Friday, November 14, 2014

அப்படியா?

நாளை நம் தாய்த்திருநாட்டில் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுகிறோம்.

தன் பிறந்த நாளை குழந்தைகள் நாளாகக் கொண்டாட அழைப்பு விடுத்தார் 'சாச்சா நேரு' (நேரு மாமா). இது இன்று எத்தனை குழந்தைகளுக்குத் தெரியும் என்பதே தெரியவில்லை.

நேரு மாமா இதைப் பள்ளிக் குழந்தைகளின் தினமாக அறிவித்தாரோ என நினைக்கத் தோன்றுகிறது. ஏன்னா இப்பெல்லாம் பள்ளிக்கூடங்களில் மட்டும் தான் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுகிறார்கள்.

என் பள்ளி வயது குழந்தைகள் தினத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்: ஆரம்பப் பள்ளி, மேனிலைப் பள்ளி. ஆரம்பப் பள்ளியில் குழந்தைகள் தினம் என்றால் ரோஜாப் பூவும், ஆரஞ்சு மிட்டாயும் கொடுப்பார்கள். மேனிலைப் பள்ளியில் குழந்தைகள் தினம் என்றால் அன்றுதான் நாங்கள் கலர் சட்டை அணிய முடியும்.

ஆனால் இன்று பள்ளிகளில் குழந்தைகள் தினக் கொண்டாட்டங்களும் மாறிவிட்டன. ஆசிரியர் தினத்தன்று மாணவர்கள் ஆசிரியர்களை என்டர்டயின் செய்கிறார்கள். குழந்தைகள் தினத்தன்று ஆசிரியர்கள் மாணவர்களை என்டர்டயின் செய்கிறார்கள். வெறும் நாடகம், நடனம் இருந்த ஆசிரியர்கள் இப்போது குழந்தைகள் தினத்தன்று ஃபேஷன் ஷோ, மானாட மயிலாட எனக் கிளம்பி விட்டார்கள். ஒவ்வொரு ஆசிரியருக்குள் இருக்கின்ற குழந்தை வெளிவரவாவது இந்தக் குழந்தைகள் தினம் காரணமாக இருக்கிறதே. இப்போதெல்லாம் குழந்தைகள் தினம் அன்று மாணவர்களுக்கு வீட்டுப் பாடம் கிடையாது. மாணவர்கள் பாடப்புத்தகங்களைச் சுமக்கத் தேவையில்லை.

குழந்தைகள் தினம் மாறிவிட்டது என்றால் அதற்குக் காரணம் இன்று குழந்தைகளும் மாறிவிட்டார்கள்.

முன்னெல்லாம் பெரியவங்க தங்களுக்கு முன்னால வந்து நின்னா, குழந்தைங்க உடனடியா எழுந்து நிப்பாங்க. ஆனா இன்னைக்கு பெரியவங்களுக்கு மரியாதையா அவங்க தங்கள் காதில் மாட்டியிருக்கும் இயர் ஃபோனை மட்டும் கழற்றிக் கொள்கிறார்கள்.

முன்னெல்லாம் தம்பி உங்க பேரு என்ன? என்று கேட்டால், 'பாபு', 'கோபி' என பதில் வரும். ஆனால் இன்று 'ஏன் கேட்குறிங்க?' என்று எதிர்கேள்வி தான் வருகிறது.

ஆயா வடை சுட்ட கதை சொன்னா அந்தக் காலத்துக் குழந்தைங்க 'உம்' கொட்டி கேட்பாங்க. இப்ப அதே கதைய சொன்ன, 'போங்க அங்கிள்! யாரை ஏமாத்தப் பார்க்குறீங்க!' என்று தான் பதில் வருகிறது.

இன்று குழந்தைகள் தினத்தைக் கொண்டாடுகிறோமோ இல்லையோ, நாம் குழந்தைகளைக் கொண்டாட வேண்டும்.

'தெ சைல்ட் இஸ் த ஃபாதர் ஆஃப் மேன்' என்பார் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த். குழந்தைப் பருவத்தில் ஒருவர் எப்படி இருக்கிறாரோ அப்படித்தான் வயது வந்தபின்னும் இருப்பார் என்பது இதன் அர்த்தம். ஒரு முழு மனிதரைப் பெற்றெடுப்பது ஒரு குழந்தை தான். ஆக குழந்தைப் பருவம் இனிய பருவமாக இருக்க வேண்டும்.

இன்றைய ஸ்மார்ட்ஃபோன்கள் நம்மையும் குழந்தைகளாக மாற்றிவைத்திருக்கின்றது. எப்படி தெரியுமா? தொட்டிலில் தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தையைக் கவனித்திருக்கிறீர்களா? கொஞ்ச நேரம் பார்த்துக்கிட்டே இருங்களேன். ஆச்சர்யமாக இருக்கும். திடீர்னு சிரிக்கும். நெற்றியைச் சுருக்கும். முகத்தைச் சிலிர்க்கும். கையில ஸ்மார்ட்ஃபோன் வச்சிருக்கிறவங்களையும் உத்துப் பாருங்களேன். திடீர்னு சிரிப்பாங்க. வெட்கப்படுவாங்க. நெற்றியைச் சுருக்குவாங்க. முகத்தைச் சிலிர்ப்பாங்க. பெருமூச்சு விடுவாங்க.

குழந்தைகளிடம் நான் அதிகம் ரசிக்கும் ஒரு குணம் 'ஆச்சர்யம்!'

எதையும் ஆச்சர்யமாகப் பார்ப்பார்கள்!

'அப்படியா?' என்று கேட்பார்கள்.

வாழ்வின் ஆச்சர்யங்கள் நம் அன்றாட அலுவல்களில் மறைந்து கொண்டே வருகின்றன.

இன்று நாமும் கொஞ்சம் ஆச்சர்யப்பட்டுப் பழகலாமே!



1 comment:

  1. இன்று பள்ளிகளில் மட்டுமின்றி எல்லா இடங்களிலுமே நாம் கொண்டாடும் விழாக்கள் பற்றிய தகவலும்,அவற்றிற்கு 'பிள்ளையார் சுழி' போட்டவர்கள் பற்றிய புரிதலும் இல்லாமல் போய்விட்டது.காரணம் ...நம்மைப் போன்ற பெரியவர்கள் என்பதை ஒத்துக்கொண்டுதானே ஆக வேண்டும்? இன்று எத்துணை குழந்தைகளுக்கு தாத்தா காந்தியையும்,மாமா நேருவையும்,குழந்தைகளின் வயிற்றுப்பசி போக்கிய கர்ம வீர்ர் காமராஜ் போன்றவர்களையும் தெரியும்?இனியேனும் 'ஸ்மார்ட் ஃ போன்' போன்ற விஷயங்களைத் தாண்டிய பல 'மேலான' விஷயங்கள் இருப்பதை அவர்களுக்குப் புரிய வைப்போம்.இந்தப் பிஞ்சுகளை நாளை நம்மை ஆளப்போகும் வீறு கொண்ட சிங்கங்களாக வளர விடுவோம்.தந்தையே! தாங்கள் கூறியுள்ள 'வாழ்வின் ஆச்சரியங்கள்' ...ரசிக்க வைத்தது.ஆச்சரியப்படுவதென்பது குழந்தைகளுக்கும், குழந்தை மனம் கொண்டவர்களுக்கு மட்டுமே உரித்தான குணம் இல்லையா! நன்றி......

    ReplyDelete