Sunday, December 2, 2018

புனித சவேரியார்

இன்றைய (3 டிசம்பர் 2018) திருநாள்

புனித சவேரியார்

தென்மாவட்டக் கடற்கரைப் பகுதிகளில் 'பெரிய தகப்பன்' என்று அன்போடு அறியப்படும் புனித பிரான்சிஸ் சவேரியாரின் திருநாளை நாம் இங்கு கொண்டாடுகிறோம். ஏப்ரல் 7, 1506ல் ஸ்பெயின் நாட்டில் பிறந்து, 1530 முதல் 1534 வரை விரிவுரையாளராகப் பணிபுரிந்தபோது, புனித இஞ்ஞாசியார் மேற்கோள் காட்டிய நற்செய்தி வார்த்தைகளை - 'ஒருவர் உலகமெல்லாம் ஆதாயமாக்கிக் கொண்டாலும் அவர் தன் ஆன்மாவை இழப்பாராகில் அதனால் அவருக்கு வரும் பயன் என்ன? - கேட்டு, மனம் மாறி, தன் பணியைத் துறந்துவிட்டு, இயேசு சபையின் அருள்பணியாளராக மாறி, ஆப்பிரிக்கா, ஆசியா கடற்கரைகளில் நற்செய்திப் பணி செய்து டிசம்பர் 3, 1552 அன்று இறந்தார்.

ஏறக்குறைய 38000 கடல் மைல்கள் பயணம் செய்துள்ளார் இவர். புதிய மொழி, புதிய பண்பாடு, புதிய கலாச்சாரம், புதிய உணவுப்பழக்கம் என அனைத்தோடும் தன்னை ஒன்றிணைத்துக்கொண்டார். அதற்கு ஒரே காரணம் இவர் நம்பிய இயேசு கிறிஸ்து ஒருவரே.

இவருடைய நல்லுடல் இன்றும் அழியாமல் கோவாவில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுல் நற்செய்தி அறிவிக்க தான் கொண்டுள்ள பொறுப்பு பற்றி கொரிந்து நகரத் திருச்சபைக்கு எழுதுகின்றார்.

'எனக்குக் கைம்மாறு என்ன? உங்களுக்கு எச்செலவுமின்றி நற்செய்தியை அறிவிப்பதிலுள்ள மனநிறைவே அக்கைம்மாறு ... எப்படியாவது ஒரு சிலரையேனும் மீட்கும்படி நான் எல்லாருக்கும் எல்லாமானேன்' (காண். 1 கொரி 9:16-19,22-23)

பவுலின் வார்த்தைகளில் இரண்டு விடயங்களில் முக்கிமாகத் தெரிகின்றன:

அ. நற்செய்தி அறிவிப்பதிலுள்ள மனநிறைவு

வழக்கமாக நாம் நன்றாகச் சாப்பிட்டால், நல்ல நண்பர் ஒருவரைப் பார்த்தால், நல்ல திரைப்படம் ஒன்று பார்த்தால், நல்ல புத்தகம் ஒன்று படித்தால் நம் மனம் ஒருவித நிறைவு கொள்கிறது. ஆனால், பவுலுக்கு இவை எல்லாம் நிறைவு தருவதாகத் தெரிவதில்லை. 'நற்செய்தி அறிவிப்பதிலுள்ள மனநிறைவு' - கடலில் புயலில் பயணம் செய்து, சாலைகளில் நடந்து, பல துன்பங்களை எதிர்கொண்டு, பசியோடும், தாகத்தோடும் இருந்து கொண்டு, நற்செய்தி அறிவித்த பவுலுக்கு சோர்வு வரவில்லை. ஆனால், மனநிறைவு வருகிறது. எப்படி? நற்செய்தி அறிவிக்கப்பட்டவுடன் அது அதைக் கேட்பவரின் மனத்தில் மாற்றத்தைக் கொண்டுவருகிறது. அதை நினைக்கும்போதுதான் பவுல் மனநிறைவு கொள்கிறார். ஒரு தாய் போல. தான் பசியாக இருந்தாலும் தன் குழந்தைக்கு உணவு கொடுத்தவுடன், அதன் முகத்தில் தெரியும் புன்முறுவல் தாய்க்கு நிறைவு தருகிறது. தான் சோர்வாக இருந்தாலும் தன் வகுப்பில் இருக்கும் மாணவ, மாணவியர் அறிவு பெருகிறார்கள் என்ற எண்ணம் ஆசிரியருக்கு நிறைவு தருகிறது. இவ்வாறாக, தன் குறைவிலும் அடுத்தவரின் நிறைவு கண்டு நிறைவு அடைகிறார் பவுல்.

