Monday, October 26, 2015

ஆபிரகாமின் மகள்

நாளைய நற்செய்தி வாசகத்தில் (லூக்கா 13:10-17) மூன்று நபர்களைப் பார்க்கிறோம்.

பதினெட்டு ஆண்டுகளாய் தீய ஆவி பிடித்திருந்து நிமிர முடியாத ஒரு பெண்.

ஓய்வுநாளில் குணப்படுத்தும் இயேசு.

ஓய்வுநாளில் மக்கள் குணம்பெறுவதை எதிர்க்கும் தொழுகைக்கூடத் தலைவர்.

இயேசுவின் அறிகுறிகள் எல்லாவற்றிலும் இந்த மூன்றுபேரைப் பார்க்கலாம்: ஒருவர் தேவையில் இருப்பார், அடுத்தவர் தேவையை நிறைவேற்றுவார், மற்றவர் எதிர்ப்பாக இருப்பார்.

இயேசு இந்த அறிகுறியை தானாகவே நிறைவேற்றுகின்றார். ஆக, இங்கு தொழுகைக்கூடத்தலைவர் இயேசுவின்மேல் தான் கோபப்பட வேண்டும். ஆனால், தன் கோபத்தை வந்திருந்த மக்கள் மேல் காட்டுகின்றார்.

மேலும், அவருக்கு மக்களின் நலத்தைவிட ஓய்வுநாள்தான் பெரிதாகத் தெரிகிறது.

21 நாட்களாக வத்திக்கானில் நடந்து வந்த குடும்பம் பற்றிய திருப்பேரவை இன்றோடு நிறைவேறியது. விவகாரத்து பெற்றவர்களும், மறுமணம் செய்தவர்களும் நற்கருணை உட்கொள்ளலாம் என அனுமதித்திருக்கிறது பேரவை. ஆனால், அதற்கு சில நிபந்தனைகளையும் விதித்துள்ளது. இன்னும் பேரவையின் தீர்மானங்கள் முழுமையாக வெளியேறவில்லை. ஆனால், திருஅவை தனக்குத்தானே வைத்திருக்கும் தன் சட்டங்களை கொஞ்சம் தளர்த்தி எல்லார்மேலும் கருணை காட்டுகிறது என்பது இதில் புலப்படுகிறது. இந்த பேரவை குறித்த நிறைய விமர்சனங்கள் தொலைக்காட்சியில் வருகின்றன. என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்ப்போம்.

சில சமயங்களில் நம் திருஅவை சட்டங்கள் யூதர்களின் சட்டங்களைவிட மிக கொடுமையாகவே இருக்கின்றன. இயேசுவின் ஆவியிலிருந்து சட்டம் நம்மை தூர கொண்டுவந்துவிட்டது.

நாளைய முதல் வாசகத்தில் (உரோ 8:12-17) தூய பவுல், நாம் இயேசுவின் ஆவியால்தான் கடவுளை 'அப்பா, தந்தாய்' என அழைக்கிறோம் என பெருமைப்படுகிறார்.

இயேசுவுக்கு இது நன்றாக தெரிந்தது. ஆகையால்தான் கூன்விழுந்த அந்தப் பெண்ணையும் 'மகள்' என அழைத்து நிமிரச் செய்கின்றார்.


2 comments:

  1. விவிலியத்தில் பல இடங்களில் இயேசு செய்யும் புதுமைகளோடு இந்த ஓய்வுநாளுக்கான தர்க்கமும் சேர்ந்தே வருவதைப் பார்க்கிறோம்.நாம் செய்யும் எந்த ஒரு அறச்செயலுமே அது செய்யப்படும் நேரம் குறித்தே அது புனித்த்துவம் பெறுகிறது.தாகத்தின் விளிம்பிலிருக்கும் ஒருவனுக்கு ஓய்வுநாளைக் காரணம் காட்டி தண்ணீர் மறுக்கப்படுகையில் அவன் உயிரிழக்க நேரிடலாம்.ஓய்வுநாள் மாறி மாறி வந்து போகலாம்; ஆனால் போன உயிர் போனதுதானே! நல்ல செயல்கள் செய்வதற்கு ஓய்வுநாள் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதை உணர்த்த வரும் இயேசு " ஓய்வு நாளும் மானிடமகனுக்கு உட்பட்டதே" என்கிறார்.இங்கு திருஅவை கொண்டுவரும் சட்டங்களைப் பற்றி நமக்கு புரிய வைக்கும் தந்தையும் சட்டங்கள் மனிதனுக்கு,அவன் மகிழ்ச்சிக்கு வழி வகுக்க வேண்டுமேயன்றி அவன் கழுத்தை இறுக்கும் 'பூணாக' மாறக்கூடாது என்பதைச் சொல்லாமல் சொல்கிறார். இன்றைய நற்செய்தி காட்டும் வழியில் நாமும் கூட இன்று ஒருநாள் தேவையில் இருப்பவராக இராமல் தேவையில் இருப்பவருக்கு உதவிக்கரம் நீட்டுபவராக மாறலாமே! அப்பொழுது நாமும் இயேசுவின் ஆவியால் கடவுளை "அப்பா,தந்தாய்" என அழைக்கும் உரிமையும்,பெருமையும் அடையலாமே! நல்லதொரு பதிவைக் கொடுத்த தந்தைக்கும்,அனைவருக்கும் இந்த வாரம் இனிதே அமைந்திட வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  2. தந்தைக்கு வணக்கம்."ஆபிரகாமின் மகள்" இன்றைய பதிவு ஆரம்பமே ரொம்ப அமர்க்களமாக இருக்கிறது.நல்லது செய்வதற்கு ஏன் எப்போதும் சட்ட திட்டங்கள் மூலமா போகணும்.இயேசு இன்றைக்கு பண்ணின காரியம் நல்ல காரியம்.அவர் தூய ஆவியின் உந்துதலினாலும் தந்தையின் துணையாலும் ரொம்ப தைரியமாக செய்கிறார். ஆனால் .நான் சில நேரங்களில் பயந்து பயந்து செய்ய வேண்டியதாக இருக்கிறது .தூய ஆவியின் துணையோடு பவுல் கூறுவது போல கடவுளை 'அப்பா, தந்தாய்' என்று அழைப்பதோடு நின்று விடாமல் நாலு பேருக்கு தேவையான நல்லதையும் செய்ய வரம் கேட்போம். தந்தைக்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete