Sunday, February 25, 2018

அமுக்கி குலுக்கி

நாளைய (26 பிப்ரவரி 2018) நற்செய்தி (லூக் 6:36-39)

அமுக்கி குலுக்கி

என் சிறுவயதில் எங்கள் வீட்டிற்கு அருகில் கிருஷ்ணசாமி நாயக்கர் அவர்களின் மாட்டுக்கொட்டகை இருந்தது. மாட்டுக்கொட்டகைதான் எங்கள் மாலைநேர விளையாட்டுக்கூடம். மாலை நேரத்தில் கறந்த பாலை ஊரில் உள்ளவர்களுக்கு விநியோகம் செய்வார் நாயக்கர். உள்ளுர்காரர்கள், வெளியூர்க்காரர்கள் என நிறையப்பேர் வருவார்கள். அதிகமாக 200 மிலி வாங்கும் அளவிற்குத்தான் எங்கள் ஊரின் நடுத்தர மக்களின் பொருளாதார நிலை இருந்தது. அப்படி வாங்கும் 200 மிலியை சரியாக அளந்து - அதாவது, ஒரு சொட்டுக்கூட வெளியில் ஊற்றாமல் - வழங்குவார் நாயக்கர். ஆனால், சிலருக்கு மட்டும் மிலி அளவை நிறைந்து வழியும் மட்டும் எடுத்து ஊற்றுவார். அப்படி எக்ஸ்டரா வருவது 2 அல்லது 5 மிலியாக இருக்கும். ஆனாலும் சிலருக்கு மட்டும் அவரின் கண்களில் தயை இருந்தது.

இதே போலத்தான் எங்க ஊரு பூசாரி. மாலையில் பூ கோர்த்து வீடுகளுக்கு விற்க வருவார். 100 பூ வாங்கும் சிலருக்கு 100 பூக்களை எண்ணி, மீண்டும் சில பூக்களை எண்ணி நூல் கொஞ்சம் அகல விட்டு வெட்டி மடியில் போடுவார். சிலருக்கு மட்டுமே இவரின் கண்களிலும் தயை கிடைத்தது.

'மனித கண்களில் தயை கிடைக்கும்போது' அவர்கள் 'அமுக்கு குலுக்கி சரிந்து விழும்படி மடியில் அளந்துபோடுவார்கள்' என்பது ரூத்து நூலில் நாம் காணும் நிகழ்வும்கூட.

நாளைய நற்செய்தியில் 'அமுக்கி குழுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து உங்கள் மடியில் போடுவார்கள்' - இந்த வாக்கியத்தின் பின்புலம் கோதுமை அல்லது பார்லி அறுவடையாகத்தான் இருக்கும்.

இதன் பொருள் என்னவென்றால் தாராளமாக இருப்பவர்கள் தாராளமாக பெறுவார்கள். கணக்கு பார்க்காமல் கொடுப்பவர்களுக்குக் கணக்குப் பார்க்காமல் கொடுக்கப்படும். கொடுப்பவன் தான் கொடுக்கின்ற அளவைக்கு ஏற்றாற்போல கொடுத்தால் போதும்தான். ஆனாலும், அவன் அமுக்கி குலுக்கி கொடுக்கும்போது தன்னிடம் உள்ளதை அடுத்தவருக்காக இழக்கத் துணிகிறான்.

ஆக, இரக்கம், மன்னிப்பு, கண்டனமின்மை, தாராள உள்ளம் என நாம் தாராளமாக இருந்தால் தாராளமாக அங்கே திரும்பி வரும்.

வாழ்வின் முக்கியமானவைகளும், இனிமையானவைகளும் அளவைகளுக்குள்ளும், அறிவியலுக்குள்ளும் வருவதில்லை. அவைகள் அவற்றைத் தாண்டியே நிற்கின்றன.


1 comment:

  1. தந்தையின் அந்த இறுதி இரு வரிகளை வாசித்தாலே போதும் பதிவின் உள்ளே என்ன இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள." வாழ்வின் முக்கியமானவைகளும்,இனிமையானவைகளும்அளவைகளுக்குள்ளும்,அறிவியலுக்குள்ளும் வருவதில்லை.அவைகள் அவற்றைத்தாண்டியே நிற்கின்றன." எனும் வரிகளே அவை.மனித கண்களில் தயை கிடைக்கும்போது 'அவர்கள்'அமுக்கிக் குலுக்கி சரிந்து விழும்படி மடியில் அளந்து போடுவார்கள்.... எனக்கு மிகவும் பிடித்த வரிகள். " கொடுத்தலின் இன்பம் பெறுவதில் இல்லை" இதை வாழ்ந்து பார்த்தால்தான் இதன் அர்த்தம் புரியும்.தந்தை குறிப்பிடும் கிருஷ்ணசாமி நாயக்கரும்,பூக்காரப் பூசாரியும் காண்பித்தது மனிதர் பார்வையில் தயையாக இருக்கலாம்; ஆனால் தன்னிடம் உள்ளதை அடுத்தவருக்காக இழக்கத்துணியும்போது இரக்கம்,மன்னிப்பு, கண்டனமின்மை,தாராள உள்ளம் என்பவை அனைத்தும் நம்மைத்தேடி வரும் என்கிறார் தந்தை.தவக்காலத்துக்கு ஏற்றதொரு பதிவைத்தந்த தந்தைக்கு என் நன்றிகள்!!!

    ReplyDelete