Tuesday, February 27, 2018

செபதேயுவின் மனைவி

நாளைய (28 பிப்ரவரி 2018) நற்செய்தி (மத்தேயு 20:17-28)

செபதேயுவின் மனைவி

விவிலியத்தின் நற்செய்தி நூல்களில் வரும் 'செபதேயுவின் மனைவி' என்னும் இத்தாய் ஆச்சர்யத்துக்குரியவர். செபதேயுவின் மனைவி அல்லது செபதேயுவின் மக்கள் நிகழ்வு மத்தேயு (20:17-28) மற்றும் மாற்கு (10:35-45) நற்செய்தி நூல்களில் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இரண்டு நற்செய்தியாளர்களும் வௌ;வேறு விதங்களில் இதைப் பதிவு செய்கின்றனர்.

மத்தேயு: 'செபதேயுவின் மனைவி'
மாற்கு: 'செபதேயுவின் மக்கள்'
மத்தேயு: 'கிண்ணத்தில் குடிக்க முடியுமா?'
மாற்கு: 'கிண்ணத்தில் குடிக்க முடியுமா?' 'திருமுழுக்கு பெற முடியுமா?'

இந்த இரண்டு வித்தியாசங்கள் தவிர மற்றபடி பதிவுகளின் அமைப்பு ஒன்றுபோலவே இருக்கிறது:
அ. இயேசுவிடம் விண்ணப்பம்
ஆ. இயேசு வைக்கும் மினி இன்டர்வியு
இ. 'அதெல்லாம் முடியாது! முடியாது!' என்னும் இயேசுவின் பதில்
ஈ. மற்ற சீடர்களின் கோபம்
உ. சீடத்துவம் மற்றும் அதிகாரம் பற்றிய இயேசுவின் போதனை

சீடர்களின் முகத்தைக் காப்பாற்றுவதற்காகவே யோவான் மற்றும் யாக்கோபு ஆகியோரின் அம்மா வந்ததாக பதிவு செய்கிறார் மத்தேயு. ஓர் ஆண் எப்படி இன்னொரு ஆணிடம் விண்ணப்பம் செய்ய முடியும் என்ற எண்ணமும் மத்தேயவின் இப்பதிவுக்குப் பின்புலமாக இருந்திருக்கும்.

செபதேயுவின் மனைவியே இயேசுவிடம் வந்ததாக எடுத்துக்கொள்வோம்.

யோவான் மற்றும் யாக்கோபு ஆகியோரின் தாய் தம் பிள்ளைகளுக்காக இயேசுவிடம் விண்ணப்பம் செய்கின்றாள். ரொம்ப எளிதான விண்ணப்பம்: 'ஒருவர் வலப்புறமும் மற்றவர் இடப்புறமும் அமர வேண்டும்.' எப்போது? 'இயேசு ஆட்சி புரியும்போது'.

நல்லதுதானே!

நல்ல கள்வன் இயேசுவை அரசுரிமை பெற்றுவருபவர் என்று சொல்வதற்கு முன்னதாகவே செபதேயுவின் மனைவி அதைச் சொல்லிவிடுகிறாள். ஆண்களைவிட பெண்களுக்கு எதிர்காலத்தை கணிக்கும் திறன் அதிகமாக உண்டு. ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் அவர்களின் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் அனைத்தையும் கணக்கிட்டுவிடுவார்கள்.

செபதேயுவின் தாய் எதற்காக தன் மகன்களுக்காக விண்ணப்பிக்க வேண்டும்?

ஒருவேளை செபதேயு இறந்திருக்கலாம். தன் மகன்கள் வீட்டைக் கவனிப்பதற்குப் பதிலாக இப்படி ஒரு போதகரை நம்பி ஊர் சுற்றுகிறார்களே! என்ற கவலை வந்திருக்கலாம். 'நீங்க ஏன்டா இப்படி ஊர் சுத்துறீங்க?' என்று அவர்களைக் கேட்கும்போது, 'அவர் ஒன்னும் சாதாரண நபர் அல்ல. அவர்தான் மெசியா!' என்று அவர்கள் சொல்லியிருக்கலாம். எப்படியோ தன் மகன்களது எதிர்காலம் திட்டமிட்டபடி நன்றாக இருக்க வேண்டும் என்பது இந்த ஏழைத்தாயின் எளிய ஆசையாக இருக்கிறது. அரியணையின் வலப்புறம் மற்றும் இடப்புறம் தானே கேட்டாள். அரியணையையா கேட்டாள்?

செபதேயுவின் மனைவி ரொம்ப பிராக்டிக்கலா இருக்கின்றாள்.

அவளுக்கு மறுவாழ்வு, மோட்சம், நரகம் இவற்றில் எல்லாம் நம்பிக்கை இருப்பதுபோல தெரிவதில்லை. இயேசு இப்பொழுதே அரசன் ஆவார் என்றும், அரியணைக்கு அருகில் இடம் கிடைக்கும் என்ற எதார்த்தவாதியாக இருக்கின்றாள்.

இவள் துணிச்சல்காரியும் கூட.

ஆகையால்தான், 'நான் குடிக்கும் கிண்ணத்தில் உங்களால் குடிக்க முடியுமா?' என்று இயேசு கேட்டபோது, 'அது என்ன அப்படி ஒரு பெரிய கிண்ணம்? நாங்களும் குடிப்போம்' என்கிறாள்.

ஒருபக்கம், இயேசுவிடம் கேட்டுப் பெற்றுவிட வேண்டும் என்ற நம்பிக்கை.
இன்னொரு பக்கம், நம்பிக்கையோடு கைகோர்க்கும் துணிச்சல்.

மற்ற சீடர்களின் பொறாமை, கோபம், இயேசுவின் அறிவுரை பற்றி இவளுக்குக் கவலையில்லை. தன் மனதில் பட்டதைக் கேட்டுவிட வேண்டும். தன் மகன்கள் நன்றாக இருக்க வேண்டும். இது சுயநலம் அல்ல. மாறாக, தன் இருப்பை தன் ஆண்டவன்முன் பதிவு செய்கின்ற எளிய முயற்சி.

'அடுத்தவர்கள் என்ன நினைப்பார்கள்?' என்று நான் எத்தனை முறை என் தயக்கத்தால் பின்வாங்கியிருக்கிறேன்?
'அடுத்தவர்கள் கோபம் அல்லது பொறாமைப்படுவார்கள்!' என்று நினைத்து நான் எத்துனை முறை என் விருப்பங்களை என் கடவுள்முன் சொல்லாமல் இருந்திருக்கிறேன்?

நம்பிக்கையும், துணிச்சலும் கலந்த நல்கலவை செபதேயுவின் மனைவி.

2 comments:

  1. " செபதேயு" வின் மனைவி..நமக்கு மிகவும் பரிட்சயமான வார்த்தைக்கோர்வை. என் போன்ற சாதாரண மக்களுக்கு அவள் ஒரு "பாசக்காரத்தாய்."தந்தை போல விவிலியத்தைக்கோலோட்சுபவர்களுக்கு அவள் ஒரு "எதார்த்தவாதி,ப்ராக்டிக்கலான பெண்மணி, நம்பிக்கையும், துணிச்சலும் சேர்ந்ததொரு கலவை".சீடர்களின் பொறாமைபற்றிக் கவலைப்படாமல் தன் மகன்களின் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு அதை ஆண்டவனிடம் பதிவு செய்யும் ஒரு தாயாக எந்த ஒரு தாய்க்கும் ஒரு நெருக்கமானவராகத் தெரிகிறார்.தந்தை தன்னைக்குறித்துக் கேட்கும் கேள்வி யாருக்குமே பொருந்தக்கூடியதே.அடுத்தவர்களின் நம்மைப்பற்றிய கணிப்புக்கும்,அவர்களது கோப,தாபங்களுக்கும் அஞ்சி நாம் செய்ய மறந்த, இறைவனிடம் சொல்ல மறந்த விஷயங்களை நினைத்து மருகுவது அல்ல நாம் செய்ய வேண்டியது; மாறாக நம்மைச் சுற்றி நடக்கும் விடயங்களுகளுக்கு கண்களைத்திறப்போம்; செவிகளைத்திறப்போம்; நம் இதயத்தைக் கொடுப்போம். ஒரு சாதாரண 'செபதேயு' வின் மனைவியை இத்தனை அழகான கோணங்களில் படம் பிடித்துக் காட்டிய தந்தைக்கு ஒரு சபாஷ்! மகளிரின் பிரிவிலிருந்து!!!

    ReplyDelete