Friday, October 23, 2015

பிம்பக் காதல்கள்

நேற்று மாலை 'ரோமியோ- ஜூலியட்' (தமிழ்) திரைப்படம் பார்த்தேன். ஷேக்ஸ்பியரின் தலைப்பு என்பதால் திரைப்படமும் அந்த நாடகத்தை ஒட்டியிருக்கும் என நினைத்தேன். ஆனால், ஒரு தொடர்பும் இல்லை.

ஒரு காதலி, இரண்டு காதலர்கள். இல்லை. ஒரு காதலி, இரண்டு காதல்கள் என்று சொல்லலாம்.

காதலி ஐஸ்வர்யா முதலில் கார்த்திக்கையும், பின் அர்ஜூனையும் காதலிக்கிறாள். இறுதியில் கார்த்திக்கைக் கரம் பிடிக்கிறாள். வழக்கமான தமிழ் மசாலாதான். இடையிடையே கொஞ்சம் ஓவர் செண்டிமென்ட். காதலியை கொஞ்சம் அப்பார்ட்மெண்ட் கலாச்சாரத்தில் காட்டியிருக்கிறார்கள்.

பணமா? அன்பா? - இதுதான் கேள்வி. முதலில் காதலி பணத்தையும், இரண்டாவதாக அன்பையும் தெரிந்துகொள்கிறாள். இதுதான் ஒற்றைவரியில் திரைப்படம்.

ஆனால், இங்கே காட்டப்படும் காதல் என்னன்னா ரொம்ப தப்பான காதல்.

அதாவது, காதல் என்பது அடுத்தவர்மேல் வருவது. அடுத்தவரைப்பற்றிய என் பிம்பத்தில் வருவது அல்ல.

உதாரணத்திற்கு, எக்ஸ்ஒய்இசட் என்று ஒரு பொண்ணு இருக்கா என வைத்துக்கொள்வோம். அவள் சிறந்த நாட்டியக்காரி. அவளின் நடனம் எனக்குப் பிடிக்கிறது. நடனமாடும் அவளின் பிம்பம் என் மனதில் விழுந்துவிடுகிறது. அவள்மேல் நான் காதல் கொள்கிறேன். ஆனால் சில நாட்களில் அவள் உடல்நலம் குறைந்து நடனமாட முடியாமல் போய்விடுகிறது. இப்போது அவள்மேல் உள்ள என் அன்பும் குறைந்துவிடுகிறது. இங்கே என்ன நடக்கிறது என்றால், நான் அவளை அன்பு செய்யவில்லை. மாறாக, என் உள்ளத்தில் பதிந்த அவளின் பிம்பத்தைதான் நான் அன்பு செய்திருக்கிறேன். அந்த பிம்பம் மறைந்தவுடன் அன்பும் மறைந்துவிடுகிறது.

காதலிக்காதீங்க! என்று இடையிடையே விழிப்புணர்வு தருவதாக கொஞ்சம் பாடல்கள் வேறு. ஐயோ ராமா! யாராவது இவங்ககிட்டு இருந்து எங்களைக் காப்பாத்துங்களேன்!

இன்று திரைப்படங்கள் காட்டும் காதல்கள் பெரும்பாலும் பிம்பக் காதல்களே.

பிம்பக் காதல்கள் வளரக் காரணம் இன்று யாருக்கும் பொறுமை இல்லை. நிழலைப் பார்க்த்தான் நமக்கு நேரம் இருக்கிறது தவிர, நிஜத்தைப் பார்க்க நேரமில்லை. கடவுள், மனிதர்கள், வேலை, படிப்பு என்று நாம் நிழல்களைத்தான் இன்று விரட்டிக்கொண்டிருக்கிறோம்.

நிற்க.

நாளைய நற்செய்தியில் (லூக்கா 13:1-9) ஒரு திறமையான தோட்டக்காரரை நாம் சந்திக்கின்றோம். இயல்பாகவே எனக்கு இந்த தோட்டக்காரர் மேல் ஒரு ஈர்ப்பு உண்டு. பயன்தராத ஒரு மரத்தைக் காட்டி, 'இதை வெட்டிவிடு!' என்று தோட்டத்து உரிமையாளன் சொல்கிறான். 'எனக்கென்ன! அவனது மரம்! வெட்டச் சொல்கிறான். நான் வெட்டுகிறேன்' என்று வெட்டி சாய்த்துவிட்டு, தூக்குச் சட்டியைத் திறந்து கஞ்சி குடிப்பதை விட்டுவிட்டு, இந்தத் தோட்டக்காரர் யோசனை சொல்கிறார். என்ன யோசனை?

'இந்த ஆண்டு இதை விட்டு வையும். நான் இதைச் சுற்றிலும் கொத்தி எரு போடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி. இல்லையானால் வெட்டிவிடலாம்.'

யோசனையின் முதல் பகுதியை மட்டும் எடுத்துக்கொள்வோம்.

'நான் இதற்கு இன்னும் அதிகம் கவனம் செலத்துவேன்' என்கிறார் தோட்டக்காரர்.

மரத்தைச் சுற்றி முதலில் அகன்ற பாத்தி கட்ட வேண்டும். அந்தப் பாத்தியில் தேவையான நீர் இருக்க வேண்டும். நீர் தேவைக்கு அதிகமாக இருந்தாலும் மரம் அழுகிவிடும். அந்த பாத்தியின் மண்ணை உரமுள்ளதாக்க எரு போட வேண்டும். ஆக மொத்தம் இந்த ஆண்டு அந்த தோட்டக்காரருக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா வேலை.

தோட்ட உரிமையாளருக்கு மரத்தின் பிம்பம்தான் கண்ணுக்குத் தெரிந்தது. அவருக்கு பொறுமையில்லை.

ஆனால் தோட்டக்காரருக்கு மரம் மரமாகத் தெரிகிறது. அவருக்கு எண்ணற்ற பொறுமை இருக்கிறது.

இன்று கடவுள் நம் பிம்பத்தைப் பார்த்து, நாம் செயல்படுவதைப் பார்த்து, நாம் நன்றாகப் படிப்பதைப் பார்த்து, நாம் புண்ணியங்கள் செய்வதைப் பார்த்து, நம்மை அன்பு செய்பவர் அல்லர். அவர் நம்மை நாமாகப் பார்க்கிறார். நாம் பலன்தரவில்லையென்றாலும் இன்னும் அதிகம் பராமரிக்கவும் தயாராயிருக்கிறார். 'இவனைக் கவனிப்பது டைம் வேஸ்ட், எனர்ஜி வேஸ்ட், ரிசோர்சஸ் வேஸ்;ட்' என்று நினைப்பதில்லை.

இந்த நிகழ்வு எனக்கு இரண்டு கேள்விகளை வைக்கின்றது:

அ.  ஒருவர் எனக்கு எவ்வளவு பயன்தருகிறார் என்பதை வைத்துத்தான், அல்லது ஒருவரின் பிம்பத்தை வைத்துத்தான் நான் அவரை ஏற்றுக்கொள்கிறேனா? அல்லது அன்பு செய்கிறேனா?

ஆ. என் உறவில் ஒருவேளை என் அன்பிற்குரியவர் நான் எதிர்பார்க்கும் கனி தரவில்லையென்றால், அல்லது என் உறவு கனிதரும் உறவாக இல்லையென்றால் நான் அவரை அல்லது அதை வெட்டிச் சாய்ப்பதில் குறியாய் இருக்கிறேனா? அல்லது இன்னும் கொஞ்சம் அதிகம் நேரம் கொடுத்து, உரமிட்டு, அதைக் கனிதர வைக்கும் அக்கறையும் பொறுமையும் காட்டுகிறேனா?


4 comments:

  1. தந்தைக்கு வணக்கம். "பிம்பக் காதல்கள் " அடே அடே என்ன ஒரு அர்புதமான பதிவு.அதை படிக்கும் போதே எனக்கு ஒரு டவுட்டு என்னவென்றால் தந்தைக்கு பிரச்சனை என்னவா இருக்கும் என்று ?
    பதிவை முடிக்கும் தருவாயில் நான் புரிந்து கொண்டேன் தந்தையின் உள்ள ஏக்கத்தை.கருணை உன் வடிவல்லவா !!! பாட்டு உங்கள் மனதிற்கு ஏற்ற பாட்டு.
    ஏனென்றால் பார்வைகள் பலவிதம். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிகழ்வையும் வேறுபாட்டான பார்வையோடு பார்க்கிறோம். இந்த வரிசையில், கடவுளைப்பற்றி நமது பார்வையும் ஒருவர் மற்றவரிடமிருந்து வேறுபடுகிறது. கடவுளை நாம் எப்படிப்பட்ட பார்வையோடு பார்க்க வேண்டும் என்பதை தந்தை நமக்கு சுட்டிக்காட்டுகிறார். கடவுளை வெறுமனே கண்டிக்கிறவராக மட்டும் இல்லாமல், கருணைமிகுந்தவராகவும், இரக்கமுள்ளவராகவும் நாம் பார்ப்போம்.அதிலும் சிறப்பாக பொறுமையுள்ளவராகவும் நாம் பார்க்க வேண்டும் என்பதே தந்தையின் பிரச்சனை.
    நம் உறவுகள் பிறரிடம் அதிகம் எதிர்பார்க்காமல் இல்லாமல் உண்மையான அன்பை பிரதிபலிக்க கூடியதாக இருக்க அன்னையை வேண்டுவோம்.அப்போதுதான் அன்னை மரியாள் எலிசபெத்தம்மாலை சந்தித்த போது கிடைத்த சந்தோசம் நம்மில் கிடைக்கும்.இன்றைக்கு நான் கொஞ்சம் ஓவரா போயிட்டேன்.என் பாச தந்தைக்கு கைதட்டி பாராட்டுக்கள்!

    ReplyDelete
  2. இன்றைய காலகட்டத்திற்கேற்ற,இன்றைய இளந்தலைமுறையினருக்கேற்ற அழகானதொரு பதிவு.காதலையும்,காதலர்களையும் மீறி என்னைப் பாதித்தது பொறுப்பான அந்தத் தோட்டக்காரனே! மரத்திற்கு சொந்தக்காரன் அந்த மரம் பற்றித் தெரிந்து வைத்திருப்பதைவிட தோட்டக்காரன் அதிகமாகத் தெரிந்து வைத்திருக்கிறான்....காரணம் அவன் அதை மரமாக அல்ல...தன் குழந்தையாகவே நேசிக்கிறான்.ஒருவன் நிழலை நேசித்தால் மற்றவன் நிஜத்தை நேசிக்கிறான். இந்த தோட்டக்காரன் உவமை ஒன்றும் புதிதல்ல...ஆனால் தந்தை அதை இன்று நம் உறவுப்பழக்கத்தோடு, நாம் ஒருவரிடம் செலுத்தும் அன்பின் தன்மையோடு ஒப்பீடு செய்திருப்பதுதான் புதிதாதப் படுகிறது.அக்காலப் பண்டம் மாற்று முறையாய்ப் போனது இக்காலக்காதலும்,ஒருவரை அன்பு செய்வதும்.இதில் நான் கொடுப்பது பெரிதா இல்லை நீ கொடுப்பது பெரிதா என்பதை அளக்க தாராசுத் தட்டைத் தேடுபவர்களும் உண்டு.ஆனால் அதையும் மீறி ஒருவரை அவருக்காகவே,அவரது மனதுக்காகவே மட்டும் நேசிக்கும் உறவுகளும் உண்டு.இப்பேர்பட்ட உறவுகளில் கஷ்டம் , கண்ணீர், வாக்குவாதம் எல்லாமே அதிகம் தான்.ஆனால்அதுதான் நிலைத்து நிற்கக் கூடியது.ஏனெனில் அங்கு ஒருவர் மற்றொருவரிடம் எதிர்பார்ப்பது அவரின் மனத்தைத்தான்...பின்னனியை அல்ல. நம் நிறைகுறைகளைப் பார்ப்பதென்றால் யார்தான் இறைவனின் அன்புக்குத் தகுதியானவர்களாக நிற்க முடியும்? இந்த இறையன்புக்கீடான அன்பை நாமும் நம்மைச் சுற்றி இருப்பவர்களுக்கு அலுங்கிக் குலுங்கிக் கொடுப்போம்.தந்தையிடம் ஒரு கேள்வி.....கடுமையான வேலைப்பழுவிற்கு மத்தியிலும் இப்படி 'ரோமியோ ஜூலியட்' போன்ற படம் பார்க்க எப்படி நேரம் ஒதுக்க முடிகிறது? இதற்குப் பெயர்தான் 'Time management'டோ??!!

    ReplyDelete
  3. first of all i wish to thank u for this good reflection on today's gospel passage.for the small clarification.while i was reading the concluding message of ur reflection i just smiled at that point.the reason is this.while reflecting on this passage we say god does not love us by looking at our activities but waits patiently untill we give fruitsand he loves us as we r.

    when we read the parable of talents,can we say God will not look at us as we r,rather if we don't give fruits he will through us out?

    ReplyDelete