Wednesday, March 4, 2015

யார்தான் புரிந்துகொள்வர்?

'இதயமே அனைத்திலும் வஞ்சகம் மிக்கது.
அதனை நலமாக்க முடியாது.
அதனை யார்தான் புரிந்துகொள்வர்?'
(எரேமியா 17:9)

போகிற போக்கில் ஒரு பெரிய தத்துவத்தைச் சொல்லிவிட்டுச் செல்கிறார் எரேமியா.

ஆண்டவரில் கொள்ளும் நம்பிக்கையைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் எரேமியா திடீரென்று இதயத்தைப் பற்றிப் பேசுவதன் அர்த்தம் என்ன?

'யார்தான் புரிந்து கொள்வர்?' என்ற கேள்விக்கு 'ஆண்டவரே இதயச் சிந்தனைகளை ஆய்பவர்' என்று அடுத்த வசனத்தில் பதில் இருக்கிறது.

எரேமியாவின் மேற்காணும் வசனத்தில், ஒரு பாஸிட்டிவ் ஸ்டேன்ட்மென்ட், ஒரு நெகடிவ் ஸ்டேட்மென்ட் மற்றும் ஒரு கேள்வி என மூன்று வாக்கியங்கள் உள்ளன்.

முதல் ஏற்பாட்டு நூலின் உடலியல் சார்ந்த கருத்தியல் நம் கருத்தியலை விட மாறுபட்டது. முதல் ஏற்பாட்டில் மனிதர்களுக்கு உடல், ஆவி மற்றும் மனம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. உடல் தான் நாம் தொட்டு உணரக்கூடிய 'மேட்டர்'. 'ஆவி' என்பது உடலினுள் இருந்து கொண்ட அதை இயக்குவது. இதை 'உயிர்' என்றும் சொல்வர். இந்த உயிர் தொண்டையில் இருப்பதாக நம்பினர். ஆகையால் தான் ஒருவர் இறந்தவுடன் அவர் வாய்திறந்து கிடக்கிறார். தொண்டையில் இருக்கும் ஆவி வெளியேறுவதே இறப்பு. 'மனம்' என்பது மனிதர்களின் அனைத்துச் சிந்தனைகளையும் அடையாளப்படுத்துவது. மனம் என்பதற்குப் பயன்படுத்தபடும் வார்த்தைதான் இதயம். இவர்களுக்கு மூளை செய்யும் வேலையையும், இதயம் செய்யும் வேலையையும் இணைத்தே பார்த்தனர். மூளைதான் சிந்தனைகளின் செயலி என்ற புரிதல் இவர்களுக்கு இல்லை.

ஆக, எரேமியா இதயம் என்று சொல்வது மூளையையும், சிந்தனைiயுமே குறிக்கிறது.

ஒரு நிமிடம் அமைதியாகக் கண்களை மூடி அமர்ந்து பாருங்களேன். ஓராயிரம் சிந்தனைகள் வந்து போகும். சிந்திக்காமல் நாம் இருக்கவே முடியாது. நம் மனத்தில் எப்போதும் சிந்தனைகள் ஓடிக்கொண்டே இருக்கின்றன. நாம் தூங்கும் போதுகூட நம் மூளை விழிப்பாகவே இருக்கிறது. இப்படி மாறி மாறி இருக்கும் நம் சிந்தனையால் பிரச்சினைகளுக்கு முடிவெடுக்க முடிவதில்லை. அல்லது சரியான முடிவுகளை எடுக்க முடிவதில்லை. அன்பு உருவாவதும் சிந்தனையில் தான். வஞ்சகம் உருவாவதும் சிந்தனையில் தான். ஆகவே தான் இதை நலமாக்கவே முடியாது என்றும் வருந்துகிறார் எரேமியா.

'நாம் இருப்பது நம் சிந்தனையின் விளைவு, சிந்தனைதான் எல்லாம், நாம் எதைச் சிந்திக்கிறோமோ அதாகவே மாறுகிறோம்' என்றும் சொல்கிறார் கௌதமபுத்தர்.

மனதின் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தினால், வாழ்வின் ஓட்டம் கட்டுக்குள் வரும்!


1 comment:

  1. பொதுவாக நம் மக்களுக்கு இதயத்தைப்பற்றித் தெரிந்த அளவுக்கு மூளையைப்பற்றித் தெரியுமா என்பது சந்தேகமே! நம் கட்டுக்குள் கொண்டுவர முடியாத ஒன்று நம் சிந்தனைத்திறன்.அதன் வேகம் மணிக்கு என்ன என்பதைக்கூட நம்மால் கணக்கிட முடியாது.நெல்லில் இருந்து தினையோ இல்லை மாவிலிருந்து புளியோ வருவதில்லை.நம் சிந்தனைதான் நம் செயலாக்கம் என்றால் நல்லவைகளையே சிந்திப்போம்; செயலாக்குவோம். போகிற போக்கில் தந்தை தூவியுள்ள விதைகள் நல்ல நிலத்தில் விழுந்து அதன் பயனைத்தரட்டும்....

    ReplyDelete