Friday, June 30, 2023

கடவுளின் விருந்தோம்பல்

இன்றைய இறைமொழி

சனி, 1 ஜூலை 2023

பொதுக்காலம் 12-ஆம் வாரம்

தொநூ 18:1-15. மத் 8:5-17.

கடவுளின் விருந்தோம்பல்

1. ஆபிரகாம் தம்மிடம் வந்த மூன்று மனிதர்களுக்கு விருந்தோம்பல் செய்கிறார். ஆபிரகாமின் அவசரமும் அக்கறையும் நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது. வந்திருந்தவர்கள் ஆண்டவர் என்பது சற்று நேரத்தில் வாசகருக்குப் புலப்படத் தொடங்குகிறது. தமக்கு விருந்தோம்பல் செய்த ஆபிரகாமுக்கு விருந்தோம்பல் செய்கிறார் ஆண்டவர். அடுத்த இளவேனிற்காலத்தில் ஆபிரகாமுக்கும் சாராவுக்கும் ஒரு மகன் பிறந்திருப்பான் என மொழிகிற ஆண்டவர், அந்த மகனின் பெயரையும் மறைமுகமாகக் குறிப்பிடுகிறார். மாதவிடாய் நின்று போன சாரா தனக்குள் சிரிக்கிறாள். 'நீ சிரித்தாய்' எனச் சொல்கிறார் ஆண்டவர். அதுவே, ஈசாக்கின் பெயராக மாறுகிறது. 'ஈசாக்கு' என்றால் எபிரேயத்தில் 'அவன் சிரித்தான்' என்பது பொருள். 

2. தம்மிடம் உதவி வேண்டி வந்த நூற்றுவர் தலைவரின் நம்பிக்கையைக் கண்டு வியக்கின்ற இயேசு, தூரத்திலிருந்தே அவருடைய பணியாளருக்கு நலம் தருகிறார். நூற்றுவர் தலைவரின் இல்லத்திற்குச் செல்லாமலேயே அவருக்கு விருந்தோமல் செய்கிறார் இயேசு.

3. கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்: (அ) ஆபிரகாமிடம் விளங்கிய தாராள உள்ளம் - தம்மிடம் வந்திருப்பது யார் எனத் தெரியாமலேயே அவர்களை உபசரிக்கும் உயர்ந்த உள்ளம். (ஆ) சாராவின் அச்சம் - அதாவது, குழந்தைத்தனமான அச்சம். தன் சிரிப்பு கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது என்றவுடன், அச்சம் கொள்கிறாள். ஆனால், அந்த அச்சத்தில்தான் ஈசாக்கின் பெயர் வெளிப்படுத்தப்படுகிறது. (இ) நூற்றுவர் தலைவரின் நம்பிக்கை - இயேசு என்னும் இறைமகனின் சொற்களும் விருந்தோம்பல் செய்யும் என்று நம்பிக்கை கொண்டிருக்கிறார் அவர்.

1 comment: