிடுகிறான். ஆக, செல்வம் அவனை உடல்சார்ந்து மட்டும் சிந்திக்க வைக்கிறது.

(இ) களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்ட விரும்பும் அவன், தன் அயலார்களின் காலியான வயிறுகளே களஞ்சியங்கள் என்பதை மறந்துவிடுகிறான். பிறரன்புச் செயல்கள் செய்யவும், பகிரவும் தவறுகிறான். ஆனால், பல நேரங்களில் மற்றவர் கேட்காமல் நாம் பிறருக்குச் செய்யும் உதவிகள் அவர்களுக்குச் சுமையாகவும், செய்யும் நமக்கு விரக்தியாகவும் மாறிவிடுகிறது என்பது என் தனிப்பட்ட அனுபவம். ஏனெனில், நம் உழைப்பின் பயனை அவர்கள் மதிக்காமல், நமக்கு ஏதோ அந்தப் பணம் இலவசமாகக் கிடைத்ததாக எண்ணி, நம்மைத் திருடன் போலப் பார்க்கத் தொடங்குவதுடன், 'உங்களுடைய திருட்டில் இன்னும் பங்கு தாருங்கள்!' என்று சில நேரங்களில் நம்மை வற்புறுத்துவதுபோல நடந்துகொள்வார்கள். இருந்தாலும், பகிர்தல் நலம்.

இயேசுவின் இறுதிக் கேள்வி, நம் வாழ்வின் ஒவ்வொரு பொழுதும் ஒலித்துக்கொண்டே இருக்க வேண்டும். அது என்ன?

'நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?'

நீ சேர்த்து வைத்த பெயர், புகழ், பணம், வீடு, வாசல், தோட்டம், தோப்பு, வாகனம் எதுவும் நம்முடையது இல்லை என்றால், அல்லது அது வேறு யாருக்கோ போய்விடும் என்றால், தூக்கம் மறந்து உழைப்பதும், தூக்கம் இல்லாமல் மனக்கோட்டைகள் கட்டுவதும் ஏன்?

1 comment:

  1. “களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாக க் கட்ட விரும்பும் அவன், தன் அயலானின் காலியான வயிறுகளே அந்தக் களஞ்சியங்கள் என்பதை மறந்து விடுகிறான்.”நம் உடைகளை,ஆடைஅணிகலன்களை,பேன்க் பாலன்ஸை கூட்டிக்கொண்டே போக நினைக்கும் நம்மில் சிலரின் மனசாட்சியை இடிக்கும் உண்மை.நாம் சேர்த்து வைத்த அத்தனையும் நமக்கு இல்லையெனில்,அவற்றை அனுபவிக்க யாரோ,எங்கோ இருக்கிறார்கள் எனும் பட்சத்தில் தூக்கம் மறந்து உழைப்பதும்,மனக்கோட்டைகள் கட்டுவதும் ஏன்? நம்மை சீண்டும் இன்னொரு கடப்பாரை.நான் சேர்த்து வைத்திருப்பது பார்த்து மகிழவா இல்லை என் அயலானோடு பகிரவா? நம் மனத்தை தன் உசுப்பிவிடும் கேள்விகள் கொண்டு பண்படுத்த முயலும் தந்தைக்கு என் நன்றிகள்! இந்த வாரம் இனிதே இருக்க வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete