Monday, July 18, 2022

வெளியே நின்றுகொண்டிருக்கிறார்கள்

இன்றைய (19 ஜூலை 2022) நற்செய்தி (மத்தேயு 12:46-50)

வெளியே நின்றுகொண்டிருக்கிறார்கள்

தன்னுடன் பேசுவதற்கு வந்த தன் தாய் மற்றும் சகோதரர்களைப் பேச விடாமல், இயேசுவே பேசி விடுகின்றார். மக்கள் கூட்டத்தோடு இயேசு பேசிக்கொண்டிருக்கும்போது அங்கு வந்த இயேசுவின் தாய் மற்றும் சகோதரர்களைக் கவனிக்கின்ற ஒருவர் அதை இயேசுவிடம் சொல்கின்றார். இயேசு அவருக்குப் பதிலளிப்பதாக மத்தேயு நற்செய்தியாளர் பதிவு செய்கின்றார்.

இயேசு தன் பதிலை அவரை நோக்கி ஏன் கொடுக்க வேண்டும்?

நான் இந்நிகழ்வை இப்படிப் புரிந்துகொள்கின்றேன்.

இயேசுவின் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்த அந்த நபர் இயேசுவுடன் இறையாட்சி உறவில் இருக்கின்றார். ஆனால், இயேசுவின் தாய் மற்றும் சகோதரர்களைக் கண்டவுடன் தன்னை அறியாமலேயே ஏதோ ஒரு வகையில் அந்நியப்படுத்தப்பட்டதாக உணர்ந்திருப்பார். அதாவது, தான் இயேசுவுடன் இறையாட்சி உறவில் இருந்தாலும், அவருடைய வார்த்தைகளைக் கேட்டுக்கொண்டிருந்தாலும், இன்னும் நெருக்கமான இரத்த உறவு இருக்கிறது என்று உணர்ந்த அந்த நொடி தன் நிலை தாழ்ந்தது என உணர்கின்றார்.

ஆனால், இயேசு, இறைத் திருவுளம் நிறைவேற்றுபவரே என் தாயும் சகோதரர்களும் என்று சொல்வதன் வழியாக, ஒரு பக்கம் மரியா இறைத் திருவுளம் நிறைவேற்றியதை - இரத்த உறவையும் தாண்டிய ஒன்றை - மக்களுக்கு உணர்த்துகின்றார். இன்னொரு பக்கம், இரத்த உறவை விட இறையாட்சி உறவு மேலானது என உணர்த்துகின்றார்.

இரத்த உறவு பல நேரங்களில் நம்மை மற்றவர்களிடமிருந்து பிரிக்கிறது. நம் சாதிய மற்றும் குழு அடையாளங்கள் இரத்த மற்றும் திருமண உறவுகள் வழியாகவே உறுதி செய்யப்படுகின்றன. இறையாட்சி உறவு நம்மை மற்றவர்களோடு இணைக்கிறது.

இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு மூன்று பாடங்களைத் தருகின்றது:

(அ) இயேசுவிடம் பேசிய அந்த நபரைப் போல, மற்றவர்களை அடையாளம் கண்டு இயேசுவிடம் என்னால் சொல்ல முடிகிறதா? நான் ஏன் தயக்கம் காட்டுகிறேன்?

(ஆ) இறைத்திருவுளம் நிறைவேற்றுவதே இறையாட்சி உறவுக்கான நுழைவாயில்.

(இ) இறையாட்சி உறவில் இணையும் நான் ஒருவர் மற்றவரிடமிருந்து வேறுபாடு பாராட்டுதல் தவறு.

முதல் வாசகத்தில், இறைவாக்கினர் மீக்கா, ஆண்டவராகிய கடவுள் மக்களின் பாவங்களை ஆழ்கடலில் தூக்கி எறிந்துவிட்டதாக மொழிகின்றார். ஆண்டவரின் இரக்கப் பெருக்கத்தை இஸ்ரயேல் மக்கள் உணர்ந்தனர். ஆண்டவருக்கும் அவர்களுக்கும் இருந்தது இரத்த உறவோ, திருமண உறவோ அல்ல. மாறாக, இறையாட்சி உறவே.

இரத்த உறவையும் திருமண உறவையும் பிடித்துக்கொண்டிருப்பவர்கள் வெளியேதான் நிற்க வேண்டும். அல்லது வெளியே நிற்கும் வரை நாம் இரத்த மற்றும் திருமண உறவுகளையே பிடித்துக்கொண்டிருக்கின்றோம்.

உள்ளே நுழையும்போது இயேசுவுடன் இறையாட்சி உறவுக்குள் நுழைகின்றோம். 


No comments:

Post a Comment