Friday, September 17, 2021

நல்ல நிலமாக

இன்றைய (18 செப்டம்பர் 2021) நற்செய்தி (லூக் 8:4-15)

நல்ல நிலமாக

இன்றைய நற்செய்தி வாசகம் மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளது: (அ) விதைப்பவர் பற்றிய உவமை, (ஆ) உவமைகள் கூறப்படுவதன் நோக்கம், மற்றும் (இ) இயேசு உவமைக்குப் பொருள் தருதல்.

'இறைவார்த்தை' என்பதை நாம் மூன்று நிலைகளில் புரிந்துகொள்ளலாம்: ஒன்று, 'இறைவார்த்தை' என்பது இயேசுவைக் குறிக்கிறது. ஏனெனில், 'வார்த்தை மனுவுருவானார். நம்மிடையே குடிகொண்டார்' (யோவா 1:14), என்று நம் நடுவே இறங்கி வந்தவர் இயேசு. இயேசுவே இறைவனின் வார்த்தை. இரண்டு, 'இறைவன் சொன்ன வார்த்தை' அல்லது 'இயேசுவின் வார்த்தை அல்லது நற்செய்தி.' இவை இயேசுவின் காலத்தவர்களின் காதுகளில் நேரடியாக அவர் வாயிலிருந்து விழுந்தன. இயேசுவைத் தொடர்ந்த காலத்தில் இவை திருத்தூதர்களால் அறிவிக்கப்பட்டன. நமக்கு இவை விவிலியம் வழியாக வருகின்றன. இறைவார்த்தை பற்றிய விளக்கவுரைகள் மற்றும் மறையுரைகள் வழியாக வருகின்றன. மூன்று, 'இறைவார்த்தை' என்பது இயேசுவின்மேல் ஒருவர் கொண்டிருக்கின்ற நம்பிக்கையைக் குறிக்கிறது. இது அன்றைய காலத்தவர்களுக்கும் நமக்கும் பொருந்தும். எடுத்துக்காட்டாக, பாறை நிலம் போல இருப்பவர்கள் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கை கொண்டவுடன் உடனடியாக தங்கள் வாழ்க்கையை மாற்றுவர், ஆலயம் வருவர், திருப்பலி காண்பர். ஆனால், நம்பிக்கை சோதிக்கப்படும்போது அவர்கள் தங்கள் பழைய வாழ்க்கைக்குத் திரும்பிவிடுவர்.

மனித வார்த்தைகள் நம்மில் மாற்றம் கொண்டு வருகின்றன என்பதில் ஐயமில்லை. மனம் சோர்வுற்று நிற்கும் வேளையில் திடீரென நண்பர் ஒருவர் அழைக்க அவர் பேசும் உற்சாக வார்த்தைகள் நம் உள்ளத்திற்கு எழுச்சி தருகின்றன. அல்லது நாம் கேட்கும் பாடல், வாசிக்கும் புத்தகம் என இவற்றில் நாம் கேட்கும் அல்லது காணும் வார்த்தைகள் ஏதோ ஒரு சலனத்தை உள்ளத்தில் ஏற்படுத்தவே செய்கின்றன.

'ஆண்டவர் என் ஆயர். எனக்கேதும் குறையில்லை' (திபா 23:1) என்னும் இறைவார்த்தையை நான் கேட்கிறேன் என வைத்துக்கொள்வோம். இது என் வாழ்வில் எப்படி பயன் தரும்? 'ஆண்டவரை என் ஆயர் போல ஏற்றுக்கொள்வதன் வழியாகவும், அவரையே என் நிறைவு எனக் கொண்டு வாழ்வதன் வழியாகவும் பயன் தரும்.'

நல்ல நிலத்தில் விழுந்த விதைகள் நூறு மடங்கு பலன் கொடுத்ததாக லூக்கா எழுதுகின்றார். மேலும், பலன் கொடுப்பதற்கான மூன்று படிகளையும் அவரே முன்மொழிகின்றார்: (அ) நல் உள்ளத்தோடு கேட்டல், (ஆ) கேட்டதைக் காத்தல், (இ) மனவுறுதியுடன் இருத்தல்.

மேற்காணும் உதாரணத்தையே எடுத்துக்கொள்வோம்.

'ஆண்டவரே என் ஆயர்' என்பதை நான் நல் உள்ளத்தோடு, அதாவது, திறந்த மனத்தோடு, கேட்கிறேன். கேட்டல் என்பது கீழ்ப்படிதலையும் குறிப்பதால், ஆண்டவரை என் ஆயராக நான் ஏற்றுக் கீழ்ப்படிகிறேன். தொடர்ந்து, நான் கேட்டதைக் காத்துக்கொள்கின்றேன். நான் பார்க்கும் வேலை, அல்லது என் நண்பர் போன்றவை தங்களையே 'ஆயர்' என முன்மொழிந்தாலும், நான் அவற்றை மறுத்துவிட்டு ஆண்டவரையே பற்றிக்கொள்கின்றேன். மூன்றாவதாக, நான் பற்றிக்கொண்டதில் மனவுறுதியாக இருக்கின்றேன்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த உவமை தருகின்ற செய்தி இதுதான்: விதை ஒருபோதும் நிலத்தின் தன்மையை மாற்றுவதில்லை. நிலம் தான் எப்படி இருக்கிறோம் என்பதை தானே வரையறுத்துக்கொள்ள முடியும். விதைப்பவரும் நிலத்தின் தன்மையை மாற்றுவதில்லை. கடவுள் நம் தனிமனித விருப்புரிமையை, ஆன்மிகக் கட்டின்மையை மதிக்கின்றார். நான் என்னையே மாற்றிக்கொள்வதன் வழியாக விதையை ஏற்றுக் கனி தர முடியும்.

இன்றைய முதல் வாசகத்தில், தன் மகன் திமொத்தேயுவிடம், 'எந்தவிதக் குறைச்சொல்லுக்கும் ஆளாகாமல் நம்பிக்கையைக் காத்து வா!' எனக் கட்டளையிடுகின்றார்.

கேட்டு, காத்து, மனவுறுதியுடன் இருக்கின்ற திமொத்தேயு நிறையவே பலன் தருகின்றார்.

2 comments:

  1. விதைப்பவன் உவமை! இப்போதெல்லாம் இந்த உவமை பற்றிப் பேசப்படுகையில் விதைக்கப்படும் நிலத்திற்கும், விதைக்கும் சேர்த்தே முக்கியத்துவம் தரப்படுகிறது. “நானாகிய” நிலம் பதப்பட்டு இருந்தால் மட்டுமே என்னில் விதைக்கப்படும் “இறைவார்த்தை” எனும் விதைகள் பலன் தரமுடியும் என்று சொல்ல வருகின்றன இன்றைய வாசகங்கள்! கடவுள் நம் தனிமனித உரிமையை விரும்புவதால்…மதிப்பதால் நிலமாகிய நம்மனத்தை மாற்றுவதில்லை…அதன் மேல் கைவைப்பதில்லை. என் மனத்தை( நிலத்தை) பண்படுத்தி வைத்திருப்பதன் மூலமே விதையை எனதாக ஏற்கவும்; ஏற்றுக்கனி தரவும் முடியும்!
    மேலேயிருந்து வருகின்ற இறைவார்த்தைகளைக் கேட்டு… காத்து….மனவுறுதியுடன் வாழ்ந்து சென்ற திமோத்தேயு போன்றவர்கள் நமக்கு முன்னுதாரணமாய் இருக்கிறார்கள்! நல் விதைகளை விதைத்த தந்தைக்கு நன்றிகள்!!!

    ReplyDelete
  2. நல்ல நிலமாக நான் மாற இறைவன் அருள் வேண்டி நிற்கும்……

    ReplyDelete