Thursday, June 29, 2023

நம்பிக்கையும் நலமும்

இன்றைய இறைமொழி

வெள்ளி, 30 ஜூன் 2023

பொதுக்காலம் 12-ஆம் வாரம்

தொநூ 17:1, 9-10, 15-22. மத் 8:1-4.

நம்பிக்கையும் நலமும்

இன்றைய நற்செய்தி வாசகத்தில், இயேசுவை அணுகி வருகிற தொழுநோயாளர் ஒருவர், அவர் முன் முழந்தாளிட்டு, அவர்மேல் உள்ள நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். இயேசுவின் சமகாலத்தில், குணமாக்க இயலாத, அதே வேளையில் வெறுக்கத்தக்க நோயாகத் தொழுநோய் இருந்தது. தொழுநோயாளர்கள் தீட்டானவர்கள் எனக் கருதப்பட்டு, சமூகத்திலிருந்து அந்நியப்படுத்தப்பட்டனர். இந்தப் பின்புலத்தில் இத்தொழுநோயாளர் இயேசுவை அணுகி வந்தது அவருடைய துணிச்சலையும், அவசரமான தேவையையும் காட்டுகிறது.

தன்னைக் குணமாக்குமாறு வேண்டுகிற தொழுநோயாளரை இரக்கத்துடன் தொடுகிறார் இயேசு. இதுவும் அக்காலத்தில் தகாதது எனக் கருதப்பட்டது. ஏனெனில், தொழுநோய் ஒருவர் மற்றவரிடமிருந்து பரவக்கூடியது. இயேசுவின் தொடுதல் அவருக்கு உடனடியாக நலம் தருகிறது. 

இப்பகுதி இயேசுவின் பண்புநலன்களையும் அவருடைய பணியையும் பற்றி பல முக்கியமான கருத்துகளைத் தருகிறது: முதலில், இயேசுவின் இரக்கம் மற்றும் விருப்பம். சமூகத்தின் விளிம்புநிலை மக்கள்மேல் இயேசு அக்கறை காட்டுகிறார். ஒதுக்கப்பட்டவர்கள்மேல் அன்பும் பரிவும் கொள்கிறார். மேலும், தம் சமகாலத்தில் வழக்கத்திலிருந்த சமூக மற்றும் சமய விதிமுறைகளை உடைக்கிறார். 

அதே வேளையில், தொழுநோயாளரின் நம்பிக்கையும் நமக்குத் தூண்டுதலாக இருக்கிறது. இயேசுவுக்கு அருகில் செல்லும் நாம் நலம் பெறுகிறோம்.

இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவர் தம் வாக்குறுதியை மீண்டும் ஆபிரகாமுக்கு நினைவு_ட்டுகிறார். ஆபிரகாம் தன் நம்பிக்கையில் உறுதி பெறுகிறார்.


No comments:

Post a Comment