Tuesday, February 6, 2018

மூதாதையர் மரபு

நாளைய (6 பிப்ரவரி 2018) நற்செய்தி (மாற்கு 7:1-3)

மூதாதையர் மரபு

இயேசுவின் பணிக்காலத்தில் அவர்மேல் சுமத்தப்பட்ட சில குற்றச்சாட்டுக்களில் ஒன்று 'மரபுமீறல்.' ஆனால் நாளைய நற்செய்தியில் இந்தக் குற்றச்சாட்டு நேரடியாக இயேசுவின்மேல் சுமத்தப்படாமல் சீடர்கள்மேல் சுமத்தப்படுகிறது.

'தூய்மை - தீட்டு' என்ற இரண்டு வார்த்தைகளை மையமாக வைத்தே விவாதம் தொடங்குகிறது.

'நாங்கள் தூய்மையாக இருக்கிறோம் - நீங்கள் தூய்மையாக இல்லை' என்று பரிசேயர்கள் இயேசுவின் சீடர்களைப் பார்த்து குற்றம் சுமத்துகின்றனர்.

'தூய்மை - தீட்டு' பிரிப்பதில் மதம் காலங்காலமாக முக்கிய பங்கு வகித்துவருகிறது. மதங்களே மரபுகளை உருவாக்குகின்றன. மரபுகளின்படி செயலாற்றுவது நமக்கு எளிதாக இருப்பதால் மரபுகளை மாற்றக்கூட நாம் நினைப்பதில்லை. 'இதுதானே வழக்கம் - இப்படியே செய்துவிட்டுப்போய்விடுவோம்!' என்று நாம் இருந்துகொண்டே இருக்கிறோம்.

உதாரணத்திற்கு, சாதியின் அடிப்படையில் மனிதர்களைப் பிரிப்பது தவறு என்பது நம் பகுத்தறிவுக்குத் தெரிந்தாலும், 'இருப்பது அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்' என நாம் மரபை வாழையடி வாழையாக - சில நேரங்களில் இன்னும் மும்முரமாக - கடைப்பிடிப்பவர்களாகின்றோம்.

மரபு - கட்டளை

மரபு மனிதரிடமிருந்து வருகிறது அல்லது மனிதர்களால் உருவாக்கப்படுகிறது.

கட்டளை கடவுளிடமிருந்து வருகிறது.

மரபுகள் முன்னிடம் வகிக்கும்போது கட்டளைகள் பின்னால் தள்ளப்படுகின்றன.

மரபுகள் உடல் சார்ந்தவை.

கட்டளை உள்ளம் சார்ந்தவை.

கட்டளைகள் பின்னால் தள்ளப்படுவதால் பரிசேயர்களின் உதடுகள் கடவுளுக்கு அருகில் இருக்க, உள்ளங்கள் பின்னால் தள்ளப்படுகின்றன.

நம்ம கதவுக்கு முன்னால உதவி கேட்டு நிற்கும் ஒருத்தருக்கு உதவினால், 'இதுவே பழக்கமாகிவிடும்!' என்று சொல்லும் அளவிற்கு, நல்லது செய்யவும் நம் மரபு குறுக்கே நிற்கிறது என்பது நாம் எந்த அளவிற்கு மரபுகளால் ஆளப்படுகிறோம் என்பதற்குச் சான்றாக அமைகிறது.

இயேசு மட்டும் எல்லாரையும் போல 'வழக்கம் போல' 'மரபு போல' செய்திருந்தால் இன்னும் கொஞ்சநாள் வாழ்ந்திருப்பார் என நினைக்கிறேன்.

மரபில் வாழ்வது எளிது.

ஆனால் எளிதானவை இறைவனுக்கு ஏற்றதானவை அல்ல.

2 comments:

  1. நம் அன்றாட சிந்தனைக்கு அப்பாற்பட்ட ஒரு விடயத்தைப் பற்றி விவாதிக்கிறார் தந்தை. ‘தூய்மை- தீட்டு’ பிரிப்பதில் மதம் காலம் காலமாகப் பங்கு வகுக்கிறது என்பதும், அது இல்லறத்தாரை விட துறவறத்தாரிடையே பிரிவினை உண்டாக்குவதில் இன்னும் முக்கியப் பங்கு வகுக்கிறது என்பதும் சோகமான விடயமே!மனிதனிடமிருந்து வரும் மரபுகள் முன்னிலைப்படுத்தப்படுகையில் கடவுளிடமிருந்து வரும் கட்டளைகள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன என்பதும், இதனால் உள்ளத்தளவில் கொண்டாட வேண்டிய இறைவன் நம் உதட்டளவே நின்றுவிடுகிறார் என்பதும் நின்று நிதானமாக யோசிக்க வேண்டிய விடயங்கள். நம்ம கதவுக்கு முன்னால் உதவி கேட்டு நிற்பவர்களுக்குக் கூட அதைப்பழக்கமாக்கிவிடக் கடாது எனும் ஒரே காரணத்திற்காக உதவ மறுக்கும் அவலத்தைத் தந்தை குறிப்பிடுவதைப் பார்த்தால்
    இவர் நம் சமுதாயத்தில் புரையோடிப்போன விடயங்களை எத்துணை உன்னிப்பாக்க் கவனிக்கிறார் என்பதைக்காட்டுகிறது. இயேசு கூட ‘எல்லாரையும் போல’’, ‘வழக்கம்போல’, ‘ மரபு போல’ வாழ்ந்திருந்தால்்இன்னும் கொஞ்ச நாள் இருந்திருப்பார்.... கண்களை கசிய வைக்கும் வரிகள்.மரபில் வாழ்வது எளிது; ஆனால் எளிதானவை இறைவனுக்கு ஏற்றதானவை அல்ல. மரபோ, கட்டளையோ.... ‘நாயகன்’ கமல் பாணியில் “ நாலு பேருக்கு நல்லது செய்யும் விடயங்கள் மட்டுமே இறைவனுக்கு ஏற்புடையவை” என்று சொல்லத் தோன்றுகிறது. தந்தையின் ‘கால் எங்கே?’ என்று கேட்கத் தோன்றும் ஒரு பதிவு. வாழ்த்துக்கள்!


    ReplyDelete