Wednesday, February 28, 2018

அதை நினைத்துக்கொள்!

நாளைய (28.02.2018) நற்செய்தி (லூக் 16:19-31)

அதை நினைத்துக்கொள்!

அலுவலக நிதி பரிமாற்றம் தொடர்பாக இன்று இரண்டு வங்கிகளுக்குச் செல்ல நேரிட்டது.

மதுரை புதூரில் இருக்கும் இந்தியன் வங்கி. கே.கே. நகரில் இருக்கும் எச்டிஎப்சி வங்கி.
இந்தியன் வங்கி கூட்டத்தால் நிரம்பியது. எச்டிஎப்சி கூட்டமின்றி இருந்தது.
இந்தியன் வங்கிக்கு வெளியே நிறைய சைக்கிள்களும் சில பைக்குகளும் இருந்தன. மற்ற வங்கிக்கு வெளியே பைக்குகளும் சில கார்களும் நின்றன.

நான் சலான் நிரப்பிக் கொண்டிருந்தபோது 'கேசவன்' என்பவர் அருகில் வந்து தனக்கு ஒரு சலான் நிரப்புமாறு சொன்னார். தான் அடகு வைத்துள்ள தங்க நகையை திருப்ப வந்திருப்பதாகச் சொன்னார். அவர் அடகு வைத்து திருப்ப நினைத்த நகை என்னவென்று தெரியவில்லை. ஆனால், அவர் முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி தெரிந்தது. சலான் நிரப்பி அவரைக் கவுண்டருக்கு அனுப்பிவிட்டு என் சலானைத் தொடர்ந்தேன். அங்கே மற்றொரு பெண் தன் நகையை அடகுவைக்குமாறு அங்கே வந்திருந்தார். தன் தாலியைத் தான் அடகு வைக்க வந்திருப்பார் என நினைக்கிறேன். ஏனெனில் புதிதாய் அவர் கழுத்தில் தொங்கிய மஞ்சள்கயிறு அப்படியே அவரது கறுப்பான தேகத்தில் பளிச்சென தெரிந்தது. 'எந்தச் சலான் நிரப்ப வேண்டும்?' என்று என்னிடம் கேட்டார். அதற்குள், 'நகையை வைக்க நேர கவுண்டருக்கு போங்க' என்று கேசவன் சொல்ல அந்தப் பெண் அங்கே சென்றுவிட்டார்.

ஒரே இடம். ஒரே நேரம்.
ஆனால், வாழ்க்கை மட்டும் ஒருவருக்கு வரவாகவும், மற்றவருக்கு செலவாகவும் இருக்கிறது.
இது ஏன்?

நிற்க.

'மகனே, நீ உன் வாழ்நாள்களில் நலன்களையே பெற்றாய். அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக்கொள்!'

செல்வந்தர் - இலாசர் எடுத்துக்காட்டில் செல்வந்தனைப் பார்த்து ஆபிரகாம் சொல்லும் வார்த்தைகள் இவை.

வாழ்நாள்களில் பெற்ற நலன்களை மறந்துவிட்டதுதான் செல்வந்தன் செய்த தவறு.

இன்னல்களில் இருப்பவர்களுக்கு எண்ணமெல்லாம் தங்கள் இன்னல்கள் பற்றியே இருக்கும். அவர்களுக்கு மற்றவர்களைப் பற்றி எண்ண நேரமும், ஆற்றலும் இருக்காது. ஆனால், நலன்கள் பெற்றவர்களுக்கு அடுத்தவர்களைப் பற்றி எண்ண நேரமும், ஆற்றலும் நிறைய இருக்கும்.

நாம் பெற்ற நலன்களை எந்நேரமும் நினைவில் கொள்ள நாளை நாம் அழைக்கப்படுகிறோம். நம் நலன்களை நாம் நினைவில்கொள்ளும்போது நலன்கள் குன்றியவர்களை நாம் நினைத்துப்பார்க்க ஆரம்பிப்போம்.


1 comment:

  1. " மகனே நீ உன் வாழ்நாளில் நலன்களைப்பெற்றாய்.அதே வேளையில் இலாசர் இன்னல்களை அடைந்தார்.அதை நினைத்துக்கொள்." அபிரகாம் செல்வந்தரைப்பார்த்துக் கூறும் இந்த வார்த்தைகள் நம்முள்ளும் எச்சரிக்கை மணியை அடிப்பது போல் தெரிகிறது.நலன்களைப் பெற்றவர்களுக்கு அடுத்தவரைப்பற்றி எண்ண நேரமும்,ஆற்றலும் நிறைய இருக்கும் என்பதை விட " இருக்க வேண்டும்" எனும் வார்த்தை பொருத்தமாக இருக்கும் என்றெண்ணுகிறேன். நாம் ஓடுகிற இந்தப்பந்தயத்தை சற்றே நிறுத்தி ஒரு நிமிடம் திரும்பிப்பார்த்து நாம் பெற்ற நலன்களை நினைத்துப்பார்ப்பதோடல்லாமல் நலன் குன்றியவர்களையும் நினைவில் கொண்டால் இந்தத் தவக்காலம் நமக்கு ஆசீர்வாத்த்தின் காலமே! " ஒரே இடத்தில்,ஒரே நேரத்தில் இருவர் இருக்க ஒருவருக்கு வாழ்க்கை வரவாகவும்,அடுத்தவருக்கு செலவாகவும். இருக்கிறதே!அது ஏன்?" என்கிறார் தந்தை.இக்கேள்விக்கு யார் பதில் தர இயலும் நம்மைப்படைத்தவரைத்தவிர? காலத்திற்கேற்ற கருத்து சொல்லும் தந்தைக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete