Tuesday, November 18, 2014

எஃப் டிவியும், இலையுதிர்காலமும்!

சின்ன வயசுலயும், செமினரியில் இருக்கும் போதும் வீட்டுல எல்லாரும் தூங்குனதுக்கு அப்புறமும் அல்லது எல்லா புரோகிராமும் கடுப்படிக்கும் போது கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ற சேனலாகவும் இருந்தது எஃப் டிவி (ஃபேஷன் டிவி). ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மாதிரி கேட்வாக் நடக்கும். பசங்க நடந்து வர்ற அன்னைக்கு மட்டும் வேகமா டிவியை ஆஃப் பண்ணிடுவது உண்டு. பசங்க நடந்து வர்றதைப் பார்த்தா நமக்குள்ளே அது என்னமோ ஒரு காம்ப்ளக்ஸ் வந்து விடுகிறது. எஃப் டிவியின் ஒவ்வொரு ஷோவுக்கு முன்னும் 'ஃபால் - விண்ட்டர்' (Fall-Winter), 'ஆட்டம்' (Autumn) என்றெல்லாம் போடுவார்கள். அப்போதெல்லாம் தெரியாத அர்த்தம் இத்தாலியின் முதல் ஆண்டுப் படிப்பின் போதுதான் தெரிந்தது. இலையுதிர்கால நாகரீக உடை, வசந்தகால நாகரீக உடை என்பதைத் தான் அப்படிச் சொல்லியிருக்கிறார்கள்.

ஜூலை-ஆகஸ்ட்-செப்டம்பர் என கோடைகாலத்தில் ஆடைகளைக் குறைத்துக் கொண்டே வந்த மக்கள், அக்டோபர்-நவம்பர்-டிசம்பரில் ஆடையைக் கூட்டிக் கொண்டே வருவார்கள். இந்த நேரத்தில் மரங்களின் உலகில் ஒரு ஆச்சர்யம் நடக்கும். மனிதர்கள் உடைகளைக் கூட்டக் கூட்ட, மரங்கள் தங்கள் இலைகளைக் குறைத்துக் கொண்டே வரும். டிசம்பர் மாதத்தில் முழுமையாக ஆடை அணிந்து குளிரை எதிர்கொள்ள மனித இனம் தயாராகும்போது, முழுமையாக நிர்வாணமாகி குளிரை வரவேற்கின்றன மரங்கள்.

நம்ம நாட்டுல ஒரு சில ஊர்களைத் தவிர மற்ற ஊர்களில் ஆண்டு முழுவதும் மேல் சட்டை இல்லாமல் இருந்து விடலாம். வீட்டிற்கு வெளியிலோ, அல்லது மொட்டை மாடியிலோ ஒரு கட்டிலையோ, பாயையோ விரித்துத் தூங்கிவிடலாம். ஆனால் இங்கு அப்படிச் செய்ய முடிவதில்லை. இத்தாலிக் குளிரையே தாங்க முடியாமல் இருக்கும் போது என் வகுப்புத் தோழன் ஒருவன் சொன்னான். அவங்க ஊரில் மைனஸ் முப்பத்து மூன்று டிகிரி குளிர் இருக்குமாம். 'தம்பி! நீ கொஞ்சம் தள்ளியே உக்காரு!' என்று சொன்னேன்.

புவி வெப்பமயமாதலில் இந்த ஆண்டு ஐரோப்பாவின் காலநிலையும் வெகுவாகவே பாதிக்கப்பட்டுள்ளது. வசந்த காலம் குறுகி கோடை நீண்டது போல, இலையுதிர் காலம் குறுகி குளிர்காலம் நீளும் என்பதும் பலரின் கணிப்பு.

குளிர் - இரவில் மட்டுமல்லாமல் பகலிலும் குளிரின் இதத்தை உணர்ந்து கொண்டே இருக்கலாம். குளிர்கிறது என்று ஸ்வட்டர் போட்டால் உடலின் வெப்பம் அதிகமாகி வாய்ப்புண் வந்துவிடும். வாய்ப்புண் வந்து விட்டது என்று ஸ்வட்டரைக் கழற்றினால் குளிர் வாட்டிவிடுகிறது. தீக்காயம், உடல்காயம் என கஷ்டப்படுவோருக்கு இது போதாத காலம். மூடவும் முடியாது! மூடாமல் விடவும் முடியாது!

கடந்த ஆண்டு குளிரினால் கடலும் இறுகி சில கப்பல்களும் நடுக்கடலில் மாட்டிக் கொண்டன. மீன் பிடிப்பும் இந்த நாட்களில் கிடையாது. சமுத்திரக்கனி 'நீர்ப்பறவைகள்' திரைப்படத்தில் சொல்வது போல 'ஆண்டு முழுவதும் மீன்வளம் இருக்கின்ற ஒரே கடல் நம்ம ஊர்க்கடல்தான்'.

