Thursday, November 13, 2014

அவரோ ஒரு சமாரியர்!

அவரோ ஒரு சமாரியர். இயேசு அவரைப் பார்த்து, 'பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!' என்றார். (காண்க. லூக்கா 17:11-19)

இந்த நற்செய்திப் பகுதி லூக்கா நற்செய்தியில் மட்டுமே உள்ளது. லூக்கா நற்செய்தி புறவினத்தாரின் நற்செய்தி, பெண்களின் நற்செய்தி என்று அழைக்கப்படக் காரணம் அவர் அவர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவமே.

இந்த நற்செய்திப்பகுதி பத்துத் தொழுநோயாளர்களை மையமாக வைத்துத் தொடங்கினாலும் கிளைமாக்ஸில் வருவது அல்லது முதன்மைப்படுத்தப்படுவது ஒரு சமாரியனே.

ஏன் அவர் மட்டும் திரும்பி வந்தார்? அல்லது வேறு வார்த்தையில் கேட்டால், ஏன் அவர் மட்டும் குருக்களிடம் காட்டச் செல்லவில்லை?

மற்ற ஒன்பது பேரும் இயேசுவிடமிருந்து புறப்பட்டு நேராக குருக்களிடம் செல்கின்றனர். ஆனால் சமாரியர் மட்டும் பாதியிலேயே திரும்பி இயேசுவிடம் வருகின்றார்.

அ. சமாரியர் தன் அடையாளத்தைத் தனக்குள் தேடினார்.
தொழுநோய் பெற்றவர்கள் குருக்களிடம் காட்ட வேண்டும் என்பது லேவியர் நூல் 14:1-32ல் சொல்லப்பட்டுள்ள மோசேயின் சட்டம். இஸ்ரயேல் மக்களிடையே வாழும் சமாரியருக்கும் இது பொருந்தும். ஆக, பத்து பேரும் அனுப்பப்படுகின்றனர். ஆனால் போகும் வழியிலேயே குணம் பெற்று விடுகின்றனர். நலம் அவர்களுக்கு இயேசுவால் தான் வருகிறதே ஒழிய குருக்களால் அல்ல. மற்ற ஒன்பது பேருக்கும் தாங்கள் நலம் பெற்றதில் ஒருவேளை நம்பிக்கை இல்லாமல் இருந்திருக்கலாம். குருக்கள் மட்டுமே தங்களைக் குணப்படுத்த முடியும் என்று நினைத்திருக்கலாம். இந்த ஒன்பது பேரும் தங்கள் அடையாளத்தை தங்களுக்கு வெளியில் தேடுகின்றனர்.

நம்ம வாழ்க்கையிலயும் நம்ம சந்தோஷத்தைப் பல நேரங்களில் நிர்ணயிப்பது நமக்கு வெளியில் இருப்பவர்கள் தான். இது ஒரு தவறான அணுகுமுறை. 'நீ போட்டுருக்கிற சட்டை நல்லா இருக்கு!' னு மத்தவங்க சொன்னா சந்தோஷப்படுறோம். நாம் என்னதான் ஃப்ரஷ்ஸா இருந்தாலும் 'என்னப்பா டல்லா இருக்குற!' என்ற மற்றவர்கள் சொன்னவுடன் நாம் வாடிவிடுகிறோம். நாம் எப்படி இருக்கிறோம் அல்லது எப்படி இருக்க வேண்டும் என்று நிர்ணயிப்பது நாமாக மட்டுமே இருக்க வேண்டும். இதைத்தான் அந்த சமாரியர் செய்கின்றார். 'நீ என்னடா என்னை நல்லாயிட்டேன்னு சொல்றது! நான் தொழுநோய் பிடிச்சு கிடந்தப்ப நீ எங்கடா போன? நான் சரியானா உன்கிட்ட வரனுமோ! எனக்குத் தெரியும் எங்கே போகணும்னு என்று முடிவெடுத்து இயேசுவிடம் செல்கின்றார்.

ஆ. இரட்டிப்பு துன்பம்
தொழுநோய் பிடித்தவர்களை யூதர்கள் தள்ளி வைத்துவிடுவார்கள். ஆக, தொழுநோய் பிடித்திருக்கிறது என்ற காரணத்தில் முதலில் ஒதுக்கப்படுகிறார் இந்தச் சமாரியர். அப்படி ஒதுக்கி வைக்கப்பட்டாலும் அங்கே மற்ற தொழுநோய் பிடித்தவர்களோடு இருக்க முடியாது. ஏனெனில் இவர் சமாரியர். மற்றவர்கள் யூதர்கள். அதெப்படி கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு இனத்தோடு மற்ற இனத்தார்கள் ஒன்று சேர முடியும்? ஆக, கண்டிப்பாக இந்தச் சமாரியர் இரட்டிப்பு துன்பங்களை அனுபவித்திருக்க வேண்டும். ஆகையால் தான், குணம் பெற்ற பின்பும் தன் உடன் இருந்தவர்களிடமிருந்து தனித்து நிற்கிறார். பல நேரங்களில் துன்பங்கள் நமக்கு மனவுறுதியையே தருகின்றன. 'என்னால் தனித்து நிற்க முடியும்!' என துணிகின்றான் பாருங்கள். 'அவங்ககூட போகலன்னா அவங்க என்ன நினைப்பாங்க! அவங்க பெரியவங்க' என்று நினைக்காமல், 'போங்கடா நொன்னைகளா!' என்று தன் வழி செல்கின்றார். நாம் அனுபவிக்கும் துன்பம், வலி, தனிமை போன்றவற்றை நம் மனதைப் பக்குவப்படுத்திக் கொள்ளும் வினையூக்கிகளாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்கு இந்தச் சமாரியர் ஒரு நல்ல உதாரணம்.

இ. நம்பிக்கை.
'உமது நம்பிக்கை உமக்கு நலம் தந்தது' என்கிறார் இயேசு. மற்றவர்கள் திருச்சட்டத்தை நம்பினார்கள். ஆனால் சமாரியர் மட்டுமே இயேசுவை நம்புகிறார். அந்நியர்களுக்கு இயல்பாகவே கடவுள் நம்பிக்கை வரும். உதாரணத்திற்கு, நீங்கள் உங்களின் மொழி பேசாத, உங்களின் உணவை உண்ணாத, உங்களைப் பற்றி யாருமே தெரியாத, உங்கள் உடை உடுத்தாத ஒரு ஊருக்கோ, நாட்டிற்கோ போகிறீர்கள் என வைத்துக் கொள்வோம். போகும் போது நினைப்பீர்கள். நம்ம ஊரு மாதிரியே அந்த ஊரும் இருக்கும். நம்ம ஊர்க்காருங்க மாதிரியே அவங்களும் இருப்பாங்கன்னு! ஆனா, உங்களுக்கு பெரிய அதிர்ச்சியாக இருக்கும். உங்களை ஒரு பொருளாக மட்டுமே நினைப்பார்கள். நீங்க உங்க ஊருல பெரிய டானாக இருந்தாலும், இங்க நீங்க இருக்குறதுக்கு ஒரு கார்டு வாங்கணும். அதைத் தூக்கிக்கிட்டே திரியணும். உங்க பெர்மிட் நம்பர் தான் உங்க அடையாளம். உங்களின் கைரேகைகள் பதிவு செய்யப்படும். நீங்க ஏதாவது நோயைக் கொண்டு வந்திருக்கீங்களான்ன தரோவா செக் பண்ணுவாங்க. நீங்க அவங்க மொழியை அவங்கள மாதிரியே பேச முடியுமான்னு டெஸ்ட் வைப்பாங்க. இவ்வளவு நடக்கும் போது நீங்க யார்கிட்ட பேசுவீங்க? உங்க கூடவே நீங்க எவ்வளவு நேரம் தான் பேசுவீங்க. அல்லது உங்க ஊர்ல உள்ளவங்ககிட்ட பேசுவீங்களா? நீங்க பேசணும்னு நினைக்கிற நேரம் அவங்களுக்கு நைட் ஆயிடுமே! ஸோ! நேச்சுரலி நீங்க உங்க கண்களை மேல தான் உயர்த்துவீங்க. அப்படித்தான் நடக்கிறது இந்தச் சமாரியருக்கும்.

இன்னைக்குக் கடவுளிடம் போறது எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு அவரிடம் திரும்பப் போவதும் முக்கியமே. அதற்கு நல்ல எடுத்துக்காட்டு இந்த அந்நியர்!


1 comment:

  1. 'நன்றி' என்ற சொல் மனிதர்களால் மட்டுமே பரிமாறப்படும் ஒரு வார்த்தை. பல சமயங்களில் மறக்கப்படும் வார்த்தையும் கூட.தன் இனம் செய்யத்தவறிய ஒரு நற்செயலை பரிசேயனிடம் கண்டு மகிழ்கிறார் இயேசு.நமது மனதுக்கு மிக நெருக்கமானவர்கள் நம்மை அந்நியப்படுத்துவதை நாமும் கூட அனுபவித்திருக்கலாம்.கண்களை மேலே உயர்த்துவதன்றி வேறு வழியில்லை.இதே காரணத்திற்காகத்தான் தாங்கள் சென்றிருக்கும் அந்நியமண்ணிலும் தாங்கள் 'தனிமைத்துயரை' அனுபவிக்கிறீர்கள் போலும்.கண்களை மேலே உயர்த்துங்கள் தந்தையே! நிலைமைத் தலைகீழாக மாறும்.....

    ReplyDelete