Tuesday, September 14, 2021

மரியின் ஏழு துயரங்கள்

இன்றைய (15 செப்டம்பர் 2021) திருநாள்

மரியின் ஏழு துயரங்கள்

இன்று நாம் அன்னை கன்னி மரியாவின் ஏழு துயரங்களை நினைவுகூருகின்றோம். கிபி 1232ஆம் ஆண்டில் தொஸ்கானா பகுதியின் ஏழு இளவல்கள் ('மரியின் ஊழியர்கள்') தங்களுடைய 'மரியின் ஊழியர் சபையை' தோற்றுவித்தனர். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், மரியின் ஏழு துயரங்களை நினைவுகூர்ந்தவர்களாக, சிலுவையின் அடியில் நிற்கின்ற அன்னை கன்னி மரியாவைத் தங்களுடைய பாதுகாவலியாக ஏற்றுக்கொண்டனர். ஏழு துயரங்களின் செபமாலை, ஏழு துயரங்களின் உத்தரியம், துயர்மிகு அல்லது வியாகுல அன்னைக்கான நவநாள் போன்ற பக்தி முயற்சிகளையும் இவர்கள் தோற்றுவித்தனர்

1913ஆம் ஆண்டு திருத்தந்தை பத்தாம் பயஸ் இத்திருவிழாவை செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி, அதாவது, திருச்சிலுவை மகிமையின் திருவிழாவுக்கு அடுத்த நாள் கொண்டாடுமாறு வழிபாட்டு ஆண்டை நெறிப்படுத்தினார்

மரியின் ஏழு துயரங்களாக திருஅவை பின்வருவனவற்றை முன்மொழிகின்றது: (1) சிமியோனின் இறைவாக்கு, (2) எகிப்துக்குத் தப்பி ஓடுதல், (3) இளவல் இயேசு எருசலேம் ஆலயத்தில் காணாமற்போதல், (4) சிலுவைப் பாதையில் இயேசுவைச் சந்தித்தல், (5) இயேசு சிலுவையில் அறையப்படுதல், (6) இறந்த இயேசுவைத் தன் மடியில் வளர்த்தல், மற்றும் (7) இயேசுவின் அடக்கம்.

இத்திருவிழா நமக்குத் தருகின்ற செய்தி என்ன?

(அ) துன்பம் ஒரு வாழ்வியல் எதார்த்தம்

குழந்தை இயேசுவை எருசலேம் ஆலயத்தில் காணிக்கையாகக் கொடுக்கும் நிகழ்வில் சிமியோன் மரியாவைப் பார்த்து, 'இதோ, இக்குழந்தை இஸ்ரயேல் மக்களுள் பலரின் வீழ்ச்சிக்கும் எழுச்சிக்கும் காரணமாக இருக்கும். எதிர்க்கப்படும் அடையாளமாகவும் இருக்கும் ... உமது உள்ளத்தையும் ஒரு வாள் ஊடுருவிப் பாயும்' என்கிறார் (காண். லூக் 2:34). சிமியோனின் வார்த்தைகளின் தொனியை வைத்துப் பார்க்கும் போது, 'இருந்தாலும் ... உம் உள்ளத்தை ஒரு வாள் ஊடுருவும்' என்று அவர் சொல்வது போல இருக்கிறது. அதாவது, 'நீ மீட்பரின் தாயாக இருந்தாலும் துன்பம் உனக்கும் இருக்கும்!' பாவத்தின் வழியாகவே துன்பம் வருகின்றது என்று நாம் தொடக்கநூலில் பார்க்கின்றோம். ஆனால், பாவம் அறியாத மரியா துன்பம் ஏற்கின்றார். ஆன்மிக நிலையில் அவர் பாவத்திலிருந்து விடுதலை பெற்றவர் என்றாலும், மனித வாழ்வின் எதார்த்த நிலையில் அவர் துன்பங்களை அனுபவிக்கின்றார். ஆக, துன்பம் ஒரு வாழ்வியல் எதார்த்தம். இயேசுவின் துன்பம் நம் பாவங்களுக்காக என்று பல நேரங்களில் நாம் இறையியலாக்கம் செய்கின்றோம். ஆனால், மரியாவின் துன்பங்களை நாம் அப்படி இறையியலாக்கம் செய்வதில்லை. மரியா இயேசுவுக்காகவோ, அல்லது நமக்காகவோ துன்புற்றார். அவ்வளவுதான்! அதுதான் எதார்த்தம். பிள்ளைகள் பெற்றோர்களுக்காக, பெற்றோர்கள் பிள்ளைகளுக்காக, ஆசிரியர்கள் மாணவர்களுக்காக, கணவன் மனைவிக்காக, மனைவி கணவனுக்காக துன்பங்கள் அனுபவிப்பதாக நாம் சொல்வது அனைத்தும் தவறு. நாம் யாரும் யாருக்காகவும் துன்பங்கள் அனுபவிக்க முடியாது. நாம் துன்பங்கள் அனுபவிக்கிறோம்! அவ்வளவுதான். இப்படிப்பட்ட ஒரு புரிதல் வந்தால்தான் நாம் துன்பத்திற்கு ஆன்மிக அல்லது அறநெறிச்சாயம் பூசுவதை நிறுத்துவோம்.

(ஆ) துன்பம் ஒரு மேலான உணர்வு

'சிரிப்பை விடத் துயரமே நல்லது. துயரத்தால் முகத்தில் வருத்தம் தோன்றலாம். ஆனால், அது உள்ளத்தைப் பண்படுத்தும்' என்கிறார் சபை உரையாளர் (காண். சஉ 7:3). துன்புறுதல் என்பது செயல். துயரம் அல்லது துன்பம் என்பது ஓர் உணர்வு. எடுத்துக்காட்டாக, நான் வழியில் செல்லும்போது கால் பிசகிவிட்டது என வைத்துக்கொள்வோம். அப்போது நான் துன்புறுகிறேன். கால் சரியாகிவிட்டால் துன்பம் மறைந்துவிடுகின்றது. ஆக, துன்பம் அல்லது துயரம் என்பது துன்புறுதல் என்னும் செயல் இருக்கும் வரை இருக்கின்றது. என் அப்பா இறந்தபோது நான் துன்பமுற்றேன். ஆனால், அவரின் இழப்பு அப்படியே ஒரு துயரமாக என் மனத்தில் படிந்துவிடுகிறது. துன்பமுறுதல் என்னும் செயல் ஒரு நாளில் முடிந்தாலும் அது உணர்வாக இன்றுவரை நீடிக்கிறது. மரியாவின் துயரம் நமக்கு இத்தகைய உணர்வைத்தான் சொல்கிறது. துயரம் என்பது ஓர் உணர்வு. இந்த உணர்வு உள்ளத்தைப் பண்படுத்தும் அல்லது உழும். அதாவது, உழும்போது நிலத்தில் கீறல் விழுகிறது. ஆனால், அந்தக் கீறல் வழியாகவே நிலம் புதிய காற்றைச் சுவாசிக்கின்றது. விதையையும், உரத்தையும், நீரையும் தன்னகத்தே எடுத்துக்கொள்கிறது. நாம் துன்புறும்போதும் உள்ளத்தில் கீறல் விழுகிறது. ஆனால், அந்தக் கீறல் வழியாகவே நாம் புதிய அனுபவங்களை உள் வாங்குகிறோம். அந்தக் கீறல் வழியாகவே நாம் நம்மையே முழுமையாகப் பார்க்கின்றோம். ஆதாம்-ஏவாள் என்னும் நம் முதற்பெற்றோர் இன்பத் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னரே, ஆதாம் தன் மனைவி ஏவாளுக்கு, 'தாய்' என்ற பெயரைக் கொடுக்கின்றார். அதாவது, காயினைப் பெற்றெடுக்கும் முன்னரே ஏவாள் 'தாய்' என்னும் பெயர் பெறுகிறாள். துன்பம் ஏற்கும் எவரும் வாழ்வின் அடுத்த நிலைக்கு உயர்கின்றனர்.

(இ) துன்பம் என்பது நினைவு

நம் நினைவுகளே துன்பமாக மாறுகின்றன என்று இந்திய மெய்யியல் கற்பிக்கின்றது. எடுத்துக்காட்டாக, நம் சுண்டு விரல். இது என்றாவது நம் நினைவுக்கு வருகிறதா? ஆனால், கதவுக்கு இடையில் அதைக் கொடுத்து நாம் நசுக்கிவிட்டால், அது எந்நேரமும் நம் நினைவில் நிற்கிறது. ஆக, துன்பம் என்ற உணர்வு மட்டுமே நம் நினைவில் நிற்கிறது. நான் அணியும் செருப்பு என் காலுடன் பொருந்திவிட்டால் அதை நான் நினைப்பதே இல்லை. அது பொருந்தவில்லை என்றால் அது எப்போதும் என் நினைவில் இருக்கிறது. ஏனெனில், அது எனக்கு வலியைக் கொடுத்துக்கொண்டே இருக்கிறது. ஆக, பொருந்துகின்ற ஒன்று வலி தருவதில்லை. வலி தராத ஒன்று நம் நினைவில் நிற்பதில்லை. துயரப்படுகிறவர்கள் மது அருந்தக் காரணம் என்ன? அல்லது வாழ்வில் இழப்பை அனுபவிப்பவர்கள் புதிய இடங்களுக்கு மாறிச் செல்லக் காரணம் என்ன? தங்களுடைய நினைவுகளை மறக்கவும் மாற்றவும்தான்

அன்னை கன்னி மரியாவின் ஏழு துயரங்களை நாம் வெறுமனே போற்றிப் புகழ்ந்து அவரை அந்நியப்படுத்திவிட வேண்டாம். அவை வெறும் மறையுரைக் கருத்துகள் அல்ல. மாறாக, அவர்கள் நகர்ந்து வந்த வாழ்க்கைப் பாதைகள்

நம் உள்ளத்தை, உடலை, நினைவை பல வாள்கள் அன்றாடம் ஊடுருவிக் கொண்டே இருக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பிடுங்கி எறிந்துவிட்டும், சிலவற்றுக்கு மருந்திட்டும், சில வாள்களை அப்படியே தூக்கிக்கொண்டும், சில வாள்களைப் பிடுங்கும்போது பாதி வாள் உடைந்தும் பாதி வாள் இன்னும் நம் உடலில் மாட்டிக்கொண்டும், காயத்தின் ரணங்களோடு நாம் நடந்துகொண்டே இருக்கின்றோம். துன்பமும் இன்பமும் மாறி மாறி வரக் கூடிய எதார்த்தங்கள். ஆனால், துன்பமே நீடித்த, உண்மையான எதார்;த்தம். எனக்கு ருசியாக இருந்து எனக்கு இன்பம் தரும் உணவு அஜீரணமாக மாறினால் துன்பம் வந்துவிடுகிறது. பசி என்னும் துன்பம் நான் உணவு உண்டவுடன் மறைந்துவிடுகிறது.

இன்பம் தருகின்ற ஒன்று கண்டிப்பாகத் துன்பமாக மாறும்.

துன்பம் தருகின்ற ஒன்று துன்பமாகவே நீடிக்கிறது. இன்பத்திற்குப் பின்னரும்!


2 comments:

  1. மரியின் ஊழியர் சபை…தோற்றம் கண்டவுடன் மரியாவின் ஏழு துயரங்கள் வெளிச்சத்திற்கு வருகின்றன. ஏழு துயரங்களையும் பட்டியலிட்டுள்ள தந்தை இதில் எது பெரியது…எது சிறியது என்பதைச் சுட்டிக்காட்ட வில்லை.காரணம் ஏழு முட்கள் நம் உடலைப் பதம் பார்க்கையில் எதற்கு வலி அதிகம்…எதற்குக் குறைவு என எப்படிக்கூற முடியும்? எல்லா முட்களுமே போட்டி போட்டுக்கொண்டு அன்னையின் உள்ளத்தைக் கிழித்துள்ளன என்பதே உண்மை! அது விண்ணையும்,மண்ணையும் படைத்த ஆண்டவனின் தாயாக, அவள் கொடுத்த விலையன்றி வேறென்ன?
    மரியாளின் துயரங்கள் நமக்குச் சொல்வது என்ன? “எந்த வலியையும் ஒரு வாழ்வியல் எதார்த்தமாகப் பார்ப்பதும், அது ஒரு மேலான உணர்வு என எடுத்துக் கொள்வதுமே நம் துயரத்தின் வலி குறைக்கும் வழி” என எடுத்து வைக்கிறது இன்றையப் பதிவு.
    இன்பத்தை ஏற்றுக்கொள்ளும் இதயம் துன்பத்தையும் ஏற்றுக்கொள்ளப் பக்குவப்பட வேண்டுமென்பதும்…..இவை இரண்டும் சேர்ந்த கலவைதான் நம் பிறப்பிற்கும், வாழ்க்கைக்கும் அர்த்தம் தரும் என்பதையும் நம் அன்னையிடமிருந்து கற்றுக்கொள்வோம்! தந்தைக்கும்…வாசகர்கள் அனைவருக்கும் அன்னையின் திருநாள் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete