Sunday, March 8, 2015

எருசலேம் ஆலயமும் இந்தியாவின் மகளும்

'ஆனால் அவர் தம் உடலாகிய கோவிலைப்பற்றியே பேசினார்.' (யோவான் 2:21)

2012 டிசம்பர் 16ஆம் தேதி நம் நாட்டின் தலைநகர் டெல்லியில் நடந்த கூட்டுக் கற்பழிப்பில் பலியான ஜோதி சிங் (1989-2012) அவர்களை மையமாக வைத்து இங்கிலாந்தின் லெஸ்லி உட்வின் இயக்கத்தில் வெளியான 'இந்தியாவின் மகள்' (India's Daughter) என்ற ஆவணப்படம் பார்த்தேன் இன்று. இந்தியாவில் ஒவ்வொருவரும் பார்த்துப் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய காணொளி, நம் நாட்டு அமைச்சகத்தால் தடை செய்யப்பட்டிருக்கிறது. இரண்டு நாட்களுக்கு முன் பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு இன்றுவரை யுடியூபிலும் இருக்கிறது. நம் நாட்டில் ஒருவேளை யுடியூபிலும் தடைசெய்யப்பட்டிருக்கலாம்.

தடை பற்றிய செய்திகளுக்கு பின்னால் வருவோம்.

முதலில் இந்தக் காணொளி சொல்வது என்ன என்று பார்ப்போம்?

ஜோதி சிங் ஒரு மருத்துவக்கல்லூரி மாணவி. இறுதி ஆண்டு படித்துக்கொண்டிருந்தவர். 2012 டிசம்பர் 16 இரவு 9:30 மணிக்கு தன் தோழனுடன் திரைப்படம் பார்த்துவிட்டு வீடு திரும்புவதற்காக ஒரு பேருந்தில் ஏறுகின்றார். அந்தப் பயணமே அவரின் இறுதிப் பயணமாக இருக்கின்றது. அவர் பயணம் செய்த பேருந்து பயணிகள் செல்லும் பொது பேருந்து கிடையாது. ஆக, அதில் அவர்கள் ஏறியிருக்கவே தேவையில்லை. டெல்லியின் போக்குவரத்து வசதி பற்றி தெரியாததால் அவர் பேருந்தில் ஏறியதைப் பற்றி நாம் ஒன்றும் சொல்ல முடியாது.

ஐந்து பேர் (அதில் ஒருவருக்கு 17 வயது! ஒருவர் திருமணம் ஆனவர்!) சேர்ந்து செய்த ஒரு கற்பழிப்பு. கற்பழித்துவிட்டு (மிகக் கொடூரமாக!) சாலையில் குற்றுயிராய் எறிந்து விட்டுச் செல்கின்றனர். உடனடி சிகி;ச்சை அளிக்கப்பட்டு, மேற்படி சிகிச்சைக்காக சிங்கப்பூர் எடுத்துச் செல்லப்பட்டாலும் ஒரு வாரத்தில் பரிதாபமாக இறந்து விடுகின்றார்.

படத்தின் இயக்குனர் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேர் (இப்போது இருப்பது நால்வர் தாம். ஒருவர் தற்கொலை செய்து விட்டார்!), அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், ஜோதியின் பெற்றோர், தோழன், குற்றவாளிகளுக்காக வாதிடுபவர், இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள் இருவர், காவல்துறை உயர் அதிகாரி, இந்த நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடிவர்களில் இரண்டு பேர் என மொத்தம் 21பேரை நேர்காணல் செய்திருக்கின்றார்.

'மகிழ்ச்சி' என்ற வார்த்தையை ஐந்து முக்கியமான இடங்களில் பயன்படுத்தி, இறுதியாக 'மகிழ்ச்சி சில அடிகளுக்கு அப்பால்' இருந்தாலும் சோகமே மிஞ்சுகிறது எனப் பதிவு செய்திருக்கின்றார். 'ஜோதி' எல்லா இருளையும் அகற்ற வேண்டும் என்ற சிந்தனையோடு காணொளி நிறைவடைகிறது.

மிகவும் சிரத்தை எடுத்து நேர்காணல்கள் செய்தது, கருத்துக் கோர்வை, ஆட்கள் தெரிவு. இடம் தெரிவு, படப்பிடிப்பு. நேர்காணல் மொழிபெயர்ப்பு என எல்லாமே அருமை. இடையிடையே வரும் மனவியல் நிபுணர் மனித மனத்தில் இருக்கும் வன்முறை, சமூகத்தின் மேலுள்ள கோபம் பற்றி சொல்வது முத்தாய்ப்பு.

அப்புறம் எதுக்கு தடை அப்படிங்கிறீங்களா?

குற்றவாளி முகேஷ் சிங்கின் நேர்காணலில் அவர் சொல்லும் சில வாக்கியங்களும், அவரின் வழக்கறிஞர்கள் சொல்லும் வார்த்தைகளும், ப்ரயாஸ் என்ற என்.ஜி.ஓ மேலாளர் சொல்லும் கருத்தும் முகம் சுளிக்க வைக்கிறது. அப்படி என்ன சொன்னார்கள்?

'அவள் (ஜோதி) கொஞ்சம் ஒத்துழைத்து அமைதியாக கற்பழிக்க அனுமதித்திருந்தால் நாங்கள் வன்முறையில் ஈடுபட்டிருக்க மாட்டோம்!'

'ஒரு கை மட்டும் ஓசை எழுப்ப முடியுமா? இரவு ஒன்பது முப்பது மணிக்கு ஒரு பெண்ணுக்கு ரோட்டில் என்ன வேலை? அவளே விரும்பிதான் பேருந்தில் ஏறினாள்!'

'பெண் என்றால் பூ. ஆண் என்றால் முள். முள்ளின் இயல்பு குத்துவதுதான்!'

'இந்தியக் கலாச்சாரத்தில் பெண்ணுக்கு இடமே இல்லை. ஆணைச் சார்ந்தவளே பெண்.'

'பெண்ணை வைரம் என்று சொல்கிறீர்களே. வைரத்தை பூட்டித்தான் வைக்க வேண்டும். ரோட்டில் வைத்தால் நாய்கள் கடிக்கத்தான் செய்யும்.'

'எல்லாரும் கற்பழிக்கிறார்கள். கற்பழிப்பு வழக்கு உள்ள 250 பேர் பாராளுமன்றத்தில் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் விட்டுவிட்டு எதற்காக எங்கள் நால்வரை மட்டும் கைது செய்ய வேண்டும்.'

'இந்தியா ஒரு ஏழை நாடு. 50 சதவிகிதத்திற்கும் மேற்பட்டவர்கள் வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழ்கிறார்கள். காசுள்ளவன் காசு கொடுத்து பெண்ணிடம் போகிறான். காசு இல்லாதவன் தன் வன்முறையால் பெண்ணிடம் போகிறான்!'

இதை வாசிக்கும் போது எந்தவொரு சாமானியனுக்கும் கோபம் வரவே செய்யும். மேலும் இந்த முகேஷ் சிங் மற்றும் அவருக்காக வாதிடும் வக்கீல்களுக்கும் எந்தவொரு குற்றவுணர்ச்சியும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒருவேளை விடுவிக்கப்பட்டால் அவர்கள் தொடர்ந்து கற்பழிப்புகள் நடத்துவார்கள் என்பதும் தெரிகிறது.

எனக்கு இரண்டு ஆச்சர்யங்கள்:

1. இந்தக் காணொளி முழுவதும் நேர்காணல் வழங்கிய ஜோதியின் பெற்றோர் எதற்காக இப்போது பிபிசி நிறுவனத்தின் மேலும், இயக்குநர் மேலும் வழக்கு பதிவு செய்ய வேண்டும்? நேர்காணல் வெளிவரும் என்று கண்டிப்பாக அவர்களுக்குத் தெரிந்திருக்கும். நேர்காணல் எடுத்தவர்களும் சட்டதிட்டப்படி தான் செய்திருப்பார்கள்.

2. குற்றவாளியை எப்படி அவர் பேட்டி கண்டார் என்று திகார் ஜெயில் அதிகாரிகளும், அரசாங்கமும் கொந்தளிக்கின்றது. இந்தக் காணொளியைப் பார்த்தால் இது ஒரு நாள் அல்லது இருநாளில் எடுக்கப்பட்டது அல்ல. ஆக, அடிக்கடி நேர்காணல் செய்திருப்பார்கள். இப்படி ஒரு வெளிநாட்டவர் நம் நாட்டின் முக்கிய சிறைச்சாலையான திகார் சிறைக்குள் எளிதாக நுழைந்துவிட முடியுமா? அப்போது இந்த அதிகாரிகள் எங்கு போனார்கள்?

எனக்கு இரண்டு கோபங்கள்:

1. இந்த ஆவணப்படத்திற்கு எதிர்ப்பு காட்டுபவர்கள் நம்ம ஊர் மீடியாக்காரர்கள். குறிப்பாக நம்ம என்டிடிவி மற்றும் சிஎன்என் க்ரூப். இதற்குக் காரணம் வியாபாரப் போட்டி. இந்தக் காணொளியை வைத்து தங்கள் சேனல் டிஆர்பி ரேட்டிங் ஏறாது எனவும், பிபிசி ரொம்ப ஈஸியா பெயர் சம்பாதிச்சுடும் என்பதும் அவர்கள் ஆதங்கம். ஆக, இந்தப் படத்தைப் பற்றிய பார்வையை மாற்றுகிறார்கள்.

2. இந்தக் காணொளியின் பின்புலத்தில் எனக்கு தோன்றுவது என்னவென்றால் இன்னும் நாம் ஆங்கிலேயர்களின் கையில்தான் இருக்கின்றோமோ என்ற நினைப்புதான். இங்கிலாந்துக்காரர் ஒருவர் நம்ம ஊரின் தீமை பற்றி எப்படி படம் எடுக்கலாம்? 'நல்லது யார் சொன்னாலும் ஏத்துக்கணும்!' அப்படின்னு நீங்க சொல்லலாம். ஆனா, லண்டன் மாநகரத்தில் ஒரு இந்திய ஆண் அல்லது பெண் அனுபவிக்கும் நிறப் பாகுபாட்டை பற்றி நாம் அங்கே போய் நேர்காணல் செய்து படம் எடுத்துவிட முடியுமா? உன்கிட்ட காசும், மீடியாவும், கேமராவும் இருக்கிறது என்பதற்காக நீ என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? ஏன் உன் கேமராவை எடுத்துகிட்டு சிரியாவுக்குப் போய் அங்க ஈசிஸ் என்ன செய்றாங்கணு எடு! அல்லது அமெரிக்கா போய் கறுப்பு-வெள்ளை சண்டைகளை எடு! 'பேச்சுரிமை இல்லை இந்தியாவில்!' அப்படின்னு கொதிக்கிறார் இயக்குநர். ஏம்மா! பேச்சுரிமை இல்லாமதான் நீங்க இவ்ளோ பேரை இண்டர்வியு பண்ணுனீங்களா? எனக்குத் தெரிந்த ஒரு அருட்பணியாளரைப் பற்றிச் சொல்லும்போது, 'அவர் ஏழைகளை வைத்து பணக்காரர் ஆனவர்!' என்று சொல்வார்கள். இந்த இயக்குநர் செய்ததும் அப்படித்தான். தான் நேர்காணலில் சந்தித்த எல்லா நிர்கதியற்றவர்களையும் வைத்து அவர் ஃபேமஸாகிக் கொண்டார்.

சரி! ரொம்ப கோபப்பட வேண்டாம்!

என் தனிப்பட்ட அனுபவமாக நான் சொல்வது இதுதான். இந்த ஆணவப் படம்! அல்லது ஆவணப் படம் ஒரு ஆத்ம சோதனையாக எனக்கு இருந்தது. எனக்கு உடல் கொடுத்த என் தாய், என் உடன்பிறந்த என் சகோதரி, சகோதரியின் மகள் என என் வீட்டில் உள்ள பெண்களையோ, என் நட்பு வட்டம், பணி வட்டம் என நான் பழகுகின்ற பெண்களையோ, வழியில், பயணத்தில் போகிற போக்கில் பார்க்கும் பெண்களையோ பார்க்கும் போது என் உள்ளத்தில் நிகழும் மாற்றம் என்ன? அவர்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்ன? வன்முறை என்பது செயலில் மட்டும் அல்ல, சொல்லிலும், சிந்தனையிலும் கூட இருக்கலாம். ஆக, எந்த நிலையிலும் வன்முறை இல்லாமல் நடந்து கொள்ள வேண்டும் எனவும், ஒவ்வொருவருக்குள்ள எல்லையை மதிக்க வேண்டும் என்றும் நான் அறிந்தோ, அறியாமலோ மேற்கொண்ட வன்முறைகளுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் எனக்கு உணர்த்தியது இந்தக் காணொளி.

நாளைய நற்செய்தி வாசகத்தில், இயேசு எருசலேம் ஆலயத்தைத் தூய்மையாக்கும் நிகழ்வை வாசிக்கிறோம். 'தன் உடலையே கோவில்' என்று சொல்கிறார் இயேசு. மனித உடல் - ஆணோ, பெண்ணோ - ஒரு கோவில். கோவிலுக்குரிய மதிப்பையும், மாண்பையும் கொடுப்பது நம் கடமை.

பெண்கள் தின வாழ்த்துகள்! பெண்மை போற்றுதும்! பெண்மை போற்றுதும்!

'இந்தியாவின் மகள்' ஆவணப் படத்தைப் பார்க்க இங்கே சொடுக்கவும்:

India's Daughter


2 comments:

  1. காணொளி கண்டேன்.மூன்று வருடங்களாக நிலுவையில் உள்ள ஒரு ஒரு விஷயம் இன்று பக்கத்து வீட்டுக்காரனின் படையெடுப்பால் பூதாகாரமாகி வெடித்துள்ளாது.எல்லோருமே அடுத்தவன் வயித்துவலியில் குளிர்காய்பவர்கள் தாம்.குற்றவாளிகளும்,அவர் சம்பந்தப்பட்டவர்களின் பேச்சைக்கேட்கையில் நாமே அவர்களைச் சுட்டுத்தள்ளலாமா என்ற வெறி வருகிறது. இதையும் தாண்டி இவ்விஷயத்திலிருந்து நாம் கற்றுக்கொள்வது என்ன எனக்கூறும் தந்தையின் வார்த்தைகள்...." நம் உடலாகிய ஆலயத்தின் பரிசுத்தத்தைப் பேணுவோம்....அதன் மாண்பைக் காப்போம்".இது ஒரு விவாத்த்துக்குட்பட்ட,கலந்துரையாட வேண்டிய விஷயம் என்பது என் கருத்து....

    ReplyDelete
  2. Anonymous3/08/2015

    Yesu hail our mothers hail oursisters and the loved ones. Happy Women's Day

    ReplyDelete