Monday, June 26, 2023

மதிப்பு, பிறர்மைய எண்ணம், இடுக்கமான வாயில்

இன்றைய இறைமொழி

செவ்வாய், 27 ஜூன் 2023

பொதுக்காலம் 12-ஆம் வாரம்

தொநூ 13:2, 5-18. மத் 7:6, 12-14.

மதிப்பு, பிறர்மைய எண்ணம், இடுக்கமான வாயில்

இன்றைய நற்செய்தி வாசகத்தில் தம் சீடர்களுக்கு மூன்று அறிவுரைகளை வழங்குகிறார் இயேசு: 

(அ) மதிப்பு மிக்க ஒன்றை அதன் மதிப்பு தெரியாதவற்றிடம் வீணாக்க வேண்டாம். தூய்மையானது எது என்பதை நாய்கள் அறிவதில்லை. முத்துகளின் மதிப்பை பன்றிகள் அறிவதில்லை. அவற்றுக்குப் பயன்படாத இவ்விரு பொருள்களுமே அவற்றால் அழிக்கப்படும். மதிப்பும் நோக்கமும் இணைந்தே செல்கின்றன. ஒரு பொருள் அதன் நோக்கத்தை நிறைவேற்றும்போதுதான் மதிப்பு பெறுகிறது. 

மதிப்பு மிக்க நம் பொருள், நேரம், ஆற்றலை நாம் சரியான நோக்கம் இல்லாமல் நாம் செலவிடும்போது, நாய்கள்முன்னும் பன்றிகள்முன்னும் அவற்றை எறிபவர்கள்போல இருக்கிறோம். ஆக, ஒன்றின் மதிப்பு மற்றும் நோக்கம் அறிந்து செயல்படுதல் நலம். எந்தவொரு செயலைச் செய்யுமுன்னும், 'இதைச் செய்வதன் நோக்கம் என்ன?' என்னும் கேள்வியையும், 'மதிப்புக்குரிய ஒன்றை மதிப்புக்குரிய மற்றொன்றோடு நான் மாற்றிக்கொள்கிறேனா?' என்னும் கேள்வியையும் கேட்பது நலம்.

(ஆ) பிறர் நமக்குச் செய்ய வேண்டும் என நாம் விரும்புவதை அவர்களுக்குச் செய்வது. இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு இன்றைய முதல் வாசகப் பகுதி. காரானிலிருந்து ஆபிராமும் லோத்தும் புறப்படுகிறார்கள். இருவரும் கால்நடைகள் மற்றும் பணியாளர்களுடன் பெருகி வருகிறார்கள். இட நெருக்கடி அதிகமாகிறது. இருவரும் வேறு வேறு திசைகளில் பயணம் செய்வது நலம் என நினைக்கிறார்கள். தான் தனக்குத் தேவையான நல்ல இடத்தைத் தெரிந்துகொள்வதற்குப் பதிலாக, இடத்தைத் தெரிவு செய்யுமாறு லோத்தைப் பணிக்கிறார் ஆபிராம். அதாவது, தனக்குச் செய்யப்பட வேண்டும் என விரும்புகிற ஒன்றை, அவர் லோத்திற்குச் செய்கிறார். லோத்து தன் கண்களுக்கு நல்லதெனப்பட்ட பகுதியைத் தெரிவு செய்கிறார். ஆபிராமோ விடுபட்ட பகுதியைத் தெரிவு செய்கிறார். விட்டுக்கொடுத்த ஆபிராம் கெட்டுப்போகவில்லை. ஏனெனில், அவர் தெரிந்துகொண்ட பகுதியே வாக்களிக்கப்பட்ட நாடாக மாறுகிறது. 

ஆக, நாம் கூடி வாழும்போது நமக்கு அருகில் இருப்பவரின் தேவை உணர்ந்து செயல்படுவது நலம். பல நேரங்களில் தன்மைய எண்ணமும், தன்னலப் போக்கும் இதற்குக் குறுக்காக நிற்கின்றன. விட்டுக்கொடுப்பது நமக்கு வலியைத் தரும். ஆனால், தாராள உள்ளமும் பரந்த எண்ணமும் இருப்பவர் அந்த வலியைப் பொறுத்துக்கொள்கிறார்.

(இ) இடுக்கமான வாயில் வழியே நுழைதல். அகன்ற வழி, இடுக்கமான வழி என்னும் இரு வழிகளை முன்மொழிகிற இயேசு இடுக்கமான வழியைத் தெரிந்துகொள்ள அழைக்கிறார். வலி வழியாகத்தான் வழி என்பது இயேசுவின் பாடமாக இருக்கிறது. ஏனெனில், இடுக்கமான வாயில் வழியே நுழைபவர் வலியை ஏற்கிறார். இடர்களைச் சந்திக்கிறார். யாரும் செல்லாத வழியில் செல்கிற ஒருவரே மாற்றத்தை ஏற்படுத்துகிறார். அகன்ற வழியில் பலர் செல்வதைப் பார்த்து நாம் அவர்கள்பின் செல்ல நினைக்கிறோம். அந்த வழி எளிதான வழியாக இருக்கலாம். ஆனால், சரியான வழியாக இருக்க முடியாது. மேலும், இடுக்கமான வழியாக செல்லும்போது நம் தான்மை மற்றும் அடையாளத்தை நாம் முழுமையாக வாழ்கிறோம்.


No comments:

Post a Comment