Friday, June 9, 2023

நல்லதைச் செய்யுங்கள்

இன்றைய இறைமொழி

சனி, 10 ஜூன் 2023

பொதுக்காலம் 9-ஆம் வாரம்

தோபித்து 12:1, 5-15, 20. மாற்கு 12:38-44.

நல்லதைச் செய்யுங்கள்

தோபியாவுடன் வழி நடந்தது யார் என்று வாசகருக்குத் தெரியும். ஆனால், கதைமாந்தர்களுக்குத் தெரியாது. நூலின் இறுதியில் அசரியா தன்னை யாரென்று அறிமுகம் செய்கின்றார். தோபித்தையும், தோபியாவையும் தனியாக அழைத்துச் சென்ற இரபேல் தன்னை வெளிப்படுத்துகின்றார்:

'நல்லதைச் செய்யுங்கள். தீமை உங்களை அணுகாது. அநீதியாகச் சேர்த்த செல்வத்தைவிட உண்மையான மன்றாட்டு சிறந்தது. நீதியுடன் இணைந்த தர்மம் அதைவிடச் சிறந்தது ... தர்மம் சாவினின்று காப்பாற்றும், பாவத்திலிருந்து தூய்மையாக்கும்' என அறிவுரை பகர்கின்றார் தூதர். மேலும், அவர்களின் வாழ்வில் தான் உடனிருந்த பொழுதுகள் அனைத்தையும் சுட்டிக்காட்டுகின்றார்.

இந்நூல் எழுதப்பட்ட காலத்தில் நிலவிய அறநெறி, வானதூதர் பற்றிய நம்பிக்கை, கடவுளின் உடனிருப்பு ஆகிய கருத்துருகளை நாம் இங்கே காண்கின்றோம்.

இன்று இந்நூலை வாசிக்கும்போது நமக்குள் சில கேள்விகள் எழலாம்: 'ஏன் கடவுள் இன்று தூதர்களை அனுப்புவதில்லை? ஏன் இன்று அறிகுறிகளும் வல்ல செயல்களும் நடந்தேறுவதில்லை? கடவுள் ஏன் தூரமாக நிற்கிறார்? நல்லவர்களுக்கு சோதனைகள் வருவது ஏன்?'

இன்றைய நற்செய்தி வாசகத்தில் ஏழைக் கைம்பெண் காணிக்கை செலுத்தும் நிகழ்வை வாசிக்கின்றோம். காணிக்கைப் பெட்டியில் இவரே அதிகம் போட்டார் எனப் பாராட்டுகின்றார் இயேசு.

மறைநூல் அறிஞர்களைப் பற்றிக் கவனமாக இருங்கள் என எச்சரிக்கிற இயேசு, 'அவர்கள் கைம்பெண்களின் வீடுகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்' என்கிறார். தொடர்ந்து, தன்னிடம் இருந்த இரு செப்புக் காசுகளையும் ஏழைக்கைம்பெண் போட்டார் எனப் பாராட்டுகிறார் இயேசு. முதலில் உள்ள எச்சரிக்கையுடன் இணைத்துப் பார்த்தால், மறைநூல் அறிஞர்கள் வீடுகளைப் பிடுங்கிக்கொள்கிறார்கள், கோவிலோ இருக்கிற செப்புக் காசுகளையும் பிடுங்கிக்கொள்கிறது என்று வாசிக்கத் தோன்றுகிறது. ஒரு கைம்பெண் தன்னிடம் உள்ள இரு செப்புக் காசுகளையும் போடும் அளவுக்கு கோவில் அல்லது சமயம் அவளது உள்ளத்தை மாற்றியிருக்கிறது என்பது நமக்கு வேதனை அளிக்கிறது. கைம்பெண்ணின் இரு செப்புக்காசுகளில்தான் கோவில் பராமரிக்கப்பட வேண்டும் என்றால், அக்கோவில் தேவையா என்றும், செப்புக்காசுகளுக்கு இணையாக அக்கைம்பெண்ணுக்குக் கோவில் எதைக் கொடுத்தது என்றும் கேட்கத் தோன்றுகிறது. மற்றவர்கள் தங்களிடம் உள்ளதைக் கொடுத்தார்கள், இக்கைம்பெண்ணோ தன் உள்ளத்தைக் கொடுத்தால் என்று சுருக்கி எழுத மனம் மறுக்கிறது.

அந்தப் பெண்ணின் பார்வையில் இது ஒரு பெரிய போராட்டமாக இருந்திருக்கும். ஒருவேளை கடவுள்மேல் உள்ள கோபத்தால் கூட அவர் அனைத்தையும் கடவுளுக்கே கொடுத்திருக்கலாம். அவள் தன் அடுத்த வேளை பற்றிக் கவலைப்படவில்லை. அவளின் துணிச்சல் நமக்கு வியப்பாக இருக்கிறது. இப்படிப்பட்டவர்களின் காசுகள்தாம் நம் ஆலயங்களிலும் வந்து விழுகின்றன என நான் நினைக்கும்போது அருள்பணியாளராகிய என் பணி எவ்வளவு பொறுப்புணர்வுமிக்கது என்பதை நான் உணர்கிறேன். 

தான் பாராட்டப்பட்டதையும் அறியாமல் தன் பணியைச் செய்துவிட்டு, தன் காணிக்கையைச் செலுத்திவிட்டு தன் இடம் நகர்கிறார் ஏழைக் கைம்பெண்.

இன்றைய வாசகங்களை இணைத்துப் பார்க்கும்போது, நாம் கற்கிற ஒரு பாடம் இதுதான்: 'நல்லதைச் செய்யுங்கள்.' எளிதானது வேறு, நல்லது வேறு. நாம் பல நேரங்களில் எளிதானதைச் செய்கிறோம். நல்லதைச் செய்யத் தயங்குகிறோம். நல்லதைச் செய்வதற்குத் துணிச்சல் தேவை. நல்லதைச் செய்கிறார் தன் மகிழ்ச்சியை மட்டும் பார்க்கிறாரே தவிர, மற்றவர்களுடைய எண்ணங்கள் மற்றும் எதிர்பார்ப்புகள் பற்றிக் கவலைப்படுவதில்லை. நல்லதைச் செய்கிறார் இன்று என்னும் பொழுதில் வாழ்கிறார். 

தோபித்து நல்லதைச் செய்தார். ரபேல் அவருடைய உதவிக்கு அனுப்பப்பட்டார்.

ஏழைக்கைம்பெண் நல்லதைச் செய்தார். இயேசு அவரைப் பாராட்டினார்.

ரபேல் நம்மிடம் அனுப்பப்படவில்லை என்றாலும், இயேசு நம்மைப் பாராட்டவில்லை என்றாலும் நல்லதைச் செய்தல் நலம்.


No comments:

Post a Comment