Wednesday, June 21, 2023

எல்லா வகையிலும் செல்வராகி

இன்றைய இறைமொழி

புதன், 21 ஜூன் 2023

பொதுக்காலம் 11-ஆம் வாரம்

2 கொரி 9:6-11. மத் 6:1-6,16-18.

எல்லா வகையிலும் செல்வராகி

கொரிந்து நகர மக்கள் தாங்கள் பெற்றிருக்கிற வளங்களையும் திறன்களையும் மற்ற திருச்சபைகளோடு பகிர்ந்துகொள்ள அழைப்பு விடுகிற பவுல், விதைப்பவர் உருவகத்தைப் பயன்படுத்தி, 'குறைவாக விதைப்பவர் குறைவாக அறுவடை செய்வார், நிறைவாக விதைப்பவர் நிறைவாக அறுவடை செய்வார்' என மொழிகிறார். மேலும், விதைகளை வழங்கும் இறைவனே அறுவடையையும் மிகுதியாக்குவார் என்கிறார். 'நீங்கள் எல்லா வகையிலும் செல்வராகி வள்ளன்மை மிகுந்தவர்களாக விளங்குவீர்கள்' என வாழ்த்துகிறார் பவுல்.

'எல்லா வகையிலும் செல்வராகி' என்னும் சொல்லாடல் நம் சிந்தனையைத் தட்டி எழுப்புகிறது. 'வளமை இறையியல்' (ப்ராஸ்பெரிட்டி தியாலஜி) அல்லது 'வளமை நற்செய்தி' (ப்ராஸ்பெரிட்டி காஸ்பல்) என்னும் சொல்லாடல்கள் இன்று அதிகமாகப் பேசப்பட்டு விமர்சிக்கப்படுகின்றன. அதாவது, சில பிரிவினை சபைப் போதகர்கள் வளமை நற்செய்தியை அறிவிக்கிறார்கள் எனவும், அவர்கள் இயேசு காட்டிய எளிமையை ஏற்க மறுக்கிறார்கள் என்றும் குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. பல நேரங்களில் நாம் ஏழ்மையை உயர்த்திப்பிடித்துப் பேசுகிறோம். ஏழ்மை அல்லது வறுமை ஏற்றுக்கொள்ளத்தக்க நிலை என்று சொல்வதுடன், அதுவே பேறுபெற்ற நிலை என்கிறோம். ஆனால், நம் ஆண்டவராகிய கடவுள் நாம் எல்லா வகையிலும் செல்வராக வேண்டும் என விரும்புகிறார். ஏழ்மையாக இருத்தல் நலம்தான். ஆனால், செல்வம் கொண்டிருக்கும்போது நிறைய விடயங்களை நம்மால் செயல்படுத்த முடியும்.

நற்செய்தி வாசகத்தில், தர்மம் செய்தல், இறைவேண்டல் செய்தல், நோன்பிருத்தல் என்னும் அடிப்படையான சமய நெறிச் செயல்பாடுகளைப் பற்றித் தம் சீடர்களுக்கு அறிவுறுத்துகிற இயேசு, அவற்றைச் செய்கிறவர்கள் அலட்டிக்கொள்ளாமல் செய்ய வேண்டும் என்கிறார். அதாவது, மற்றவர்களின் பார்வையில் வெகுமதி பெறுவதற்காகவோ அல்லது மற்றவர்களுடைய கவனத்தை ஈர்ப்பதற்காகவோ அல்ல, மாறாக, உள்ளாந்த மாற்றம் அடைவதற்காகவே ஒருவர் இவற்றைச் செயல்படுத்த வேண்டும்.

உள்ளார்ந்த மாற்றத்தை மையப்படுத்திச் செயல்படுகிற ஒருவர் எல்லா வகையிலும் செல்வராகிறார். 

இன்று நம்மிடம் உள்ள வறுமை அல்லது ஏழ்மை மனப்பாங்கை விடுப்போம். நம்மிடம் உள்ள வளமை, செல்வம், ஆற்றல், திறன் அனைத்தையும் பட்டியலிடுவோம். அவற்றை அன்றாடம் மேம்படுத்துவதே நம் இலக்காக இருக்கட்டும்.

மிகுதியான செல்வம் வரும்போது மிகுதியாக அதைப் பகிர்ந்துகொள்ள முடியும். இதையே இன்றைய பதிலுரைப்பாடலில் (காண். திபா 112), 'சொத்தும் செல்வமும் அவர்களது இல்லத்தில் தங்கும் ... அவர்கள் வாரி வழங்கினர், ஏழைகளுக்கு ஈந்தனர்' என வாசிக்கிறோம்.


No comments:

Post a Comment