Tuesday, June 27, 2023

போலி இறைவாக்கினர்கள்

இன்றைய இறைமொழி

புதன், 28 ஜூன் 2023

பொதுக்காலம் 12-ஆம் வாரம்

தொநூ 15:1-12, 17-18. மத் 7:15-20.

போலி இறைவாக்கினர்கள்

போலி இறைவாக்கினர்களைக் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு தம் சீடர்களுக்கு அறிவுறுத்துகிறார் இயேசு. 

போலிகள் என்பவை 'போல' இருப்பவை. அவற்றுக்கென்று தனித்தன்மை கிடையாது. அவை மற்றவற்றைச் சார்ந்தே இருக்கின்றன. தாம் குறிப்பவற்றை அவற்றால் நிறைவேற்ற இயலாது. போலியான மருத்துவர்கள் நலம் தருவதற்குப் பதிலாக பயம் தருகிறார்கள். போலியான மருந்துகள் குணம் தருவதற்குப் பதிலாக நோயைத் தருகின்றன. போலியான பொருள்கள் நம்மை ஏமாற்றுகின்றன. அவை தம்மிலே முரணானவை.

இரு உருவகங்களைத் தருகிறார் இயேசு: ஆட்டுத் தோலைப் போர்த்திய ஓநாய், மரமும் கனியும்.

ஆடு மற்றும் ஓநாய் ஒன்றுக்கொன்று முரணானது. வெளியே தெரிகிற உருவம் உள்ளே உள்ள இயல்புக்கு முரணானது. மரத்தின் கனி அதன் உள் இயல்பையே வெளிப்படுத்துகிறது. நல்ல மரம் கெட்ட கனி தர இயலாது. கெட்ட மரம் நல்ல கனி தர இயலாது. மரம் தன் இயல்பை மறுதலிக்க இயலாது.

இரு சவால்கள்: ஒன்று, போலியாக இருப்பவர்கள் பற்றி எச்சரிக்கையாக இருக்கும் நாமே எத்தனை முறை போலியாக இருக்கிறோம். நம் சொற்களும் செயல்களும் ஒன்றுக்கொன்று முரண்படுவது ஏன்? இரண்டு, நம் வெளிப்புறத்தில் மாற்றம் வரவேண்டும் எனில், நம் இயல்பிலும் மாற்றம் வர வேண்டும். 

இன்றைய முதல் வாசகத்தில், ஆண்டவராகிய கடவுள் ஆபிரகாமுடன் உடன்படிக்கை செய்துகொள்கிறார். உடன்படிக்கை செய்யும் நிகழ்வுக்கு முன், ஆபிரகாமின் பொறுமையின்மையைப் பார்க்கிறோம். ஆண்டவராகிய கடவுள் தனக்கு அளித்த வாக்குறுதி குறித்துப் பொறுமை இழக்கிறார் ஆபிரகாம். தன் வீட்டு அடிமை மகன் தனக்குப் பின் உரிமையாளன் ஆவான் என்று தனக்குள்ளே சொல்லிக்கொள்கிறார். ஆண்டவராகிய கடவுளின் சொல்லும் செயலும் முரணாக இருக்குமோ எனப் பயந்து போகிறார் ஆபிரகாம். ஆனால், இறைவனில் முரண் இல்லை என்பதை அவர் விரைவில் கண்டுகொள்கிறார்.


No comments:

Post a Comment