இந்த தட்பவெப்ப சூழலில் மனிதர்களுக்குப் பெரும் சவாலாக இருப்பது பசி - இந்தக் காலத்தில் அதிகமாகப் பசி எடுக்கும். இந்தக் காலத்தில் தான் அதிக உணவுப் பொருள் திருடுபோவதாகவும் இவர்களின் பொருளாதார ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தொடக்கத்திலிருந்து நம்மைத் துரத்தும் ஒரு பகைவன் தான் பசி. இந்தப் பசியினால் தான் ஒரு நாடு மற்றொரு நாட்டின் முன், ஒரு இனம் மற்றொரு இனத்தின் முன்னும் அடிபணிகிறது. இந்தப் பசி தான் ஆண்டான்-அடிமை பேதத்தை உருவாக்குகிறது.

'ஒருநாள் உணவை ஒழி என்றால் ஒழியாய்
இரு நாளுக்கு ஏல் என்றால் ஏலாய் - ஒரு நாளும்
என் நோவு அறியாய் இடும்பை கூர் என் வயிறே!
உன்னோடு வாழ்தல் அரிது' (நல்வழி 20) என பசியின் கோரத்தைப் பாடி முடிக்கிறார் ஒளவையார்.

தோலைத் தாக்கும் குளிர், வயிற்றைத் தாக்கும் பசி என வளர்ந்து மனதைத் தாக்கும் வெறுமையும் ஒட்டிக் கொள்கிறது. மரங்கள் தன் இலைகளை உதிர்த்து வெறுமனே நிற்பது போல மனமும் அடிக்கடி வெறுமையை உடுத்திக் கொள்கிறது.

மனித இனம் உச்சகட்ட துன்பத்தை அடையும் இந்தக் காலத்தில் தான் இயேசுவின் பிறப்பையும் கொண்டாடுகிறோம். மனுக்குலத்தின் குளிர், பசி மற்றும் வெறுமை என அவர் அனைத்திலும் பங்கேற்றார் என்பதைக் காட்டத்தான் இந்த மாதத்தைக் கொண்டாட்டத்திற்குத் தேர்ந்தெடுத்தார்களோ?

இப்போதே தெருக்களில் மின்-நட்சத்திரங்கள் கட்டப்பட்டுவிட்டன. கடைகளில் கிறிஸ்துமஸ் தாத்தா வந்து விட்டார்.

மற்றொரு பக்கம் தெருக்களில் நடுங்கும் மனிதர்கள், பசிக்குக் கையேந்தும் இளைஞர்கள், மனதில் வெறுமையை மட்டும் சுமந்து கொண்டு விடியலுக்காய் காத்திருக்கும் கண்கள் என மக்கள் நடந்து கொண்டே இருக்கிறார்கள்.

காலச்சக்கரம் கடந்து கொண்டே இருக்கிறது.

'இந்த மாதிரி எடத்துக்கெல்லாம் கேர்ள் ஃப்ரண்டோட தான் வரணும்!' என்று கொடைக்கானல் டூர் போன போது சொன்னான் என் நண்பன்.

இன்று என்னமோ அவன் சொன்னதுதான் அடிக்கடி நினைவிற்கு வருகிறது!



1 comment:

  1. அதென்னவோ தெரியவில்லை..இயற்கையின் அழகை இரசிப்பதில் கூட ஓரவஞ்சனை.கடல்கடந்து செல்பவர்களுக்குத்தான் அது சாத்தியமாகிறது.துளிர் இலைகள்,காய்ந்த சருகுகள் என்றுமட்டுமே பழக்கப்பட்ட நமக்கு தந்தையின் வர்ணனைகள் நம் புருவங்களைத் தூக்க வைக்கின்றன."டிசம்பர் மாத்த்தில் முழுமையாக ஆடையணிந்து குளிரை எதிர்கொள்ள மனித இனம் தயாராகும்போது முழுமையாக நிர்வாண்மாகிக் குளிரை வரவேற்கத்தயாராகின்றன மரங்கள்"....அழகான வர்ணனை.மற்றபடி இந்த் கேர்ள் ஃப்ரெண்ட்..என்பவர்கள் எல்லாம் தூரத்துப் பச்சையாகப்பார்க்க வேண்டியவர்களே! நண்பன் சொல்வதை சீரியஸாக எடுத்துக்கொண்டால் தாங்கள் கூறும் " தோலின் குளிர்,வயிற்றின் பசி,மனத்தின் வெறுமை" இவற்றோடு இன்னும் பல விஷயங்களையும் சேர்ந்தே சுமக்க வேண்டும்.நண்பர்களைக் கொஞ்சம் தள்ளியே வையுங்கள்.சரியா?...டிஸம்பர் குழந்தை நம் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும்!...

    ReplyDelete