Thursday, March 19, 2015

யோசேப்பு நேர்மையாளர்

'அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர்.
அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத்திட்டமிட்டார்'
(மத்தேயு 1:19)

யோசேப்பைப் பற்றி மத்தேயு நற்செய்தியாளர் எழுதும் முதல் குணநலன் என்ன தெரியுமா?

'யோசேப்பு நேர்மையாளர்' என்பதுதான்.

'நேர்மையாளர்' என்று பொருள்படும் 'டிக்காயோஸ்' (dikaios) என்ற கிரேக்கச்சொல் புதிய ஏற்பாட்டில் 79 முறை பயன்படுத்தப்படுகிறது. புதிய ஏற்பாட்டின் முதல் பயன்பாடே மத்தேயு 1:19ல் தான் வருகிறது. அதுவும் முதல் பயன்பாடே யோசேப்பைப் பற்றியதாக இருக்கிறது. மேலும் இந்த 79 இடங்களில் 69 இடங்களில் இது கடவுளின் குணநலனைக் குறிக்கும் வார்த்தையாகவும், 10 இடங்களில் மனிதர்களின் நற்சான்றைக் குறிக்கும் சொல்லாகவும் இருக்கிறது.
பழைய ஏற்பாட்டில் யாவே இறைவனைக் குறிக்கும் சொல்லும் இதுதான். ஆனால் எபிரேயத்தில் 'சேதேக்' (tsedek) மற்றும் 'யசார்' (yasar) என்ற இரண்டு வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன.

'டிகாயோஸ்' என்றால் என்ன? அது யோசேப்பைப் பற்றி என்ன சொல்கிறது?

'டிகாயோஸ்' என்பதை பழைய மொழிபெயர்ப்பில் 'நீதிமான்' என்றும், புதிய மொழிபெயர்ப்பில் 'நேர்மையாளர்' எனவும் வாசிக்கின்றோம்.

'டிகாயோஸ்' என்ற வார்த்தையின் உறைவிடம் 'யசார்' என்ற எபிரேயச்சொல்தான். 'யசார்' என்பது நைல் நதிக்கரையில் வளரும் ஒருவகை கோரைப்புல். இந்தப் புல் அல்லது நாணல் நேராக இருக்கும். இந்த நாணல்தான் பழங்காலத்தில் அளக்கும் அளவுகோலாக, கோடுகளை வரையும் கருவியாக பயன்படுத்தப்பட்டது. ஆக, 'நேராக' இருப்பதுதான் 'டிகாயோஸ்'. மேலும், 'யசார்' எந்த நேரத்திலும் மாறாதது. ஒரு அடி அளவு என்றால் அது இன்றும் ஒரு அடி என்று காட்டும், பத்து ஆண்டுகளுக்குப் பின்பும் ஒரு அடி என்றுதான் காட்டும். நாம் பயன்படுத்தும் அளவுகோல்கள் மாறிக்கொண்டே இருந்தால் நாம் குழம்பிவிட மாட்டோமா?

'யசார்' என்ற இந்த நாணலின் இயல்பு மனிதர்களின் இரண்டு குணநலன்களை அடையாளப்படுத்துகிறது:

அ. மனிதர்கள் 'நேராக' இருக்க வேண்டும். உடல் அளவில் 90 டிகிரியில் இருப்பதல்ல! (ஆனால், மருத்துவ ஆய்வுகளின் படி நாம் 90 டிகிரி நேராக நின்றால் அல்லது 180 டிகிரி நேராகப் படுத்தால் மட்டுமே முழுமையாக வேலைசெய்வதாகச் சொல்கிறார்கள்). நம் சிந்தனை, எண்ணம், மதிப்பீடு நேராக இருக்க வேண்டும்.

ஆ. நாம் ஒரே அளவுகோலைப் பயன்படுத்த வேண்டும். பிடித்தவர்களுக்கு ஒரு மாதிரி, பிடிக்காதவர்களுக்கு வேறு மாதிரி, இன்றைக்கு ஒரு மாதிரி, நாளைக்கு வேறு மாதிரி, பகலில் ஒரு மாதிரி, இரவில் வேறு மாதிரி, வெளிச்சத்தில் ஒரு மாதிரி, இருட்டில் வேறு மாதிரி, மற்றவர்கள் பார்த்தால் ஒரு மாதிரி, பார்க்காவிட்டால் வேறு மாதிரி என இருப்பதும், வேறுபட்ட அளவைகளைக் கொண்டு நாம் மற்றவர்களை அளக்க முயல்வதும் இதற்கு எதிரானது.

