Tuesday, November 4, 2014

வற்புறுத்திக் கூட்டி வாரும்!

தலைவர் தம் பணியாளரை நோக்கி, 'நீர் வழியோரங்களிலும் நடைபாதைகளிலும் போய், எனது வீடு நிரம்பும் அளவுக்கு மக்களை வற்புறுத்திக் கூட்டி வாரும். அழைக்கப் பெற்றவர்களுள் எவரும் என்னுடைய விருந்தைச் சுவைக்கப் போவதில்லை என உமக்குக் சொல்கிறேன்' என்றார். (லூக்கா 14:24)

மத்தேயு நற்செய்தியாளர் இதே உவமையைக் குறிப்பிடும் போது 'திருமண ஆடை' என்ற குறிப்போடு முடிக்கிறார். ஆனால் லூக்கா நற்செய்தியாளர் அவர் சொல்லாத இரண்டு விடயங்களைக் குறிப்பிடுகின்றார்:

அ. தெருவில் மற்றும் வழியோராங்களில் இருப்போர் வற்புறுத்தலின் பேரில் வருகின்றனர்.

ஆ. அவர்கள் திருமண விருந்தை சுவைக்க மாட்டார்கள்.

'வற்புறுத்தல்' - இன்று அதிகமாக பேசப்படும் ஒரு வார்த்தை.

வற்புறுத்தல் இன்று பல உருவங்களில் நம்மைச் சுற்றி இருக்கின்றது. 'நீ இதைத் தான் செய்ய வேண்டும்!' அல்லது 'நீ இப்படித் தான் இருக்க வேண்டும்!' என்று நாம் மற்றவர்களையும் சொல்கிறோம். மற்றவர்கள் நம்மிடமும் சொல்கிறார்கள்.

'நீ என் உடல் ஆசைக்கு இணங்கு!' எனச் சொல்வது பாலியல் வற்புறுத்தல்.

'நீ இந்தக் கடவுளைக் கும்பிடு. இந்த பூசையைச் செய். அல்லது மோட்சம் கிடைக்காது!' எனச் சொல்வது ஆன்மீக வற்புறுத்தல்.

'நீ இந்தத் தவறைச் செய்ததால் வாழவே தகுதியில்லை!' என இன்னும் தூக்குத் தண்டனைகள் புழக்கத்தில் இருப்பது மனிதநேயமற்ற வற்புறுத்தல்.

கடவுளின் அழைப்பில் வற்புறுத்தல் இருப்பதில்லை. நாம் அதைப்பிறழ்வு படுத்தும் போதுதான் வற்புறுத்தல் வந்துவிடுகிறது.

நாம் படைக்கப்பட்டபோது கடவுள் நம்மைப் பார்த்து, 'நீ இவ்வளவு படிக்க வேண்டும்! இந்த வேலைக்குச் செல்ல வேண்டும்! இவ்வளவு பணம் சேமிக்க வேண்டும்! இன்னின்ன ஊர்களுக்குச் செல்ல வேண்டும்!' என்று சொல்லவில்லை. இவைகளெல்லாம் மற்றவர்களைப் பார்த்து நமக்கு நாமே விதித்துக் கொண்ட வற்புறுத்தல்கள். இந்த வற்புறுத்தல்கள் நம் வாழ்க்கையை நாம் சுவைக்க விடாமல் செய்துவிடுகின்றன.

இன்று ஒருநாளாவது நமக்கு நாமே விதித்துக் கொண்ட வற்புறுத்தல்களைக் குறைத்துக் கொண்டு இருக்கப் பழகலாமே!


1 comment:

  1. 'Priority' என்பது இப்பொழுது நம் செவிகளில் அடிக்கடி வந்துவிழும் வார்த்தை.இந்த நிமிடம் நான் என்ன செய்ய வேண்டும்(need of the hour) என்பதற்கும், எனக்கு என்ன செய்யப்பிடித்திருக்கிறது(priority) என்பதற்கும் நடக்கும் ஒரு யுத்தத்தின் விளைவாகப் பிறப்பதுதான் இந்த 'வற்புறுத்தல்'( compulsion). தலைதெறிக்கும் வேகத்தில் ஒருவர் தன் வாகனத்தை ஓட்டிவரும்போது சிக்னலில் ஒரு சிகப்பு விளக்கு 'நிறுத்து' என்று சொல்வது கூட ஒரு வற்புறுத்தல்தான்.ஆனால் அங்கே அது இல்லாவிட்டால் என்ன ஆகும்? யோசித்துப்பார்க்க முடிகிறதா நம்மால்? ஆகவே இந்த வற்புறுத்தலும் கூட பல சமயங்களில் ஒரு' necessary evil' தான்.என்ன Father! என்மேல் கோபம் வருகிறதா? இளரத்தம்...அப்படித்தான் இருக்கும்...

    ReplyDelete