Wednesday, June 7, 2023

மூன்று புள்ளிகள்

இன்றைய இறைமொழி

வியாழன், 8 ஜூன் 2023

பொதுக்காலம் 9-ஆம் வாரம்

தோபித்து 6:10, 7:1, 9-14, 8:4-8. மாற் 12:28-34.

மூன்று புள்ளிகள்

சதுசேயர் இயேசுவைச் சோதித்ததைத் தொடர்ந்து, மறைநூல் அறிஞர்களும் இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன் அவரிடம் கேள்வி கேட்கின்றனர்: 'அனைத்திலும் முதன்மையான கட்டளை எது?' யூதர்கள் அனைவருக்கும் இக்கேள்விக்கான விடை தெரியும். ஏனெனில், ஒவ்வொரு யூத ஆணும் தன் 12 வயது முதல் 'இஸ்ரயேலே கேள்' என்னும் இறைவேண்டலைச் செபிக்கும் வழக்கத்தைத் தொடங்குவார். இயேசு கற்றறிந்த மறைநூல் அறிஞர் அல்ல என்பதும், அவர் தச்சுத் தொழில் செய்யும் எளிய பின்புலம் கொண்டவர் என்பதும் அவருடைய சமகாலத்து எதிரிகளின் பேசுபொருளாக இருந்ததால் அவரைக் கேலி செய்யும் நோக்கத்துடனே இக்கேள்வியை அவரிடம் கேட்கிறார்கள் மறைநூல் அறிஞர்கள். 

இயேசு இக்கேள்விக்கான விடையைப் பகிர்வதுடன், முதன்மையான கட்டளையைச் சற்றே நீட்டி, அயலார்மேல் அன்பு, தன்மேல் அன்பு என மூன்று புள்ளிகளை முன்வைக்கிறார். 

இறைஅன்பு என்னும் புள்ளி நம் வாழ்வின் ஆதாரம்.

தன்அன்பு என்னும் புள்ளி நம் வாழ்வில் நாம் மேற்கொள்ளும் உருவாக்கம்.

பிறரன்பு என்னும் புள்ளி நம் வாழ்வு மற்றவர்கள்மேல் ஏற்படுத்தும் தாக்கம்.

இம்மூன்று புள்ளிகளும் வேறு வேறு நிலைகளில் மையங்களாக நம் வாழ்க்கையைச் சுழற்றுகின்றன.

இம்மூன்று புள்ளிகளையும் மையங்களாக வைத்துச் சுழன்ற ஓர் இணையரின் எடுத்துக்காட்டைப் பார்க்கிறோம். தோபியாவுக்கும் சாராவுக்கும் திருமணம் நடந்தேறுகிறது. ஒருவர் மற்றவரைத் தழுவுமுன் இருவரும் இணைந்து இறைவனைத் தழுவிக்கொள்கிறார்கள். 

இறைவனை ஆதாரமாகப் பற்றிக்கொள்வதற்கு நம்மிடம் உள்ள தடை தன்நிறைவு. அதாவது, 'நான் மட்டும் போதும்' என நினைப்பது.

நம்மை நாமே தொடர்ந்து உருவாக்கிக்கொள்வதற்குத் தடையாக இருப்பது 'இது போதும்' என நினைப்பது.

நம் வாழ்வு மற்றவர்கள்மேல் தாக்கம் ஏற்படுத்துவதற்குத் தடையாக இருப்பது நம் மதிப்பீடுகளோடு சமரசம் செய்துகொள்வது.

இவை போன்ற தடைகள் தகர்த்தல் சிறப்பு.


No comments:

Post a Comment