இந்த இரண்டு இயல்பும் கடவுளுக்கு மட்டுமே பொருந்தும். அவர் தான் என்றும் மாறாதவர். அவர் தான் அனைவரையும் ஒரே அளவுகோலைக் கொண்டு பார்ப்பவர்.

இந்த இரண்டு குணநலன்களையும் யோசேப்புக்குப் பொருத்திப் பார்க்கிறார் மத்தேயு நற்செய்தியாளர்.

யோசேப்புக்கு எந்தச் சூழலில் பொருத்துகிறார்?

'மரியாள் கருவுற்றிருப்பது யோசேப்புக்குத் தெரிந்து விடுகிறது. தான் கூடி வாழவில்லை என்பதும் தெரியும். மரியாள் நல்லவர் என்பதும் தெரியும். திருச்சட்டம் இந்த மாதிரி பெண்களை கல்லால் எறிந்து கொல்லச் சொல்கிறது என்றும் அவருக்குத் தெரியும். ஆனால், அவரின் 'நீதிமான்' தன்மையைக் குறிக்கும் சொல் 'மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல்!' என்பதுதான்.

ஆக, நீதிமான்களும், நேர்மையாளர்களும் 'நேராக' இருப்பவர்களும், ஒரே அளவுகோல் பயன்படுத்தபவர்களும் மட்டுமல்ல. மாறாக, அவர்கள் அடுத்தவர்களை இகழ்ச்சிக்கு உள்ளாக்குவதில்லை.

இது இன்று நமக்கு மிகவும் தேவையான ஒன்று. இன்று நம் எல்லாரிடமும் இருக்கும் மனப்பக்குவம் என்னவென்றால், 'அடுத்தவர்களைக் கெட்டவர்கள் என்று சொல்வதன் வழியாக நம்மையே நல்லவனாக்கிக் கொள்வதுதான்!'

கடந்த வாரத்தில் வாட்ஸ்ஆப்பில் ஒரு உதவி காவல் ஆணையாளரும், ஒரு கான்ஸ்டபிள் பெண் போலீசும் பேசிக்கொள்வதாகப் பதிவு செய்யப்பட்ட உரையாடல் ஒன்று பரவி, இணையதளம், ஜூவி, செய்தித்தாள்கள் என எல்லா தளங்களிலும் வந்துவிட்டன. இதை இவ்வளவு வேகமாகப் பரவலாக்கம் செய்யுமுன், நம்மவர்கள் ஏன் அதைப் பற்றி யோசிப்பதில்லை? 'அது உண்மையா! பொய்யா?' என்ற கவலை நமக்கில்லை. 'ஏன், அதை யோசிக்க நேரமுமில்லை!' 'எல்லாரும் செய்றாங்க! நானும் செய்றேன்!' என்ற மனநிலைதான். அந்தக் காவல் ஆணையாளர் செய்ததை நான் நியாயப்படுத்தவில்லை. நமக்குத் தேவையெல்லாம் கொஞ்சம் காருண்யம் அவ்வளவுதான்.

அதைத்தான் யோசேப்பு செய்தார். காருண்யம் யாரையும் இகழ்வாகப் பார்ப்பதில்லை. இந்தக் காருண்யம் தான் அவரை நீதிமான் நிலைக்கு உயர்த்துகிறது.

நான் படிக்கும் படிப்போ, சம்பாதிக்கும் பொருளோ, வகிக்கின்ற பொறுப்போ என்னை நீதிமான் ஆக்குவதில்லை.

'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்!' என்று வள்ளலார் அளவுக்குக் காருண்யம் இல்லாவிட்டாலும்,

யாரையும் இகழ்ச்சிக்கு உள்ளாக்காத நல்ல உள்ளமும், செயலும் எனக்கு வேண்டும் என்பதே என் மன்றாட்டு.


1 comment:

  1. யோசேப்பு தனிப்பட்ட வாழ்க்கையிலும் நல்லவரே என்றாலும் அவரை ஒரு 'நேர்மையாளர்', 'நீதிமான்' நிலைக்கு உயர்த்துவது அவர் மரியாவின் கணவனாக நடந்து கொண்ட முறையை வைத்துதான்.மனத்தில் 'காருண்யம்' சுரக்கும் உள்ளம் கொண்ட எவருமே அடுத்தவரை இகழ்ச்சிக்கு உள்ளாக்குவதில்லை என்றால் அப்பேற்பட்ட உள்ளத்தை நாமும் வளர்த்துக் கொள்வதில் ஏன் தயக்கம் காட்ட வேண்டும்? இன்றையப் பதிவைப் படிக்கும் போதே என் இதயத்தில் 'ஈரம்' கசிவதை என்னால் உணர முடிந்தது. மனதை இளக வைக்கும் பதிவு...பாராட்டுக்கள்!

    ReplyDelete