Wednesday, October 14, 2015

நைட் வாட்ச்மேன்

வலைப்பூவில் பதிவிட்டு இன்றுடன் 20 நாட்கள் ஆகிவிட்டன.

21 நாட்கள் ஒன்றைத் தொடர்ந்து செய்தால் அது ஒருவரின் அழிக்க முடியாத பழக்கமாகிவிடும் என்று கல்வியியல் மேலாண்மையியலில் சொல்வார்கள். 20 நாட்கள்தான் ஆகின்றன. ஆக, இது பழக்கமாக மாற வாய்ப்பில்லை.

விடுமுறை முடிந்து இனிதே உரோமை திரும்பினேன்.

கொஞ்சம் உடல்நலக்குறைவு. இது தவிர வேறொன்றும் குறையில்லை.

புதிய இடங்கள், புதிய நபர்கள், புதிய சந்திப்புகள் என இந்த விடுமுறை பல புதியவற்றிற்கு வழிவகுத்தது.

புதியவை வந்தால் பழையவை மறைந்துவிடுமா என்ன?

பழைய நட்பு, பழைய உறவு எதுவும் அர்த்தத்தில், சுவையில் குறைந்துவிடவும் இல்லை.

கோப்பைகளை நிரப்பி தழும்ப வைக்கின்றார் இறைவன். அவருக்கு நன்றி.

வலைப்பூ உருவாக்குவது எந்த அளவிற்கு கஷ்டமோ, அதைவிட கஷ்டம் அதை நாடி வரும் வாசகர்களைத் தக்கவைப்பது.
ஒருநாளைக்கு ஒரு லட்சம் பேர் பார்க்கும் வலைப்பூக்களும் இருக்கின்றன.

நாளைய இறைவாக்கு வழிபாட்டின் ஒரு பகுதியாக இருக்கும் திபா 130ஐ சிந்தனையின் மையமாக எடுத்துக்கொள்வோம்.

அருட்பணியாளர் இறந்தவரின் வீட்டில் சொல்லும் செபத்தின் தொடக்கம் இந்தத் திருப்பாடல்தான்.

இந்தத் திருப்பாடலில் வரும் மிக அழகிய உருவகம் 'வாட்ச்மேன்!'

'விடியலுக்காய் காத்திருக்கும் காவலரைவிட,
ஆம், விடியலுக்காய் காத்திருக்கும் காவலரைவிட,
என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது' (திபா 130:5)

என்று பாடுகின்றார் ஆசிரியர்.

ஒருகாலத்தில் திடகாத்திரமாக உள்ளவர்கள் மட்டும்தான் வாட்ச்மேன்களாக நியமிக்கப்பட்டனர். இன்று ரிடையர்ட் ஆன ஆண்கள்தான் அதிகமாக வாட்ச்மேன்களாக இருக்கின்றனர்.

நானும் என் நண்பர் அகஸ்டினும் ஒருநாள் இரவு மாட்டுத்தாவணியில் இருந்து புதூர் செல்லும் சாலையில் நடந்து கொண்டிருந்தோம். ஃபியட் கார்களின் ஒர்க்ஷாப்பின் வெளியில் ஒரு ஸ்டீல் சேரில் அமர்ந்திருந்த வயதான வாட்ச்மேன் (70க்கு மேல் இருக்கும்) கொட்டாவி விட்டுக்கொண்டே எழுந்து தன் சைக்களில் மாட்டியிருந்த டிபன் கேரியரில் எதையோ தேடிக்கொண்டிருந்தார்.

தன் வாழ்நாளில் சைக்கிளைவிட வேறு எதிலும் பயணம் செய்திராத ஒருவர் ஃபியட் கார் நிறுவனத்தில் காப்பாளராக இருப்பது எவ்வளவு பெரிய முரண்!

ஒன்பது மணிதான் ஆகியிருந்தது. ஆனால், அவரின் முகத்தில் தூக்கம் அப்பியிருந்தது. பகல்முழுவதும் வேறு வேலைக்குச் சென்றுவிட்டு, இந்த வயதில் இரண்டாம் வேலை பார்க்கும் இவரின் குடும்பப் பிண்ணனி என்னவோ?

ஆனால் இவரைப் போலவே இந்த இரவில் கண்விழிக்கும் எல்லா வாட்ச்மேன்களின் ஒட்டுமொத்த உணர்வைப் பதிவு செய்கிறார் திருப்பாடல் ஆசிரியர்.

'எப்போது விடியும்?' என்று காத்திருக்கும் இந்த வாட்ச்மேன்களின் உணர்வு வெறும் ஏக்கம் மட்டுமல்ல. பயமும் கூட. இரவில் எதுவும் நடக்கலாம். பாதுகாப்பாக இந்த இரவு விடியுமா என்ற பயம். தன்னை நோக்கி வரும் யாவரிடமும் இவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பனி, குளிர், மழை என எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ள வேண்டும். வேண்டா வெறுப்பாக ஆறிப்போயிருக்கும் டீயைக் குடித்துக்கொள்ள வேண்டும். சற்றே கண்ணயர்ந்தாலும், எந்த அரவமும் அவரை எழுப்ப வேண்டும். மேலும், உலகமே தூங்கிக்கொண்டிருக்கும் வேலையில் இவர் தூங்காமல் விழித்திருக்க வேண்டும். மற்றவர்கள் செய்வதற்கு முரணான காரியத்தை செய்வதால்தான் இவர் ஊதியம் பெறுகின்றார்.

இவரின் உச்சகட்ட பாதுகாப்பு இவரின் கையில் இருக்கும் ஒரு குச்சிதான். கள்வர்களால் இவர் தாக்கப்பட்டாலும் இவரைக் கண்டுகொள்வார் யாருமில்லை. இவர்களுக்கென்று எந்த பணி நிரந்தரமும் கிடையாது. இவர்களின் உரிமைகளுக்காக யாரும் போராடுவதில்லை. பகலில் போரடச் சென்றுவிட்டால் இரவில் இவர்களால் எப்படி விழித்திருக்க முடியும்?

நம் மனித வாழ்க்கையை இவரோடு பொறுத்திப்பார்க்க எந்த அளவிற்கு ஞானம் பெற்றிருக்க வேண்டும் திருப்பாடல் ஆசிரியர்?

நம் மனித வாழ்வும் தூக்கத்தில் விழித்திருக்கும் இந்த காவலர் போன்றதுதானே. அடுத்த என்ன நடக்கும் என்ற பயம், விடியுமா என்ற ஏக்கம், டீ தரும் உற்சாகம் என எல்லாம் கலந்ததுதானே என் வாழ்க்கை.

பின்வரும் வரிகளை மௌனமாக வாசித்தாலே போதும்.

வாழ்வை நாம் புதியதாகப் பார்க்கத் தொடங்குவோம்:

'ஆண்டவருக்காக ஆவலுடன் நான் காத்திருக்கின்றேன்.

என் நெஞ்சம் காத்திருக்கின்றது.

அவரது சொற்களுக்காக ஆவலுடன் காத்திருக்கின்றேன்.

விடியலுக்காய் காத்திருக்கும் காவலரைவிட,

ஆம், விடியலுக்காய் காத்திருக்கும் காவலரைவிட,

என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கின்றது...'


2 comments:

  1. 20 நாட்களாக வலைப்பூவின் மென்மையையும்,வாசத்தையும் உணர முடியாமல் நாங்களும் தான் கண்கள் சோர்ந்து,அயர்ந்து போய்விட்டோம் அந்தக் காவலரைப்போல.நம் மனித வாழ்க்கையை விடியலுக்காய் காத்திருக்கும் காவலரோடு ஒப்பிட்ட ஆசிரியர் ஒரு பக்கம் பாராட்டப்பட வேண்டியவரெனில், ஓர் இரவுப்பொழுது ஒரு கார் கம்பெனியின் காவலரின் அனுபவத்தைத் தங்களின் நண்பருடன் சுவைபடப் பகிர்ந்து கொண்ட நயத்திற்காகத் தந்தையும் பாராட்டப் பட வேண்டியவரே! அந்த காவலரிடமாவது ஒரு குச்சி இருக்கிறது பாது காப்புக்கு? நம்மிடம் என்ன உள்ளது அடுத்த நிமிட சத்தியத்தைக்கூட நம்ப இயலாத 'சந்தேகத்தையும்,மனக்கிலேசத்தையும்' தவிர? சரியான வார்த்தைகளை முறையாக்க் கொடுத்த தந்தைக்கு நன்றி.ஆம்! " விடியலுக்காய்க் காத்திருக்கும் காவலரைவிட என் நெஞ்சம் என் தலைவருக்காய் ஆவலுடன் காத்திருக்கிறது"... உற்சாகமூட்டும் வார்த்தைகள். மகிழ்ச்சிமிக்க விடுமுறை முடிந்து உடல்நலக்குறைவிலும் தந்தையை நலமுடன் நாடு சேர்த்த இறைவனுக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. தந்தைக்கு வணக்கங்கள்! மீண்டும் வலைப்பூவின் மூலம் தங்களை சந்திக்க வாய்ப்பு கொடுத்த இறைவனுக்கு நன்றிகள். "நைட் வாட்ச்மேன்" என்ற படைப்பில் எனக்கு பட்ட வார்த்தைகள் இதுவே " உன்னை சுற்றி எல்லா சந்தோசங்கள் இல்லாமல் போனாலும் உன்னில் கடவுள் இருக்கிறார், ஆகவே பதட்டபடாமல் உனக்குள் இருக்கும் கடவுளை புரிந்து கொள்". திருப்பாடல் 130 - ன் வார்த்தைகள் மிக அற்புதமானவை மற்றும் ஆழமானவையும் கூட.ஆண்டவரே நாங்கள் அனைவரும் உனக்காக காத்திருக்கும் வரம் தாரும்.பணியை சீரும் சிறப்புமாக ஆற்ற தந்தைக்கு பாராட்டுகள்.

    ReplyDelete