Thursday, February 8, 2018

கூட்டத்திலிருந்து வெளியே

நாளைய (9 பிப்ரவரி 2018) நற்செய்தி (மாற்கு 7:31-37)

கூட்டத்திலிருந்து வெளியே

'நாம் எதற்காக புறணி பேசுகிறோம்?' என்ற தலைப்பில் இணையதளத்தில் ஒரு கட்டுரையை வாசித்தேன். 'புறணி பேசுதல்' என்பது 'நாம் ஒருவர் மற்றவரோடு இணைந்திருக்கிறோம் என்பதையும், இணைய வேண்டும் என்ற ஆர்வத்தையும் அது காட்டுகிறது' என்று அந்தக் கட்டுரையாசிரியர் குறிப்பிடுகின்றார்.

மற்றவரோடு இணைந்திருத்தல் என்பது இன்று ஒருவர் மற்றவரோடு உள்ள உடல் சார்ந்த இணைந்திருத்தலைவிட இன்று அலைபேசி, இணையதளம், சமூக உறவுத்தளங்கள் என பல நிலைகளில் சாத்தியமாகிறது.

'நல்லா இருக்கீங்களா?' என்று மற்றவரைக் கேட்பதைவிட, 'வாட்ஸ்ஆப்ல இருக்கீங்களா?' என்றுதான் பல நேரங்களில் நாம் கேட்கின்றோம்.

கூட்டத்தோடு இணைந்திருத்தல் எல்லா நேரங்களிலுமே நன்மையைத் தரும் என்றால் அது தவறு.

நிற்க.

நாளைய நற்செய்தி வாசகத்தில் காதுகேளாதவரும், திக்கிப்பேசுபவருமான ஒருவரை சிலர் இயேசுவிடம் கொண்டுவருகின்றனர். உடனே இயேசு அந்த நபரைக் கூட்டத்தைவிட்டு வெளியே அழைத்துச் செல்கின்றார்.

இயேசுவின் இந்தச் செயலுக்கு நான் இரண்டு காரணங்களை ஊகிக்கிறேன்:

ஒன்று, இந்தக் கூட்டம் திக்கிப் பேசுகின்ற, காதுகேளாத இந்த நபரை இதுவரை கிண்டல் செய்த கூட்டமாக இருந்திருக்கும்.
இரண்டு, அந்த நபரின் காதுகளில் விரலைவிட்டு, நாவைத் தொட்டு அவரைக் குணமாக்கும் செயல் ஒருவேளை மக்கள் நடுவில் இயேசுவைக் கிண்டல் செய்வதற்கான ஒன்றாக மாறியிருக்கலாம்.

அல்லது, வேறு ஏதாவது காரணம் இருக்கலாம்.
ஆனால், இயேசு கூட்டத்தைவிட்டு அவரைத் தனியே அழைத்துச்செல்கின்றார். சென்று, 'எப்பத்தா' ('திறக்கப்படு') என்கிறார். சிலநேரங்களில் நமது வாழ்விலும் இந்தத் திறக்கப்படுதல் அவசியமாகிறது. நாம் கூட்டத்தைவிட்டு தனியாகச் செல்லும்போதுததான் நம் வாழ்வு என்னும் புதிர் திறக்கப்படுகிறது.

நன்மை தீமை அறியும் கனி ஏவாளுக்குக் கிடைத்தது அவர் தனியாக இருக்கும்போதுதான்.
யாக்கோபுவிற்கு இஸ்ரயேல் என்ற பெயர் கிடைத்தது அவர் தனியாக இருக்கும்போதுதான்.
மோசேக்கு யாவே இறைவன் தன்னை வெளிப்படுத்தியது அவர் தனியாக இருக்கும்போதுதான்.
ஊதாரி மைந்தன் தன் நிலை உணர்ந்தது அவர் தனியாக இருக்கும்போதுதான்.

ஆக, கூட்டத்தைவிட்டு விலகிச்செல்லும்போது பல நிலைகளில் வாழ்க்கை நமக்கு 'திறக்கிறது.'
இன்று கூட்டம் சார்ந்த அனைத்தையும் மூடிவிட்டு, கொஞ்சம் தனிமைக்குக் கதவுகளைத் திறக்கலாமே!


2 comments:

  1. " தனிமை" யின் அவசியத்தை எடுத்துச்சொல்லும் ஒரு பதிவு. சில நேரங்களில் நமது வாழ்விலும் " எப்பத்தா" எனும் திறக்கப்படுதல் அவசியமாகிறது; இந்தத் "திறக்கப்படுதல்" நாம் தனிமையில் இருக்கையில் தான் சாத்தியமாகிறது என்று கூறும் தந்தை.அவரது கூற்றை மெய்ப்பிக்க ஏவாள்,யாக்கோபு, மோசே, ஊதாரி மைந்தன் ... இவர்களின் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க வைக்கிறார்.அதே "தனிமையை" நானும் அனுபவிக்க கூட்டம் சார்ந்த அனைத்தையும் மூடிவிட்டுத் தனிமைக்குக் கதவுகளைத் திறக்க வழியும் சொல்கிறார்." தவக்காலத்தை" நோக்கிக்காத்திருக்கும் நமக்கு " நல்ல ஆரம்பமாக" அமையட்டுமே!

    தந்தையின் " புறணிபேசுதல்" பற்றிய இணையதளக் கட்டுரையின் சாரமாக "புறணி பேசுதல்" என்பது நாம் மற்றவரோடு இணைந்திருக்கிறோம் என்பதையும், இணையவேண்டும் என்பதையும் காட்டுகிறது" எனும் வரி.... நம் மனதும்,கண்களும் தூய்மையாக இருப்பின் "எதிலும் நன்மையைக் காணலாம்" எனும் கருத்தை உணர்த்துகிறது. அழகான விஷயம் தந்த தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete