Saturday, October 17, 2015

வலப்புறமும், இடப்புறமும்

இயேசுவின் சீடர்கள் 12 பேரில் 2பேர்தான் மிகவும் பணம்படைத்தவர்களாக, அல்லது பணக்கார பின்புலத்தோடு வந்திருக்க முடியும்.

யார் அந்த இரண்டு பேர்?

செபதேயுவின் மக்கள் யாக்கோபு மற்றும் யோவான்.

ஏன்?

இவர்களை இயேசு அழைக்கும்போது, இவர்கள் தங்கள் தந்தையை கூலியாட்களோடும், தங்கள் படகையும், வலைகளையும் விட்டுவிட்டு வந்தார்கள் என்று சொல்லப்படுகிறது.

ஆக, இவர்களுக்குச் சொந்தமாக படகு, வலைகள் - அதாவது, தொழில் - இருந்தது. மேலும் இந்தக் குடும்பத்தை நம்பி சில கூலியாட்களும் இருந்தனர். கூலியாட்களை வைத்திருப்பது என்பது இயேசுவின் காலத்தில் பெரிய அதிகாரத்தின் அல்லது பணபலத்தின் அடையாளமாக இருந்தது.

இந்த சகோதரர்கள் தங்களுக்கென்று இருந்த எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்தொடர்கின்றனர்.

பேதுருவோடு இணைந்த இந்த இரண்டு சீடர்களும் இயேசுவைச் சுற்றிய முதல் வட்டத்தில் இருக்கின்றனர்.

இந்த இருவரும் இயேசுவுக்குப் பின்னும் திருச்சபையில் முதன்மையான இடம் பிடித்திருந்தனர். யாக்கோபும், யோவானும் இயேசுவுக்கு இரத்த உறவானவர்கள் என்றும் பாரம்பரியம் சொல்கிறது. ஆக, இரத்த உறவு அடிப்படையில் இவர்களில் ஒருவரையே தொடக்கத் திருச்சபை இறைமக்கள் தங்கள் தலைவராக ஏற்றுக்கொள்ள விரும்பினர்.

'வலப்பக்கம் ஒருவரும், இடப்பக்கம் ஒருவரும்' என்ற சொல்லாடலை நாம் நற்செய்தி நூலில் நாளைய பகுதி தவிர இரண்டு இடங்களில் வாசிக்கின்றோம்: இறுதி நீதித்தீர்ப்பின்போது கடவுள் வலப்புறம், இடப்புறம் என மக்களைப் பிரிக்கின்றார். இரண்டாவதாக, இயேசுவின் அருகில் வலப்புறம் ஒருவரும், இடப்புறம் ஒருவரும் சிலுவையில் அறையப்படுகின்றனர். இந்த இரண்டு நிகழ்வுகளிலும், வலது என்பது சிறந்தது என்பதும், இடது என்பது தாழ்வானது என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஆக, வலதைத் தேர்ந்து கொண்டு, இடதை ஒதுக்கிவிட வேண்டும்.

ஆனால், இன்று வலது-இடது பேதம் யாரும் பார்ப்பதில்லை. நம்ம ஊர்க்குழந்தைகளும் இப்போ இடது கையில் எழுதினால் பெற்றோர்கள் கண்டிப்பதில்லை.

நாளைய நற்செய்தி வாசகத்திலும் வலது-இடது பேதமில்லை. யாக்கோபும், யோவானும் இயேசுவுக்கு அருகில் இருக்க விரும்புகின்றனர். அருகிருக்க விரும்புவது தவறா? இல்லை. பின் அவர்களின் தவறு என்ன?

'நான் அருகிலிருக்கிறேன். மற்றவர்கள் தூரத்தில் இருக்கட்டும்' என்று தங்களை முன்னிருத்தி மற்ற பதின்மரை ஓரங்கட்டியதுதான் தவறு. இது மற்றவர்கள் மனதிலும் கோபத்தை உருவாக்குகிறது.

'ஃபேவரிட்டிசம்' - இது பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு அடிக்கடி வரும் சோதனை.

சிலரை மட்டும் என்னருகில் வைத்துக்கொண்டு, மற்றவர்களை தள்ளி விடுவது. அல்லது சிலரின் நெருக்கத்தால் மற்றவர்கள் தாங்களாகவே தள்ளி நின்று கொள்வது. இப்படி இருக்கும்போது அங்கே பாதிக்கப்படுவது நடுவில் அமர்ந்திருப்பவரும், அருகில் நிற்பவரும்தான். நடுவில் அமர்ந்திருப்பவரை மற்றவர்கள் வெறுப்பர். அருகில் நிற்பவர்கள்மேல் மற்றவர்கள் பொறாமை கொள்வர்.

தன் திருஅவையின் நலன்கருதி இயேசு இவர்களின் கோரிக்கையை உடனடியாக நிராகரிக்கின்றார். 'அது யாருக்கோ எழுதியிருக்கிறது!' என்று சொல்லி கடையை மூடுகின்றார்.

இன்று கடவுளை நான் நெருங்க வேண்டும் என்பது என் ஆசையாக இருக்கிறது. ஆனால் இந்த ஆசை அல்லது நெருக்கம் மற்றவர்களை அவரை நெருங்கவிடாமல் செய்யக் கூடாது.

என்னைவிட பெரியவர்கள், பதவியில் இருப்பவர்கள் என யாரைப் பார்த்தாலும் என் மனம் அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள விழைந்தால், நான் ஒருநிமிடம் மற்றவர்களையும் நினைத்துப் பார்க்க வேண்டும். என் அடையாளம் எனக்கு உள்ளேயே இருக்கிறது. பெரியவர்களுடன் நான் இணைந்திருப்பதால் எனக்கு மேன்மை வந்துவிடுகிறதா. இல்லை. என் மேன்மை எனக்குள். அந்த மேன்மையை மென்மையாக கடைசியில் இருப்பவரின் பாதம் கழுவப் பயன்படுத்தினால் அதுவே சால்பு.


2 comments:

  1. அழகான பதிவு. வசதியான வாழ்க்கை தங்கள் கைவசமிருந்தும் அதைக்கைவிட்டு இயேசுவைப் பின்தொடரும் யாக்கோபும்,யோவானும் இயேசுக்கு இரத்த உறவானவர்களெனக் கூறப்படுகிறது.இரத்த உறவின் முறையில் அவர்களில் ஒருவரைத் தலைவராக மக்கள் ஏற்றுக் கொண்டதைத் தான் இன்றும் நம் மக்கள் குடும்ப அரசியலாகப் பின்பற்றுகிறார்களோ??!! வலப்பக்கம், இடப்பக்கம் என்ற பேத்த்தையும் மீறி மேலிடத்தில் உள்ளவர்களிடம் உள்ள சிலரின் நெருக்கத்தால் பலர் பாதிக்கப்படுவது இன்று சாதாரணமாகிப் போன விஷயம்.ஆனால் தந்தையிடம் ஒரு கேள்வி....இன்று நான் இயேசுவிடம் நெருங்கிப் போவது மற்றவர்கள் செல்வதை எப்படித் தடை செய்யும்? இயேசுவை நெருங்க யாரும் எந்தக் க்யூவிலும் நிற்கத் தேவையில்லையே! ஆனால் ஒன்று...என்னிடம் இருக்கும் மேன்மையை நான் உணராமல் என்னைவிட இன்ஃப்லுயன்ஸ் மிக்கவரிடம் சேர்வதால் என் பெருமை ஓங்குமென நினைத்தால் நான் ஒரு கையாளாகாதவனாகி விடுவேன் என்பதே உண்மை.நம்மிடமுள்ள மேன்மையையும்,மென்மையையும் யாருக்காக,எதற்காகப் பயன்படுத்துகிறோம்? யோசித்துப் பார்க்க அழைப்பு விடுக்கும் தந்தைக்கு என் நன்றிகள்!!!!

    ReplyDelete
  2. தந்தைக்கு வணக்கம். என் மேன்மை எனக்குள். அந்த மேன்மையை மென்மையாக கடைசியில் இருப்பவரின் பாதம் கழுவப் பயன்படுத்தினால் அதுவே சால்பு.இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்த வரிகள் உங்களது பதிவில் .நாம் இயேசுவோடு செபத்தில் இணைந்திருந்தால் மட்டும் போதாது. அவருடைய திருவுளத்தை அறிந்து கொள்கிறவர்களாக இருக்க வேண்டும். அவர் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையையும், புரிந்து கொள்ளக்கூடியவர்களாக இருக்க வேண்டும். அப்படிப் புரிந்து கொள்கிறபோதுதான், அதற்கேற்றாற்போல, நமது வாழ்வையும் நாம் மாற்றிக்கொள்ள முடியும். இல்லையென்றால், இந்த சீடர்களைப்போல, நாமும் தவறான பார்வையைத்தான், இயேசுவைப்பற்றி பெறுவோம்.எனவே நான் எந்த நிலையில் இருந்தாலும் எனக்கு கீழ் உள்ளவர்களின் உணர்வை புரிந்து வாழ என் சிந்தனையை தூண்டிய தந்தைக்கு எனது பாராட்டுக்கள்.

    ReplyDelete