ஆ. எல்லாருக்கும் எல்லாம் ஆனேன்

'நான் என் வாழ்வில் இப்படித்தான் இருப்பேன்' என்று தனக்கென கொள்கை வரைவுகளையும், வரையறைகளையும் வைத்தக்கொண்டு வாழ்ந்து வலம் வந்த புனித பவுல், ஒரு கட்டத்தில், கிறிஸ்துவை அறிவிக்க அவை தடையாக இருக்கக் கண்டு, 'எல்லாருக்கும் எல்லாம் ஆக' துணிகின்றார்.

புனித சவேரியாரிலும் நாம் மேற்காணும் இந்த இரண்டு விடயங்களையும் பார்க்கிறோம்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில், நம்பிக்கை கொண்டோர் செய்யும் அரும் அடையாளங்களைப் பட்டியலிடுகிறார் இயேசு:

'அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்.
புதிய மொழிகளைப் பேசுவர்.
பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர்.
கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்களுக்குத் தீங்கிழைக்காது.
அவர்கள் உடல்நலமற்றோர் மீது கைகளை வைக்க அவர்கள் குணமடைவர்.' (காண். மாற் 16:15-20)

புதிய இடத்தில் மினரல் வாட்டர் குடிச்சாலே நான்கு நாள்களுக்கு தொண்டை கட்டிக்கொள்கிறது. இயேசு சொல்லும் இந்த அரும் அடையாளங்கள் புனித சவேரியார் வாழ்வில் நடந்தன என்று சொல்லலாம்.

'எல்லாவற்றிலும் மேன்மை' - இது ஒன்றே சவேரியாரின் விருதுவாக்காக இருந்தது.

மேன்மையானவற்றை நாடவும், மேன்மையானவற்றை நோக்கி நடக்கவும் சவேரியார் நம்மை உந்தித் தள்ளுவாராக!


2 comments:

  1. " ஒருவர் உலகமெல்லாம் ஆதாயமாக்கிக் கொண்டாலும்,தன் ஆன்மாவை இழந்துவிட்டால் அதனால் பயன் என்ன?" சவேரியார் புனித 'பிரான்சிஸ் சவேரியாராக'த் தேவைப்பட்டது புனித இஞ்ஞாசியாரும், அவருடைய இந்த வார்த்தைகளுமே.நாம் அனைவருமே அன்றாடம் எத்தனையோ பேரைப் பார்க்கிறோம்; எத்தனையோ வார்த்தைகளை அடுக்குகிறோம்.என்றேனும் நம் வார்த்தைகள் யார் மனத்தையாவது புரட்டிப்போட்டுள்ளதா? எல்லோர் மனத்திலும் ஒரு தீ கன்ன்றுகொண்டேதான் இருக்கிறது.அதைக் கொழுந்துவிட்டு எரியச் செய்யும் பிழம்பாக மாற்ற ...நம்மிடம் வரும் சவேரியார்களுக்கு நாமும் ஒரு இஞ்ஞாசியாராக மாறலாமே! மேன்மையானவற்றை நாடவும்,மேன்மையானவற்றை நோக்கி நடக்கவும் இந்தப் " பெரிய தகப்பன்" நம்மை உந்தித்தள்ளுவாராக!!! அனைவருக்கும் திருவிழா வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete