Thursday, June 22, 2023

செல்வமும் உள்ளமும்

இன்றைய இறைமொழி

வெள்ளி, 22 ஜூன் 2023

பொதுக்காலம் 11-ஆம் வாரம்

2 கொரி 11:18, 21-30. மத் 6:19-23.

செல்வமும் உள்ளமும்

இன்றைய நற்செய்தி வாசகம் நம்மிடம் இரு கேள்விகளை முன்வைக்கின்றது: 'உன் செல்வம் எங்கே?' 'உன் இதயம் எங்கே?' என்ற கேள்விக்கான விடையே, செல்வம் எங்கே இருக்கிறது என்பதற்கான விடை. ஏனெனில், 'உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும்' என்கிறார் இயேசு.

இரண்டாவது கேள்வி, 'உன் பார்வை எங்கே?' – 'உன் கண்கள் எங்கே?' என்பதற்கான விடையே இக்கேள்விக்கான விடை. 'கண்தான் உடலுக்கு விளக்கு. கண் நலமாயிருந்தால் உங்கள் உடல் முழுவதும் ஒளி பெற்றிருக்கும்' என்கிறார் இயேசு.

இவ்விரண்டு கேள்விகளும் ஒன்றுக்கொன்று வேறுபட்டதாக இருந்தாலும், இரண்டும் மிக நெருங்கிய தொடர்புடையவை. எப்படி?

இன்றைய முதல் வாசகத்தில் தான் ஓர் அறிவிலி போலப் பேசுவதாகச் சொல்கிற பவுல், தான் அறிவித்த நற்செய்தியே உண்மையானது என்றும், தன் பணியே மற்ற 'போலி' திருத்தூதர்களின் பணியைவிட மேலானது எனவும் நிரூபிக்க, தான் பட்ட துன்பங்கள், அடைந்த துயரங்கள் அனைத்தையும் வகைப்படுத்துகிறார். இறுதியில், 'இவை தவிர எல்லாத் திருச்சபைகளையும் பற்றிய கவலை எனக்கு அன்றாடச் சுமையாயிருந்தது' என்று பவுல் கூறுகிறார். மற்ற திருத்தூதர்களைவிட பவுல் உயர்ந்து நிற்பதற்குக் காரணம் இதுவே என நினைக்கிறேன். மற்ற 'போலி' திருத்தூதர்கள், நம்பிக்கையாளர்களால் தங்களுக்கு என்ன கிடைக்கும் என்பதை மையமாக வைத்து நற்செய்தி அறிவித்தனர். ஆனால், பவுலோ, தான் நற்செய்தி அறிவிக்காவிட்டால் அவர்களுக்கு என்ன ஆகும் என அவர்களைப் பற்றிக் கவலை கொள்கிறார். 

பவுலின் உள்ளம் அவருடைய திருச்சபையில் இருந்தது. ஏனெனில், திருச்சபையே அவருடைய செல்வம்.  

யோசுவா நூலில் (அதி. 16) ஒரு நிகழ்வு உண்டு. எரிக்கோ நகருக்கு எதிராக மக்கள் போரிடுகின்றனர். அங்கிருக்கும் அனைத்தையும் அழித்துவிடுமாறு ஆண்டவராகிய கடவுள் அறிவுறுத்துகின்றார். ஆனால், ஆக்கான் என்பவரின் கண்கள் அங்கிருந்த பொன் மற்றும் வெள்ளிமேல் படிகிறது. அவற்றை அவர் எடுத்து மறைத்துவைத்துக் கொள்கின்றார். அவருடைய எண்ணமெல்லாம் மறைத்து வைக்கப்பட்ட பொன் மேல் இருக்கின்றது. விளைவு, ஏய் நகருக்கு எதிரான போரில் இஸ்ரயேலர் தோல்வியடைகின்றனர்.

ஆக, நம் செல்வம் நேர்முகமாகவும் இருக்க முடியும், எதிர்மறையாகவும் இருக்க முடியும். நம்மை மற்றவர்களை நோக்கித் திருப்பவும் முடியும், நம்மை நோக்கியே திருப்பவும் முடியும்.

இரு சவால்கள்:

ஒன்று, நம் கண்கள் நலமானதாக இருக்க வேண்டும். அதாவது, பொறாமை, பகைமை, ஆசை, கோபம் கொண்டதாக இருத்தல் கூடாது.

இரண்டு, நம் செல்வம் இறைவனாக வேண்டும். அவரில் நம் இதயம் இருக்க வேண்டும்.


No comments:

Post a Comment