Friday, February 23, 2018

கடைசிக் காசு

நாளைய (23 பிப்ரவரி 2018) நற்செய்தி (மத் 5:20-26)

கடைசிக் காசு

இயேசுவின் மலைப்பொழிவின் ஒரு பகுதியாக இருக்கும் நாளைய நற்செய்தி வாசகத்தின் இறுதியில் இயேசு நாம் எதிரியோடு செய்துகொள்ள வேண்டிய சமரசம் பற்றிக் குறிப்பிடுகின்றார்.

'உங்கள் எதிரி உங்களை நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்லும்போது' என தொடங்குகிறது அறிவுரைப் பகுதி. எதற்காக எதிரி நீதிமன்றத்திற்கு அழைத்துச்செல்கிறார் என்றும், மற்றவர் என்ன குற்றம் செய்திருந்தார் என்பதையும் வாசகர்தாம் ஊகித்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை கடன்வாங்கிவிட்டு திரும்பச் செலுத்தாமல் இருந்திருப்பார் மற்றவர். அல்லது ஏதாவது குற்றம் செய்துவிட்டு பிணையாக பணம் செலுத்த வேண்டியவராக இருப்பார்.

இப்படி அவர் நம்மை அழைத்துச் செல்லும்போது நாம் செய்ய வேண்டியது விவாதமோ, விளக்கமோ அல்ல. மாறாக, உடன்பாடு. எப்பாடு பட்டாவது உடன்பாடு செய்ய வேண்டும். இல்லையென்றால் நாம் நடுவரிடம், நடுவர் நம்மை காவலரிடம் ஒப்படைக்க 'கடைசு காசு திருப்பித்தரும்வரை' நாம் சிறையில் இருக்க வேண்டும்.

ஆக, வழிநெடுகில் நடக்கும் ஒரு சின்ன உடன்பாடு நம் வாழ்வின் பொருள் மற்றும் நிம்மதி இழப்பிலிருந்து நம்மைக் காப்பாற்றிவிடுகிறது.

துன்பம் நமக்குத்தான் வரப்போகிறது என்றால், அந்தத் துன்பத்தை இவ்வாறாக துடைத்துக்கொள்ள அறிவுறுத்துகின்றார் இயேசு.

வழிநெடுகில் நடக்கும் உடன்பாடு - இதை நமக்கும் கடவுளுக்கும் உள்ள உறவில்கூட பொருத்திப்பார்க்கலாம்.

வழிநெடுகில் நடந்து உடன்பாடு செய்யும்போது நாம் மற்றவரோடு பேச வேண்டும். அவர் சொல்வதைக் கேட்க வேண்டும். அவரின் விதிமுறைகளுக்குக் கட்டுப்பட வேண்டும். இதுதான் உடன்பாடு. இறைவனுக்கும் எனக்கும் உள்ள உறவில் நான் எந்த அளவிற்கு அவரோடு வழிநடக்க விரும்புகிறேன்?

நான் செலுத்த வேண்டிய கடைசிக்காசு என்ன?

'கடைசிக்காசை திரும்ப செலுத்துவதில்' ஒருவகையான கட்டின்மை இருக்கும்.
அந்தக் கட்டின்மையை மிக எளிதான வழியாக வழிநெடுகில் முடித்துக்கொள்ள வேண்டிய வழியாகக் காட்டுகின்றார் இயேசு.

ஆக, எனக்கும் பிறருக்குமான உறவில், எனக்கும் இறைவனுக்குமான உறவில் நான் விரைவாக உடன்பாடு செய்துகொள்ள விரும்புகிறேனா?

1 comment:

  1. நம் வாழ்க்கைப்பயணத்தில் நமக்கு எதிரியாக வருபவர்களையும்,நம்மை எதிரியாக நினைப்பவர்களையும் நாம் சமாளிக்கும் விதம் குறித்து நம்மைத்தயாரிக்கும் ஒரு பதிவு.'உடன்பாடு' என்பது நம் வாழ்க்கையில் இன்றியமையாத ஒன்று.ஏதோ ஒன்றுக்காக இல்லை யாரோ ஒருவரிடம் விரும்பியோ,விரும்பாமலோ நாம் உடன்பாடு செய்து கொண்டுதான் இருக்கிறோம். இப்படிப்பட்ட உடன் பாடு நம் வாழ்வின் பொருள் மற்றும் நிம்மதியிலிருந்து நம்மைக்காக்கும் என்கிறார் தந்தை. "சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவதே மேல்" என்கிறது முதியோர் மொழி.இதை சமயோசிதமாகச் செய்வதன் மூலம் நம் நிம்மதியை மட்டுமின்றி,நம் கைக்காசையும் காப்பாற்றிக்கொள்கிறோமெனில் அதைச்செய்வதில் எந்தக் கௌரவக் குறைபாடும் இல்லை என்றே எண்ணுகிறேன்இந்த எனக்கும் பிறருக்குமான உறவில் நான் செய்யும் உடன்பாடு, எனக்கும் இறைவனுக்கும் இடையேயான உறவிற்கு அஸ்திவாரம் இடுமெனில் அதை இன்றும் என்றும் செய்ய நாம் தயாராக இருப்பதே நம் புத்திசாலித்தனம் என்பதை உணரவைத்த தந்தையின் முயற்சிகளுக்கு என் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete