Friday, February 16, 2018

விரதம்

நாளைய (16 பிப்ரவரி) வாசகம்

பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும்
தங்க இடமில்லாத வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும்
உடையற்றோரைக் காணும் போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும்
உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ
நான் விரும்பும் நோன்பு!
(எசாயா 58:7)

'நோன்பு'

இதைப் புரிந்து கொள்ளப் பயன்படும் இன்னொரு வார்த்தை 'விரதம்'. 'விரதம்' என்னும் சொல்லின் மூலம் 'வ்ரதா' என்னும் சமஸ்கிருதச் சொல். அதன் அர்த்தம், 'ஆன்மீக வாக்குறுதி'. என் நண்பர் ஒருவரின் பெயர் வரன் வரதன். இன்றுதான் அவரது பெயரின் இரண்டாம் பகுதி புரிகிறது - 'ஆன்மீக வாக்குறுதியின் வரம்' அந்தப் பெயரின் பொருளாக இருக்க முடியும். 'வ்ரதா' என்பதை இன்னும் தோண்டிப் பார்த்தால் அதன் மூலம் 'வ்ர்ன்' என்னும் மூன்று எழுத்துகள். இதன் பொருள் - நான் தெரிவு செய்கிறேன். திருமண வரம் அல்லது வரன் என்பதும் இதிலிருந்துதான் வருகிறது. (அப்படின்னா நம்ம நண்பரோட பெயர் ஒரே பொருளைக் கொண்ட அடுத்தடுத்த இரண்டு வார்த்தைகள் தாம் போல. அவரிடமே சீக்கிரம் கேட்டு விடுவோம்!)

விரதம் என்பது ஏதாவது ஒரு குறிப்பிட்ட சடங்கை தன்னார்வமாக, ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குச் செய்வது. இதைச் செய்யக் காரணம் இப்படிச் செய்வதன் வழியாக ஒருவரின் இஷ்ட தெய்வத்தைத் திருப்திப்படுத்தி, அவரிடமிருந்து விரதமிருப்பவர் தான் வேண்டுவதைப் பெற்றுக்கொள்வது.

நம் இந்தியப் புராணங்களில் கூட 'காயிக வ்ரதா' (உடல் சார்ந்தது), 'வாச்சிக வ்ரதா' (வார்த்தை சார்ந்தது) மற்றும 'மானச வ்ரதா' (மனம் சார்ந்தது) என்று விரதங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன.

விரதத்தில் முக்கியம் தூய்மை. அதாவது, எந்த உணவும் உள்செல்லாமல் நாம் நம்மில் எப்படி இருக்கிறோமோ அப்படி இருப்பதுதான் விரதம்.

முதல் ஏற்பாட்டு எசாயா கடவுளுக்கு இந்த விரதம் பிடிக்கவில்லை என எழுதுகிறார். 'நீ உன்னையே பார்த்துக்கொண்டிருப்பதற்குப் பதில் உன் அருகில் இருப்பவரைப் பார்! அதுதான் நான் விரும்பும் விரதம்' என்கிறார் அவர்.

இதை வரலாற்றுப் பிண்ணனியோடு புரிந்து கொள்வோம். எசாயா 58 எழுதப்பட்ட ஆண்டு பாபிலோனிய அடிமைத்தனத்திற்குப் பின். அடிமைத்தனத்திலிருந்து வீடு திரும்பியவர்கள் உண்ண உணவில்லாமல், உடுக்க உடையில்லாமல், தங்குவதற்கு இடமில்லாமல் தெருக்களில் அலைந்து திரிகின்றனர். இவர்களுக்கு யார் உணவும், உடையும், இடமும் கொடுக்க வேண்டும்? ஏற்கனவே இவைகளையெல்லாம் வைத்திருக்கும் எருசலேம் வாசிகள் தான்! 'நீ குடுன்னா' யாராவது சும்மா குடுப்பாங்களா? இல்லை. சாமி கண்ணக்குத்தும், ரத்தம் கக்கிச் சாவ! அப்படின்னு பயமுறுத்துனாதான் குடுப்பாங்க. ஆகையால்தான் ஒரு சமூக மாற்றத்திற்கான விதையை விதைக்க எசாயா 'கடவுளைப்' பயன்படுத்திக்கொள்கின்றார்.

இன்றும் அடிமைத்தனத்திலிருந்து திரும்பியவர்கள் போல் தான் நம்ம ஊரும், நம்ம உலகமும் இருக்கின்றது. நாம் நோன்பு இருப்பது நமக்குப் பயன்தர வேண்டும், கேட்டது கிடைக்க வேண்டும் என்று மட்டும் இல்லாமல் தேவையில் இருக்கும் நம் சகோதர, சகோதரியைப் பார்த்து 'என்னப்பா நல்லா இருக்கிறியா?' என்று கேட்டாலே தவக்காலம் அருளின் காலம் தான்.

1 comment:

  1. " நீ உன்னையே பார்த்துக்,கொண்டிருப்பதற்குப்பதில் உன் அருகில் உள்ளவரைப்பார்; அதுதான் நான் விரும்பும் விரதம்.".... தவக்காலத்தின் மொத்தத்துக்குமே அர்த்தம் சொல்லும் பொருள் செறிந்த வரிகள். ப்பிலோனிய அடிமைத்தனத்திற்கு இணையாகத்தான் நம்மக்களும் இருக்கிறார்கள் என்பது நம்மீது படிந்துள்ள அழுக்கை வெட்ட வெளியில் கழுவுவது போல் இருக்கிறது. நமது நோன்பு நமக்கு மட்டும் பயன் தரவேண்டும்; கேட்பது கிடைக்க வேண்டும் என்றில்லாமல் தேவையில் இருக்கும் நம் சகோதர,சகோதரியைப்பார்த்து 'என்னப்பா! நல்லா இருக்கியா? என்று கேட்டாலே தவக்காலம் அருளின் காலம் தான்.அருமை! காலத்திற்கேற்றதொரு பதிவு! தந்தைக்கு வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete